Suryaa's Blog

கனவு – சூர்யா பாலகுமாரன்

pic courtesy: Ellkesne https://www.instagram.com/ellkesne/

கனவுகள் மிகவும் வினோதமான ஒரு விஷயம். நல்ல கனவு, கெட்ட கனவு, திகில் கனவு, யானை, பாம்பு, கோவில், என்று  ஆச்சர்யங்கள் ஏராளமாக விரிந்து கிடக்கும் உலகம் அது. சில கனவுகள் வெடுக்கென்று எழுந்துகொள்ள வைக்கும், சில கனவுகள் எத்தனை யோசித்துப்பார்த்தாலும் நினைவுக்கு வராது. சில கனவுகளை நாமே அசைபோட்டு மேலும் நகர்த்த முயர்ச்சிப்போம். சில கனவுகள் வெட்கப்படவைக்கும், சில கனவுகள் சிரிக்கவைக்கும்.  நம்முடைய தினப்படி வேலை, எண்ண ஓட்டம், சிந்தனை, கவனம் அனைத்தும் ஒரு சில பொருட்கள் மீதோ ஆட்கள் மீதோ செயலின் மீதோ அதிகப்படியாக வைத்திருந்தாலோ அல்லது வெறும் சில வினாடிகள் மிகவும் உன்னிப்பாக கவனித்திருந்தாலோ அது கனவுகளாக வெளிப்படக்கூடும் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பலருக்கு கனவு என்பது ஒரு செய்தி. நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தி நம்மிடம் இன்னும் வெளிப்படையாக உரையாடுவதற்கு கிடைத்த வழியே  கனவுகள் என்று நம்புகிறவன் நான். 

கனவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த கோர்வையற்ற திரைக்கதை, முகம் தெரியாத ஆட்கள், அவர்களின் பழக்கப்பட்ட குரல், ஸ்வாரஸ்யமான நடை, பேசவே முடியாதவன் பேசும் ஆச்சர்யம், தமிழ் பேசும் டொனால்ட் ட்ரம்ப் சிரித்தபடி தத்துவம் பேசும் ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் என்று அடக்கமுடியாத கற்பனை வெள்ளம் .  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைக் கனவுகள் பலமுறை என்னை அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறது. சில சமயம் வழி நடத்தவும் செய்திருக்கிறது.  

2024 ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு பலவித கேள்விகளுடன்  நான் உறங்கச்சென்றேன். உடம்பிற்கு மட்டுமே அசதி, மூளை சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. எத்தனை அதட்டியும் உறங்குவதற்கு சில மணி நேரம் ஆனது. இமை மூடியிருந்தாலும் ஏதோ ஒரு வெளிச்சம் வந்துவந்து போனது. தூக்கம் வரவில்லையென்றால் கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் மந்திர ஜபம் செய்யும் பழக்கம் எனக்கு உண்டு. பிள்ளைகளின் கூச்சல்கள், அடுத்த அறையில் சத்தமாக ஒலிக்கும் டிவி, என்னேரமும் சிணுங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் மொபைல் ஃபோன் என்று எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத அமைதியான நேரம் என்பதால் இன்னும் உண்ணிப்பாக மந்திர ஒலிகளை கவனிக்க முடியும். கண்களை மூடி மந்திரத்தை முணுமுணுக்க 30 வினாடிகளில் நான் எங்கோ தொலைந்து போனேன். இந்த உலகத்திலுள்ள அனைத்து பிடிப்புகளும் உறவுகளும் உணர்ச்சிகளும் என்னிடமிருந்து அமைதியாக எந்தவித பொல்லாப்புமின்றி தளர்ந்து போனது. அதே நேரத்தில் வேறு ஒரு உலகத்தில் உயிர்ப்புடன் நான் இயங்கத்துவங்கினேன். 

நானும் கௌரியும் இரவு நேரம் மிகவும் அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். ஆட்டோ பயணம் ஒரு ரயில் நிலையத்தை நோக்கி நீண்டு கொண்டிருக்கிறது. எங்களுக்கு மட்டுமே அவசரம் ஆட்டோ பொறுமையாகத்தான் செல்கிறது. 10 அடி அகலமுள்ள ஒரு குறுகிய சந்து. ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. மங்கிய மஞ்சள் தெருவிளக்கின் உதவியால்  லேசாக கண்களுக்கு புலப்படும் சின்ன சந்து. சந்தின் முடிவில் ஒரு ரயில் நிலையப் படிகட்டு. அதுவும் காலியாகேவ இருக்கிறது. பேச்சுவார்த்தை எதுவுமில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் படிக்கட்டு ஏறத் துவங்கிவிட்டோம். இருட்டான நடைப்பாலம் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்க திடீரென்று அடுத்த சந்து திரும்ப வேண்டிய கட்டாயம். திரும்பியவுடன் கஜகஜ என்று இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு மார்க்கெட். கண்ணில் பட்ட அடுத்த க்‌ஷணம் அது மஹராஷ்ட்ரா, மும்பை என்று உள் மனது சொல்லியது. மும்பையில் எந்த இடம்ச்என்று தெரியவில்லை. அப்படியொரு அடர்ந்த கூட்டம். ஆனால் நிச்சயமாக நான் அந்த ரயில் நிலைய படிக்கட்டுக்ளையோ நடைமேடையோ மார்கெட்டையோ பார்த்தேதயில்லை. வடக்கர்கள் கூட்டம் மட்டும் அதை நிச்சயம் வெளி மாநிலம் என்று கடைக்கு கடை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேயிருந்தது.

இரவு நேரம், காலியான, மங்கிய மஞ்சள் நிற ஒளியில் இருக்கும் ரயில் நிலையப்படிக்கட்டுகளுக்கு பின்னால் இந்த அளவிற்கு கூட்ட நெரிசலுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஊர் இருப்பது கனவில் மட்டுமே சாத்தியம்.  புடைவ. சுற்றிலும் புடைவ புடைவ புடைவ. உள்ளே நுழைந்ததும் கூவிக் கூவி விற்கிறார்கள். ஒரு இஸ்லாமிய வியாபாரி நன்றாக மடிந்து அரை சம்மனமிட்டு ஒரு கருப்பு புடைவை கையில் ஏந்தியபடி விவரிக்கிறார். அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல நினைக்க சுற்றிவிடப்பட்டு மீண்டும் அவரிடமே  வந்து நிற்கிறோம். கனவுகளில் ஆட்களைக் கடப்பது எளிதல்ல போலும். அவர் அந்த புடவைய பிரித்துக் காண்பிக்காமல் இரண்டு கையால் இழுத்து காண்பிக்கிறார். கௌரி அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தலையாட்டிவிட்டு செல்ல நானும் அவளைப் பின் தொடர்கிறேன். மீண்டும் கூட்டம். பரிச்சயமேயில்லாத ஒரு கூட்டம்.

கூட்டத்துடன் கூட்டமாக எங்கே செல்கின்றோம் என்கிற மனக்கேள்விக்கு மனேத பதில் சொன்னது.

கோவில்.

வீடுதான் ஆனாலும் ஒரு கோட்டைகுள்ளே நுழைவது போல ஒரு பிரமை. குறுகிய படிக்கட்டுகள், எக்கச்சக்க மரக்கதவுகள், சுமார் நூறு மரக்கதவுகளாவது தாண்டி வந்திருக்க வேண்டும். நம் ஊர் கருங்கல் சுவர் இல்லை. நீல நிற மதில்கள் அதே நிற மரக்கதவுகள். வரிசயில் கதவுகளை கடக்கக் கடக்க கூட்டம் மெதுவாகக் குறைகிறது. ஆங்காங்கே தலையில் முக்காடு அணிந்திருக்கும் திலகமிட்ட பெண்கள் சரியான கதவுகளுக்கு வழி நடத்துகிறார்கள். 

கூட்டம் குறையக் குறைய கதவுகள் அதிகமாகிறது. கதவுகள் அதிகமாக ஒரு அறைக்குள் மற்றொரு அறை அதற்குள் மற்றொரு அறை என்று நடந்து கொண்டே இருக்கிறோம்.  சிவப்பு கூங்கட் அணிந்திருந்த திலகமிட்ட பெண் எங்களைப் பார்த்து சிரித்த படி இவ்வளவு தூரம் வந்து விட்டீர்களா என்று ஆச்சர்யமாக சிரிக்கிறாள். பேச்சில்லை . அவள் சிரிப்புக்கு அதுதான் அர்த்தம் என்று புரிகிறது. கூட்டம் குறைந்து இரண்டே பேராக நானும் கௌரியும் மட்டும் இத்தனை தூரம் வந்ததற்கு ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கிறது என்று அப்போது தான் புரிகிறது.

திலகமிட்ட பெண் சிரித்தபடி ஒரு திசை நோக்கி கை காண்பிக்க அங்கு ஒரு வெளிச்சமான இடம் தெண்படுகிறது. ஆனால்  மறைவாக இருப்பதற்காக  வெள்ளைத்துணியால் திரையிடப்பட்டிருகிறது. கீழே ஒரு ஆள் குனிந்து செல்வதற்கான இடம் மட்டும் விடப்பட்டிருக்கிறது. அந்த துவாரத்தின் அருகே யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தால் யாரென்று தெரிந்து விடும்.

கௌரி முதல் ஆளாக திரைக்கு கீழே செல்ல ஆயத்தமானாள். என்னிடம் கிளம்புகிறேன் என்று கூட

சொல்லிக்கொள்ளவில்லை. அவளுக்கு அது அத்துப்பிடியான இடம் நடப்பதெல்லாம் பழக்கப்பட்ட விஷயெமன்று ஆரம்பித்திலிருந்தே அவள்  நடையில் தெரிந்திருந்தது. கீழே மண்டியிட்டபடி உட்கார்ந்து கொண்டு  லாவகமாக உள்ளே  சென்றாள். துவாரத்தின் அருகே இருப்பவரிடம் எதோ பேசிவிட்டு வெடுக்கென்று  திரைக்கு மறுபக்கம் சென்று கௌரி மறைந்து போனாள். எனக்கு மிகப்பெரிய கலவரம் அந்த நிமிடம் தொற்றிக்கொண்டது.

இது என்ன இடம். ஏன் இந்த இடத்தில் வேறு ஒரு அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. கோவில் என்று தானே உள்ளே நுழைந்தோம். கோவிலின் அமைப்பாய் எங்கும் இல்லையே. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதை கோவில் என்று முழுவதுமாக நம்புகிறார்களே. கௌரி உட்பட. கலவரத்தின் உச்சக்கட்டத்தில் நானும் மண்டியிட்டு திரைக்கு மறுபக்கம் நுழைய தயராகினேன். கண்களை மெதுவாகத் திறந்து எதிர்பக்கம் உள்ள வெளிச்சத்தைப் பார்க்க, எந்தவித முன் அறிவிப்புமின்றி கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அடிவயிற்றிலிருந்து சத்தமாக அழுகை பீறிட்டு எழும்பியது.

துவாரத்தின் உள்ளே நுழைய, வேறு ஒரு சக்தியால் இழுபட்டதுபோல் இருந்தது. இடது பக்கம் நின்றிருக்கிற ஆசாமி கண்களில் பட்டார். வெளேரென்ற எலும்புக்கூடு.

ஆஜானுகபாகுவாக நிமிர்ந்து நிற்கும் எலும்புக்கூடு. உயிர்ப்புடன் என்னை கீழ் நோக்கி பார்த்தது. உள்ளே நுழையும்படி  சமிக்ஞை செய்தது. அதைப்பார்த்தவுடன் அடக்கமுடியாமல் இன்னும் அதிகமாக அழுகை பீறிட்டது.

வாழ்க்கைல நான் எப்படியாவது ஜெயிச்சிடனும்…எப்படியாவது ஜெயிச்சிடனும் என்று விக்கி விக்கி எலும்புக்கூடைப் பார்த்து கதறுகிறேன்.

பாவனைகளை தொலைத்த  எலும்புக்கூடு எந்த சலனமுமின்றி மீண்டும் கை உயர்த்தி உள்ளே செல்லும்படி சமிக்ஞை செய்கிறது. உள்ளே நுழையும் போதே தரையிலிருக்கும் மண்ணை எடுத்து முகத்தில் பூசிக்கொள்கிறேன். எதற்கு என்று தெரியவில்லை.

வெளிச்சத்திற்கு மறுபக்கம் மிகப்பெரிய மைதானாம், கண்களின் முன்னால் விரிவைடகிறது. ஆங்காங்கே கோபுரங்கள், மரங்கள், செடிகொடிகள் காணப்படுகிறது. கண்களைத் துடைத்தபடி சுற்றி தேட ஆரம்பிக்க கௌரி காணவில்லை. இடது பக்கம் திரும்பி வழி தெரிந்தது போல் நடக்க ஆரம்பிக்கிறேன். 

தூரத்திலிருந்து ஜல் ஜல் என்று சதங்கை சத்தம் தாளமாக கேட்கத்துவங்குகிறது. வினாடிக்கு வினாடி சத்தம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது . யாருைடய சதங்கை இத்தனை சத்தமாக இருக்கும் என்று காத்திருக்க, அசுரக் கொம்புகள் பொறித்த வெள்ளிக்கிரீடம் அணிந்தபடி ஒரு கருப்பு உருவம் சற்று இடைவெளிவிட்டு நிற்கிறது, ஆபரணங்கள் அனைத்திலும் வெள்ளி மின்னுகிறது.

மூக்கு முகவாய் சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் உருவமாக ஒரு சராசரி மனிதனின் உயரமாகவே இருந்தது. அவைரக் கடந்தபடி மற்றொருவர் என்னிடம் வந்து நிற்க நான் அவரிடம் யார் அந்த  வெள்ளிக்கிரீடம் என்று கேட்கிறேன். அவர் தான் “அசுரன்” என்று எந்தவித முக்கியத்துவம் இல்லாமல் சாதாரணமாக கூறினார்.

அவர் தான் கடவுளா அவைரத்தான் நான் பார்க்க வந்திருக்கிறேனா என்று கேட்க 

இல்ல இல்ல அவரு கடவுள்  இல்ல….கடவுள் இன்னும் உள்ள இருக்கார் உங்கள கூட்டிட்டு வரச் சொல்லிருக்காரு.அதான் வந்திருக்கேன். என் கூட  வாங்க என்று கூற, நான் அவரை  வினோதமாகப் பார்க்கிறேன்.

அதில் ஏதோ உண்மை இல்லாததுபோல் தோன்ற, அவரின் வேண்டுதலை மறுக்கிறேன். நீ என்ன என்னை  கடவுளிடம்  கூட்டிக்கொண்டு செல்வது. நானே அவர் இருக்கும் இடம் தேடிச் செல்கிறேன் என்று கூறி வழி காட்ட வந்த ஆசாமியிடமிருந்து தப்பித்து நகர்கிறேன்.

இந்த திசையில் தான் கௌரி நிச்சயமாக சென்றிருப்பாள் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் நடக்கதுவங்குகிறேன். உள்ளே நடந்து கொண்டிருக்கும் போது எதிரே ஒரு கண்ணாடியில் என் முகம் தெரிகிறது. முகம் முழுவதும் நீலச் சாயம். எலும்புக்கூடு ஆசாமியுடன் பேசும்போது நானே என் முகத்தில் பூசிக்கொண்டது நீல நிற மண் என்று கண்ணாடியை  பார்த்தவுடன் புரிகிறது.

மீண்டும் எங்கிருந்தோ ஒரு குரல்.

உங்களுக்காக கடவுள் காத்திருக்கிறார் என்று ஒரு முனிவர் பேசியபடி நெருங்கி வருகிறார். நான் அந்த இடத்தில் இப்போது தனியாக இல்லை என்பது மட்டும் என்னால் உணர முடிகிறது. கௌரி இங்கு தான் எங்கோ இருக்கிறாள் என்று மனது சொல்கிறது. மிக அருகிலே நிற்கிறாள் என்று மனது மீண்டும் சொல்கிறது. அருகே  இருப்பவைரப் பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் நான் தனியாக இல்லை என்பது மட்டும் உறுதியாக கூற முடிகிறது.

எதிரே இருக்கும் மற்றொரு கதைவத் திறந்தால் கடவுள் உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்திருப்பார் என்கிற எண்ணத்தோடு நான் மீண்டும் நகர. அந்த முனிவர் என்னை நுழையவிடாமல் தடுக்கிறார். 

சொல்றதுக்கு மறந்துட்டேன், கடவுள பாக்குறதுக்கு முன்னாடி நீங்க குருவினுடைய பாதங்களை பாத்துட்டுதான் உள்ளே போகணும்.

என் மனதில் குருவின் கால் படங்கள் தானாக முன்னால் வந்து நிற்கிறது…

இல்லை, நீங்கள் மனதில் நினத்துக்கொண்டிருப்பது நீல நிற பாதம். அது காளியின் பாதம்… நாங்கள் கூறுவது குருவின் பாதம் என்று ப்ரஸன்னம் பார்த்தது போல் என் மனதில் தோன்றியதைக் கூறுகிறார். 

நான் ஆச்சர்யத்தில் குருவின் பாதங்கைள பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருகிறேன். 

அருகே உள்ள அறையில் கடவுள் இருக்கிறார். எனக்காக காத்திருக்கிறார் என்று தெரிந்தும் கடவுளைக் காக்கவைத்து நான் காத்துக்கொண்டிருக்கிறேன். 

கனவு முடிந்து போனது. ஆனால் மனதில் ஒரு அங்குலம் கூட கலையாமல் இன்னும் அந்த கனவு நிஜமாகேவ இருக்கிறது. காத்திருப்பு எளிதல்ல.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *