
8th c என்னும் போர்ட் என் கண் முன்னால் தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே பயாலஜி வகுப்பு நடந்து அரங்கேறிக்கொண்டிருந்தது . ரொம்பவும் கடினமான ஒரு ஆசிரியயை அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள்.
வகுப்பறையின் வாசலுக்கு வந்து நான் நிற்க எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
உருப்படவே கூடாதுன்னு முடிவெடுத்தா என்ன பன்றது. இதுக்கு உங்க அப்பா சப்போர்ட் வேற. உள்ள வா..என்றதும் முதலில் சத்தியமாக நான் சக்தியை மட்டுமே தேடினேன்.
சக்தியின் அருகில் ஆனந்த் குடியிருந்த கோவிலாக உட்கார்ந்திருக்க, அவன் முகத்தில் கோபம் மட்டும் எம் என் நம்பியாராக மாறியிருந்தது.
சக்தியின் அருகே வந்து நின்று இடத்திற்காக நானும் ஆனந்தை முறைக்க ஒரு சாக் பீஸ் தலையில் நொட்டென்று விழுந்தது.
வாழ்கைல முன்னேறறதா ஐடியாவே இல்லையா.. எப்பவுமே லாஸ்ட் பெஞ்சா? வந்து இங்க முன்னாடி உட்காரு என்று ஒரு இருக்கையை பயாலஜி சுட்டிக்காண்பித்தது.
நான் நின்ற இடத்திலிருந்து அந்த இருக்கையை மெதுவாக எட்டிப்பார்க்க அங்கு ப்ரீத்தி தனியாக அமர்ந்திருந்தாள். சின்ன தயக்கத்துடன் அவளும் மெதுவாக திரும்பி என்னை பார்த்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள். சில ஆசிரியர்களின் பனிஷ்மெண்ட்டுகள் பல சமயம் நமக்கு வரமாக அமையும். தண்டனை என்று நினைத்து அவர்கள் செய்யும் விஷயம் நம்மை அடிக்கடி பரவசப்படுத்தும். அன்றைய தண்டனை என்னை பரவசப்படுத்தியது.
மனதிற்குள் நன்றி கூறி முன்னால் வந்து அமர, அவள் என்னை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை. என் கண்களும் நேரே இருக்க புத்தி மட்டும் அருகே இருக்கும் ப்ரீத்தியிடமே சிக்கிக்கொண்டிருந்தது. ப்ரீத்தியின் கவனம் துளிகூட சிதறாமல் பாடமே கதி என்றிருந்தது.
ஒரு ஜவ்வரிசி வத்தலைப் போல் குழப்பமான வடிவமில்லாத ஒரு ஜந்துவை பயலாஜி ஆசரியை போர்டில் வரைந்து வைக்க அது சாமானிய மாணவர்களின் புரிதலுக்கு அப்பால் இருந்தது. அனைவரையும் அதை அப்படியே அக்ஷரம் பிசகாமல் வரைய சொல்லிவிட்டு நகர அந்த வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்து என்னை சந்தோஷப் படுத்தியது. பயாலஜி விடை பெற அடுத்து கணிதம் வருவதற்கு சில நொடிகள் இருந்தது.
ஆனந்த், சக்தியிடம் அவன் வந்தா நீ இடம் கொடுக்ககூடாது என்று கட்டளையிட்டிருக்க வேண்டும். திரும்பிப் பார்க்க இருவரும் அசையாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார்கள். ஆனந்த முகத்தில் அப்படி ஒரு கர்வம்.
நான் சிரித்துவிட்டு ப்ரீத்தியிடம் திரும்பினேன். கொஞ்சம் கூட நேரம் தாமதிக்காமல் போர்டில் இருந்த ஜவ்வரிசி வத்தலை அழகாக தன்னுடைய நோட்டில் வரைந்திருந்தாள்.
நான் அதை உற்று கவனிக்க, அது உன் அப்பா வா? என்று நோட்டில் கண்கள் எடுக்காமல் கேட்டாள்.
என்னையா கேக்குற?
பென்சிலை கீழே வைத்துவிட்டு என் பக்கம் திரும்பினாள். அது உன் அப்பாவா?
ம்ம்ம்….ஆமாம் என்று சிரித்தேன்.
உனக்காக கிளாஸ் மாத்த பிரின்சிபல் கிட்ட பேசினாரா?
ஆமா..நான் என்ன கேட்டாலும் செய்வாரு….அன்னிக்கி மழைல நீ என் கூட ரிக்ஷால வந்தியே…நியாபகம் இருக்கா? அது உன் அம்மாவா?
ம்ம்ம்..
என் அப்பா உன் அப்பா மாதிரி இல்ல.இப்படி ஃபிரண்டுக்காக கிளாஸ் மாத்தணும்னு சொன்னா என்ன ஸ்கூல்லேந்தே மாத்திடுவாங்க. நிறுத்த கூட வாய்ப்பிருக்கு
ஏன்? உன் அப்பா உனக்கு ஃபிரண்ட் இல்லையா?
எனக்கு ஃபிரண்ட்ஸே இல்ல என்று அவள் வரைந்த புத்தகத்தை நீட்டினாள்.
அமீபா..நல்லா இருக்கா?
புரிதலுக்கு அப்பால் உள்ள ஜந்துவை அறிமுகப் படுத்துவது புரியாமல், நான் சூர்யா..என்று மீண்டும் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள,
வெடித்து சிரித்தாள். தெரியும். ஞாபகம் இருக்கு. உன் ஃபிரண்ட் பக்கத்துல போய் உட்காரல?
நான் என் ஃபிரண்ட் பக்கத்துல தான உக்காந்துட்டிருக்கேன் என்று யோசிக்காமல் சொன்னதும் அவள் கண்கள் என்னை ஊடுருவிப்பார்த்தது. ஐந்து வினாடிகள் இருக்கும். கடவுள் அம்ஸம் கொண அமைதி எங்களை சூழ்ந்து கொண்டது. மாறி மாறி இடது கண் வலது கண் இடது கண் வலது கண் என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
இல்ல…நீ பொய் சொல்ற…
ஏய்..நிஜமா..ஏன் நீ பசங்களோட ஃபிரண்டா இருக்க மாட்டியா? என்று கேட்டு முடிப்பதற்குள் எழுந்து நின்றாள். முழு வகுப்பும் குட் மார்னிங்க் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கதறியது.
நான் தாமதமாக எழுந்து நிற்க அதை கணிதம் சைட் ஆங்கிளில் பார்த்தது.
அடடே…துரை…இன்னாம்மா…இங்க இன்னா பண்ற என்று போலியாக ஜனகராஜ் குரலில் பேசியது.
வகுப்போடு சேர்ந்து ஆனந்தும் வெடித்து சிரித்தது தனியாக என் காதுகளில் கேட்டது.
Good டா.. ஒரு நட்புக்காக வருஷா வருஷம் கிளாஸ் மாறினதலாம் சரித்திரத்துல தான் எழுதிவைக்கணும். தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைச்சிட்டு நீயும் அதுக்கு பக்கத்துல போயி உக்காந்துக்க… என்றதும் மீண்டும் வெடிச்சிரிப்பு கேட்டது.
ஏண்டா எவ்ளோ பெரிய மனுஷன் உங்க அப்பா..அவரப்போய் இப்படி ஸ்கூல்க்கு கூட்டிவந்து…ஆனா ஒன்னு…நீ நிஜமாவே உன் ஃபிரண்டு சக்திக்காக தான் வந்தியா? கணிதம் என் அருகே இருக்கும் ப்ரீத்தியை ஒரு முறை பார்த்தது. இல்ல பார்த்தா அப்படி தெரியல…உக்காரு..என்று மீண்டும் தன் சொந்தக்குரலுக்கு மாறி பாடம் நடத்த துவங்கினார்.
எப்படிடா கண்டுபுடிக்கிறீங்க என்கிற ஆச்சர்யத்துக்கு நடுவே எனக்கு கணிதத்தை பிடித்துப்போனது.
சற்றே சிதறாமல் கணிதம் கவனித்துக்கொண்டிருக்க அருகே ஒரு அழுகை சத்தம் மெதுவாக கேட்டது.
ப்ரீத்தி பெஞ்சில் தலை கவிழ்த்து அழுது கொண்டிருந்தாள். வகுப்பாசிரியர் பாடம் நடத்தியபடி தற்செயலாக திரும்பிப் பார்க்க எங்கள் மீது கவனம் படர்ந்தது.
டேய் சூர்யா….முதல் நாளே இன்னடா பண்ணின..
சார் நான் ஒன்னும் பண்ணல சார். தீடீர்னு அழுது சார்.
யம்மாடீ என்று மீண்டும் ஜனஜகராஜ் குரலுக்கு மாறினார். இன்னாமா ஆச்சு..
வயிரு வலிக்குது சார் என்று ப்ரீத்தி தழுதழுத்த குரலில் உடைந்தாள்.
என்னடா பண்ணினே என்று பின்னாலிருந்து மறைந்து கொண்டு ஆனந்த் முகம் பொத்தி கத்த. எந்த பொறுக்கி அது என்று கணிதம் கோபத்துடன் ஒரு முறைப்பு முறைத்தார். சிரித்துக்கொண்டிருந்த வகுப்பு சட்டென்று கட்டுப்பாடுக்கு வந்தது.
சூரி…நீ என்ன பண்ற, இவள பத்திரமா staff room கூட்டிட்டு போ. மருந்து குடுப்பாங்க. அங்கயே கொஞ்ச நேரம் படுக்க வெச்சுட்டு….
வெச்சிட்டு?
திருப்பி வந்துடு என்று கூற, உள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளியே காண்பிக்காமல் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டேன்.
ப்ரீத்தி மெதுவாக எழுந்திருக்க நான் அவள் கைகளை பிடித்துக்கொண்டேன். வகுப்பு பெரு மூச்சு விட்டது. ஆனந்தின் வயிறு பற்றி எரிந்து வகுப்பு முழுவதும் அனல் பரவியது.
Thats ok…நான் பாத்துக்குறேன் என்று ப்ரீத்தி நடந்தாள். நான் அவள் கூடவே நடந்து வகுப்பை விட்டு வெளியே வர, எதிரே பயாலஜி மிஸ் மீண்டும் எங்கள் கண் முன் தோன்றினாள்.
what happened sir? are you alright preethi?
வவுறு வலிக்குதுன்னு சொல்லுது மிஸ் என்று கணிதம் நகைச்சுவை நடிகர் செந்தில் குரலில் கூற
என்ன சார். வயிறு வலிக்குதுன்னு சொல்றா… கூட இவன அனுப்புறீங்க. she is in her 8th. Do you even get it? எப்படி இப்படி புரியாம நடந்துக்குறீங்க? என்று வகுப்பில் உள்ள மற்றொரு பெண்ணை விளித்தாள்.
ஆஷா..நீ கூட்டிட்டுப்போ..நான் கொஞ்ச நேரத்துல வந்து என்னனு பார்க்குறேன் என்று வினாடிப்பொழுதில் சகலத்தையும் கவிழ்த்துப்போட்டு நகர நானும் கணிதமும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தோம்.
கணிதம் லேசாக திரும்பி என்னைப் பார்த்தது. இந்தியா உருப்படவே உருப்படாது..நீ வா நாம்ப sin/cosக்கு போவோம் என்று நடந்தார்.
நான் வகுப்பிற்குள் செல்ல மொத்த வகுப்பும் மீண்டும் சிரித்தது. ஆனந்த் குரல் இன்னும் தனியாக.
அன்றைய அடுத்த மூன்று வகுப்புகள் தனியாகவே அமர்ந்திருந்தேன். பின்னால் இருந்த சக்தி சந்தோஷமாக ஆனந்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். எனக்கு அங்கு சென்று சண்டை போட்டு அவன் அருகில் உட்கார வேண்டும் என்பது அறுந்து போனது.
ப்ரீத்தி அப்பாவை பற்றி ஆசையாக கேட்டது, நான் உன் ஃபிரண்டு தானே என்றதும் கண்களை ஊடுருவிப் பார்த்தது. வலி பொறுக்காமல் கண்கள் மூடி அழுதது. முதல் முறையாக என் கைகள் பிடித்து எழுந்து நின்றது என்று சகலமும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
மீண்டும் மணி அடித்தது..இம்முறை சற்று நீளமாக. அனைவரும் தங்களுடைய லஞ்ச் பாக்ஸை எடுத்து டேபிளில் வைத்தார்கள். சக்தி என் அருகில் வந்து உட்கார்ந்தான். அவன் டப்பாவைத் திறந்து உனக்கு பிடிச்ச முட்டை மசாலா என்று காண்பித்தான். பின்னால் இருந்த ஆனந்த் என்னை கோபமாக கவனித்துக்கொண்டிருக்க.
நீ சாப்பிடு சக்தி..நான் Staff room வரைக்கும் போயிட்டு வர்றேன் என்று அவன் தோள் தட்டி நகர சக்தி என்னை வாய்பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்றைய உணவை சாப்பிடுவது இரண்டாம் பட்சமாகிவிட ஒரு வித ஆசையோடு staff roomற்கு விரைந்தேன்.
அறைக்கதவை தட்டி உள்ளே செல்ல, அங்கு ப்ரீத்தி தனியாக அமர்ந்திருந்தாள். சூரிய ஒளி சற்று மங்கலாக உள்ளே படர்ந்திருக்க அந்த அறை கொஞ்சம் மேஜிக்கலாக இருந்தது.
தலை நிமிர்த்தி என்னை பார்த்துவிட்டு உடலுக்கு போர்த்தியிருந்த சின்ன போர்வையை மீண்டும் இழுத்து போர்த்திக்கொண்டாள்.
யாரும் இல்ல?
எதோ மீட்டிங்க்னு பேசிக்கிட்டாங்க. நீ சாப்டல?
இல்லை….நீ?
பசிக்கல…எப்படி இருந்தாலும் பிரட் அண்ட் ஜாம் தான..மூணு வேளையும். கடுப்பா இருக்கு.
வயிறு வலி எப்படி இருக்கு?
கிட்ட வா சொல்றேன் என்றாள். நான் ஒரு முறை சுற்றி முற்றி பார்த்து யாரும் இல்லாதது உறுதிபடுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
அவள் எதிரே உள்ள ஒரு இருக்கையை கண் காண்பிக்க, அதை இழுத்து போட்டு அவள் முன்னால் அமர்ந்தேன்.
போர்வையை சற்று தளர்த்தி, உன்கிட்ட ஒரு உண்மை சொல்லட்டா?
நான் அவளை சற்று வியப்பாக பார்க்க
எனக்கு வயிறு வலியே இல்ல என்று கண் சிமிட்டினாள்.
ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆங்?
அடுத்த பீரியட் என்னது?
physics…
holidays ல homework கொடுத்தாங்களே நீ செஞ்சியா?
ஆங்…அதுக்கெல்லாம் ஆள் இருக்கு என்று சிரிக்க. அவள் என்னை கோபமாக பார்த்தாள்.
நானும் செஞ்சிட்டேன். காலைல வீட்டுல நடந்த பிரச்சனைல மறந்து வச்சுட்டு வந்துட்டேன்.
என்ன பிரச்சனை.
அப்பறம் சொல்றேன், அது முக்கியம் இல்ல…எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதான்…இந்த வயிறு வலி சொல்லி இங்க வந்துட்டேன்…எப்படி ஆக்டிங்க்?
நான் அவளைப் பார்த்து சிரிப்பதா திட்டுவதா என்று தெரியாமல் நின்றென்…
அட ச்செ…கிளம்பி வா…
எங்க?
கிளாஸுக்கு தான்…
என் கிட்ட நோட் இல்லையே. காலைல கோபத்துல கிழிச்சிட்டேன்.
ஏன் கிழிச்ச.
அது முக்கியமில்ல அப்பறம் சொல்றேன்.
அட குழப்பமே…எல்லாம் பரவால்ல என்கிட்ட இன்னொரு நோட் இருக்கு எடுத்துட்டு வந்து தரேன்….ரெண்டு பக்கம் தான டக்குன்னு இங்கயே உக்காந்து எழுதிட்டு கிளாஸ் முடியறதுக்கு முன்னாடி வந்து டேபிள்ல வச்சுடு. சரியான பைத்தியம் என்று நான் அங்கிருந்து நகர கணிதம் உள்ளே நுழைந்தது.
Good morning sir…என்று சொல்லி வெளியே நடந்தேன். அவர் எங்கள் இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி நின்றிருந்தார்.
வகுப்புக்கு செல்லும் வழியில் இருந்த நண்பர்கள் சில Snacksகளை நீட்ட. அதை மட்டும் சாப்பிட்ட படி என் பையை துழாவிப் பார்க்க ஒரு empty notebook கூட இல்லை.
அக்கறையாக pack செய்ததில்…தேவையில்லாத note bookஐ பத்திரமாக எடுத்து வெளியே வைத்தது நினைவுக்கு வந்தது.
என்ன செய்வது என்று தெரியவில்லை.ப்ரீத்திக்கு வாக்கு கொடுத்தாகிவிட்டது. லஞ்ச் பிரேக் முடிந்து மீண்டும் மணி அடித்தது. இன்னும் சில நொடிகளில் physics வாத்தியார் கிளி மூக்கு கிருஷ்ணண் வந்துவிடுவார்.
மிச்ச நோட் புக்குகளை புரட்டிப் பார்க்க எல்லாம் பத்து பதினைந்து பக்கம் ஏற்கனவே எழுதியிருந்தது. சிலது திருத்தியும் இருந்தது. அந்த வருடத்திற்கான முக்கியமான பகுதிகள் அதில் இருந்தது.
மிஞ்சியிருப்பது என்னுடைய physics note book. அதை எடுத்துப் பார்க்க. மிகவும் நீட்டாக home work எழுதப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு பக்கங்கள் தான். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். ஆனால் கிருஷ்ணன் வாத்தியார் அடி பிரித்துவிடுவார். home work செய்யாதவர்களை வரிசையாக முழங்கால் இட்டு நிற்க வைத்து விளாசுவார். லஞ்ச் பிரேக் முடிந்த நேரம் என்பதால் பிரின்ஸிபல் ரோந்து பணிக்கு வரக்கூடும். காலையில் கை கட்டி வகுப்பு மாறுதலுக்காக நின்ற என்னை இன்னும் கேவலமாக பார்க்க நேரிடும். என்ன செய்வது என்று யோசித்தேன்.
என் அருகில் ஆனந்த் நின்றபடி…டேய் சூர்யா உன்கிட்ட ரெண்டு எக்ஸ்டிரா நோட் புக் இருக்குமா? எனக்கு ஒன்னு தர்றியா…கிளி மூக்கு home work செய்யல…அவன் அடிச்சா தாங்க முடியாது…நீ ஒன்னு கொடுத்தேன்னா உடனே உக்காந்து எழுதிடுவேன்…என்று இளித்தபடி போலியாக நின்றிருந்தான்.
சரக்கென்று எனக்காக எழுதியிருந்த இரண்டு பக்க வீட்டுப்பாடத்தை கிழித்தேன். ஆனந்த் முகத்தில் அப்படி ஒரு ஆச்சர்யம். அவனைப்பார்த்தபடியே எழுதிய பேப்பரை கசக்கி குப்பைத்தொட்டியில் மாஸாக தூக்கி எறிந்தேன். அவனிடம் தராமல் புத்தகத்தை மூடி வெளியே சென்றேன். அவன் முகம் வெளிர்ந்து போனது.
மீண்டும் staff room கதவு திறந்து செல்ல, கணிதம் ஏதோ வேலை செய்துகொண்டு ஓரக்கண்ணில் என் வருகையை கவனித்தது. சின்ன துள்ளலுடன் சென்று ப்ரீத்தியிடம் புத்தகத்தை நீட்ட.. அத்தனை சந்தோஷத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தாள். முதல் இரண்டு பக்கம் கிழிந்திருப்பது தெரிந்தது. என் கண்களை மீண்டும் ஊடுருவிப் பார்த்தாள். அன்றைக்கு அது மூன்றாவது முறை. குறித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு அந்தப்பார்வையில் ஒரு அழகு. அத்தனை ஆழம். இடது கண்..வலது கண்…மீண்டும் இடது கண்..ஒரு வினாடிக்குப்பின் மெதுவாக மீண்டும் வலது கண் என்று அதில் என்னென்னவோ அர்த்தங்கள். பல நூறு பக்கங்கள் வார்த்தைகளாக கோர்த்து எழுதும் வித்தை இரண்டு நொடிப்பார்வையில் செய்து முடிக்கும் ப்ரீத்தி……ப்ரீத்தி…
கிருஷ்ணன் வகுப்பிற்கு வந்து attendance registerஐ பெஞ்சில் அனாயாசமாக வீச, சாக்தூள் புழுதி பறந்து அடங்கிற்று. அவரின் செயலில் இன்று பெரிய கதை இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தது. பயத்தில் ஆனந்த் எச்சில் விழுங்கும் சத்தம் வகுப்பிற்கே கேட்டது.
Home work எழுதினவங்க எல்லாம் இங்க வந்து நோட்டை வைங்க. எழுதாதவங்க தயவு செஞ்சு நீங்களே வெளில போய் நின்னுடுங்க. எல்லோர் வகுப்பில் இருக்கும் அந்த ஆனந்த், ரமேஷ், சதீஷ், அப்பாஸ்,வாசீம்,சிவா இவர்களுடன் சேர்ந்து நான் என்று ஏழு பேர் மட்டும் வெளியே நின்றோம்.
மற்றவர்களின் புத்தகங்கள் பிறந்த நாள் கேக் போல் அடுக்கிவைக்கப்பட நானும் ஆனந்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்.
இன்னிக்கி கிளி…நம்ம. …$%%& கிளிக்க போகுது என்று சதீஷ் கூறியதும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபீரென்று வாசிம் சிரிக்க நாங்கள் தலை குனிந்து சிரிப்படக்க முடியாமல் நின்றிருந்தோம். கிருஷ்ணனின் கவனம் எங்கள் மீது திரும்பியது. விஸ்வரூபம் எடுத்தாடியது. கௌரவர்கள் சபையில் எடுத்த விஸ்ரூபத்தைப்போல் அத்தனை ஒரு வெறியாட்டம். scale, கைகள், புத்தகம் என்று இடம் பொருள் பார்க்காமல் அடிக்கத்துவங்கினார். அத்தனை களேபரத்திற்கு நடுவேயும் ப்ரீத்தி அழகாக அந்த வகுப்பிற்குள் நுழைந்தாள். நாங்கள் அடிவாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து சற்று பயந்து கண்கள் தாழ்த்திக்கொண்டாள். நான் சின்ன சிரிப்புடன் முழங்காலிட்டு அடி வாங்கிக்கொண்டிருந்தேன். அவருக்கே சலிப்புத்தட்டி அடிப்பதை நிறுத்தி கலைந்த தன் முன்னந்தலையை சரி செய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
ரோந்தில் இருந்த பிரின்சிபல் எங்களை கடக்கும் போது சில பல வன்மங்களை கக்கினார். எனக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே விழுந்தது.
எல்லாம் முடிந்து பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல் அந்த இடம் அமைதியானது. பிரின்சிபல் எங்களை திருத்தமுடியாது என்று திட்டி கடந்து சென்றார். கிளி தன் சிவந்த மூக்கை திருத்திக்கொண்டு பாடம் எடுக்க துவங்கியது. நானும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.
நீ பேப்பர கிழிச்சிட்டு அந்த ப்ரீத்தி பொண்ணுக்கு தான குடுத்த என்றான்.
எப்படி கண்டுபிடிச்ச.
பார்த்தேனே..அந்த பொண்ணு நீ அடி வாங்கும்போது உன்னயே தான் பாத்திட்டிருந்துச்சு. ஆனா ஒன்னுடா சூர்யா நீ வாங்கின அடி அந்த பொண்ணு வாங்கிருந்தா சுருண்டுருக்கும்ல..
ம்ம்ம்..
நீ சூப்பர் டா சூர்யா…ஹீரோ…ஹீரோ…இனிமே நீ நான் சக்தி மூனு பேத்தயும் யாராலும் பிரிக்கவே முடியாது….ஒகே?
நான் சிரித்தேன். ஒரு முறை ப்ரீத்தியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனந்த் சொன்னது உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. யாரும் பார்க்காத போது கிளி மூக்கு வேறு திசையில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் சற்று விலகி முழங்கால் இட்டபடியே வகுப்பிற்குள் உட்கார்ந்திருக்கும் ப்ரீத்தியை பார்த்தேன்.
நான் எப்பொழுது பார்ப்பேன் என்று காத்திருந்தது போல் கதவுகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து லேசாக சிரிக்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்துவங்கியது. வலிக்குதா என்று சைகையில் கேட்க நான் இன்னும் கொஞ்சம் அழகாக சிரித்தேன். அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது. சடக்கென்று தன்னுடைய physics bookகின் கடைசி பக்கத்தை திருப்பினாள். அதில் ஏதோ கிறு கிறு என்று எழுதினாள். எழுதி முடித்து பேனாவை மூடி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் ஆவலுடன் பார்க்க. அவள் அந்த புத்தகத்தை தூக்கி காண்பிக்க அதில்
“THANK YOU MY FRIEND” என்று எழுதியிருந்தது.
நான் சிரித்தேன். என் சிரிப்பில் காதல் மிளிறிற்று. அவள் கண்களில் வந்த கண்ணீர் காதல் சொல்லிற்று.
இன்றைக்கு என் கையில் அந்தப்புத்தகம் கிடைத்திருந்தால் நான் அதை பத்திரமாக என் நினைவுகள் பெட்டியில் வைத்திருப்பேன். பத்திரப்படுத்தியிருப்பேன். மாதம் ஒரு முறை எடுத்து பிரித்து அந்த கடைசிப்பக்கத்தை தடவிக்கொடுத்திருப்பேன். அதன் மீது கன்னம் வைத்திருப்பேன். முத்தம் கொடுத்திருப்பேன்.
உன்னிடத்தில் அந்த புத்தகம் உள்ளதா ப்ரீத்தி? அதை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறாயா? கன்னம் தடவுவது போல் தடவிக்கொடுக்கிறாயா? யாரும் பார்க்காத நேரம் முத்தம் கொடுக்கிறாயா?