Suryaa's Blog

எங்கள் காதல் ஒரு தினுசு – அத் – 6

எங்கள் காதல் ஒரு தினுசு 

6

முடிந்துபோனது. அத்தனை சந்தோஷமும், மனதில் ஏற்படும் குதூகலமும், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல், பொய் இல்லாமல், பித்தலாட்டமில்லாமல், துளி கூட கர்வமில்லாமல்  முழு வீச்சுடன் உண்மையாக ஒருவரை நேசித்த அத்தியாயம் முடிந்துபோனது. எத்தனை முறை யோசித்தாலும் எங்கு சென்று உற்று  உலுக்கி நோக்கினாலும் அதற்குண்டான காரணம் தெரியவில்லை. ஆனால் முடிந்து போயிற்று. எல்லா அத்தியாயங்களும் ஒரு நாள் முடியும்.

நீங்கள் முதல் காதல் என்று பறையடித்துக்கொண்டு மனதுள் ஒரு உருவத்தை நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே. அது உங்கள் முதல் காதலே இல்லை என்று கூறினால் நம்ப முடியுமா.

வயதால் ஏற்படும் பருவமாற்றங்கள் அடங்கிய காதல்களுக்கும் அதற்கு முன்னரே ஏற்படும் அப்பழுக்கற்ற இது போன்ற உணர்வுக்கும் பல வித்யாசங்கள் உண்டு. மீசை முளைக்க ஆரம்பித்து, மனதையும் புத்தியையும் முழுவதுமாக ஆக்கிரமிக்கத்துவங்கும் காதல்கள் ஒரு பக்கம் மறதிகளுடன் மிதந்து கொண்டிருக்க, இனம் புரியாத இது போன்ற ஒரு உணர்வு மட்டும் எப்படி 35 வருடம் தாண்டியும், ஊர், பெயர், நிறம், நேரம் என்று நினைவிலிருந்து அகலாமல் அப்படியே புதிதாக ஜொலிக்கிறது. அப்படியென்றால் இது காதலை விட மிகச் சிறப்பான விஷயமா. 

பின்னால்  ஒரு  காலகட்டத்தில் வீசப்போகும் பேரலைகளுக்கு இதை ஒத்திகையாக நினைத்துக்கொள்வதா. இப்படியும் ஒரு உணர்வு வந்து உன்னைத் தாக்கும் அதற்கு தயார் படுத்திக்கொள் என்கிற துருப்புச்சீட்டாக எதிர்பார்த்திருப்பதா. இதோ உன்னைத் தேடிக்கொண்டு காட்டு வேகத்தில் எதிர் திசையில் ஒன்று வருகிறது பார். உன்னை தலை குப்புற தள்ளும் இந்த ‘இதுக்கு’ பேர்தான்  காதல் என்று திடுமென்று யாரும் அடையாளம் காட்டினால் அதை நாம் எப்படி கையாள முடியும். பித்து பிடித்துவிடாதா? 

நீங்கள் உண்மையாக ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால் அப்படி உண்மையாக காதலிக்க உங்களுக்கு கற்றுதரப்பட்டிருக்க வேண்டுமே. சினிமா பார்த்து, பாடல் கேட்டு, உடல் முகர்ந்து வருவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.  அப்படியென்றால் எது உண்மை?

நீங்கள் மறந்தவிட்ட,விரல் நடுவே நழுவவிட்ட, முதல் காதலுக்கு வெகு முன்னரே வந்த அந்த உணர்வே முதல் ______. 

கடவுளின் புண்ணியத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்த உணர்வுக்கு, அந்த புனித உறவிற்கு இன்னும் இந்த சமுதாயத்தில் பெயரிடவில்லை. Adolescence, Infatuation , Crush என்கிற சொற்களில் ஒரு வில்லத்தனம் இருக்கிறதே தவிர, அது பொருளாகாது. இந்த உணர்வுக்கு பெயரிடாமல் இருப்பதே நல்லது. பெயரிடத்தெரியாத ஒரு உணர்வாக இருப்பதே இதற்கு மரியாதை.

இந்த உணர்வை அழகாக பாதுகாத்து, அக்கறையுடன் அணுகி, பொக்கிஷமாக மதித்து, அதே உணர்வுடன் வளர்பவர்கள் மனிதர்களாகிறார்கள். அவர்கள் பாதை நினைவுகளால் ஆன நெடுமரங்கள் நிறைந்த சோலையாகிறது. மற்றவர்கள் இடறிவிழும் முதல் படியும், முற்செடியும் இதுவே. சிலர் பயத்தால், சிலர் வெட்கத்தால், சிலர் கோபத்தால் தடுமாறி இந்த உணர்வை புரிந்து கொள்ளாது புறந்தள்ளுவது தலை குப்பற விழுவதற்கு சமம். விழுந்தவனின் தாக்கம் அடுத்தவனுக்கும் தெரியாது. விழுந்தவனுக்கும் புரியாது. சில காலம் உள்ளேயே ஊறி  மிகச் சரியான நேரத்தில் தன் வேலையை காட்டும். பேயாட்டம் ஆடும், முரண்டு பிடிக்கும், இது மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கும். கிட்டாதாயின் கத்தும், கதறும், கத்தி தூக்கும், முட்டை வீசும். முடிவு தேடி அலையும். குரோதல்!

வெறும் உண்மை மட்டுமே இருந்து, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சரக்கென்று பேப்பர் கிழித்து விரல் வலிக்க எழுதிய வீட்டுப்பாடத்தை தூக்கி குப்பையில் போட்டு, உண்மையை அவள் நலன் கருதி மறைத்து. அறைவாங்கி, மிதிபட்டு….அச்சோ.. மரோசரித்திரா தோற்றுபோனது… 

அவளுடன் சைக்கிளில் செல்ல வேண்டும், ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து படம் பார்க்க வேண்டும், ஒரு ஜூஸ் வாங்கி இரண்டு ஸ்ட்ரா இட்டு உறிய வேண்டும் என்கிற அபத்தக்கூறுகள் இதில் இல்லவே இல்லை. ஒரு சின்ன சிரிப்பிற்காக செய்த செயல் எதிரே இருக்கும் பெண்ணை கண்ணீர் மல்க நிற்கவைக்கிறது.

காதலில் இத்தனை உண்மை மிளிறாது. இத்தனை அறம் இருக்காது. நேர்மையாக தள்ளி நின்று வழி வகுக்காது. எதோ ஒரு பொய் சொல்லி பித்தலாட்டம் செய்து அதையே குதூகலமாக எடுத்துக்கொண்டு அதை மறைக்க மீண்டும் பொய் சொல்லி கெஞ்சிக் கூத்தாடி selfishness உடன் வலம் வரும். இது காதல் இல்லை. இது வேறு ஒரு  உலகம். எதிர்பாலினத்தை மரியாதையாக உருவகப் படுத்திக்கொள்ளவும் அவர்களை நுணுக்கமாக ரசிக்க கற்றுக்கொடுக்க கடவுள் தரும் ஒரு மாதிரிப்படிமம். சிலருக்கு அது நீண்ட நெடுங்கதையாக வளர்ந்து அறுந்ததும் உண்டு. பலருக்கு அது நீர்குமிழியாய் ப்ளிப் என்று உடைந்து போவதும் உண்டு. 

இது எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும், ஆனால் நினைவில் வைத்திருப்பதில்லை. எல்லோர் வாழ்கையிலும்  சின்னஞ்சிறிய அத்தியாயமாகவாவது இது கண்டிப்பாக நடந்திருக்கும். அனாயாசமாக மறந்திருப்போம். ஒரு பஸ் பயணத்தில், அலுவலகத்துப் பக்கத்து சீட்டில், வங்கிப் படிக்கட்டில், ஹோட்டல் அறையில், லிஃப்ட்டில், கேண்டீனில், வகுப்பறையில், வன்னாந்துறையில் எங்கோ ஒரு இடத்தில் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும். நாம் மறந்துவிட்டோம். மறந்துகொண்டே இருக்கிறோம். இன்னும் சில வினாடிகள் நீங்கள் வேறு ஏதோ ஆபாசத்தை நினைத்துக் கொண்டிருக்கையில் இந்த அழகான உணர்வு மொத்தமாக அழிந்து போகும். எத்தனை யோசித்தாலும் வராது. நேரத்திற்கு உதவாது.

எத்தனை பெரிய ரகசியத்துடன் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.எத்தனை பெரிய ஆற்றலுடன் நாம் பிறந்திருக்கிறோம். ஆனால் மறந்துவிட்டோம். தூசு தட்டி படிக்க நேரமில்லாமல் சிக்கிக்கொண்டிருக்கிறோம். நமக்கு மிகவும் நெருக்கமான உண்ரவாக இருக்கப்பட்டது இப்போது வயது ஆக ஆக இடைவெளி ஏற்பட்டு தள்ளிப் போய் விட்டது. சுற்றியுள்ள கேளிக்கைளில் மயங்கி மறைந்து போய்விட்டது.

காதலிக்க கற்றுக்கொடுத்தவரை இழப்பது எந்த விதத்தில் நியாயம். அந்தப் பெண்ணோ ஆணோ தான் இன்று நீங்கள் உருகி ஊற்றாக மாறி பரிதவித்து துகள்துகளாக பறக்கவிட்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவரை நீங்கள் வாழ்கையில் மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவரை பார்த்து கை குலுக்கி “ எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்று முறையிடத்தேவையுமில்லை. 

இது கடவுளால் உங்களுக்கு காதல் என்கிற மகோன்னத உணர்ச்சியைப் பற்றி  சொல்லித்துருவதற்காக அரங்கேற்றப்பட்ட அவதாரச் செயல். A godly event. அந்த வேலையை அவர்கள் செய்துவிட்டு காணாமல் போவதே விதி. அதுவே அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. அவர்கள் காணாமல் போவது தான் இயல்பு. 

சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் சொல்லிக்கொடுத்தவர் கூடவே வருகிறாரா என்ன? கற்றுக்கொடுத்தவர் மறைந்தாலும் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடம் நினைவில் இருக்கிறதல்லவா?

ஒரு காலத்தில் மிக உண்மையாக உணர்வை வெளிப்படுத்தியவர்கள் வேறு சில திசை திருப்பங்களால் அதை மறந்து தவிக்கிறோம்.  மிகச் சுலபமாக இந்த நிலையை கடந்துவிட்டு இப்போது  என்ன செய்வது என்று புரியாமல் துவண்டு போகிறோம். என்னை காப்பாற்று என்று கரம் கூப்பி அழைக்கிறோம். கடவுளை விளிப்பதுபோல.

கடவுள் நம்மை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை. நம்முள்ளே நமக்காக நம் நினைவுகளை ஞாபகப்படுத்தும் ஒரு toolஆக நம் உடலில் ஒரு உயிருள்ள பகுதியாகவே அவர் வீற்றிருக்கிறார்.  நாம் அதை பொறுமையாக  உட்கார்ந்து, அரிசி அரிசியாக களைந்து ,மூலையில் கிடக்கும் அந்த மணல் மேட்டை மேய்ந்தால் கடவுள் அம்ஸம் கொண்ட அந்த உணர்வு மீண்டும் புலப்படும். உங்களை அரவணைத்துக்கொள்ளும். அய்யயோ இப்படி ஆய்டுச்சா? பரவால்ல..எழுந்திரு. முதல்ல உக்காரு, முகம் தொடச்சுக்கோ, ஏன் இப்படி பண்ணினே. நீ அப்படி பண்ணக்கூடிய ஆள் இல்லையே. ஏன் இவ்ளோ கோவப்படுறே. அமைதியா இருப்பியே முன்னாடி என்று சாந்தப்படுத்தும். தலை தடவிக்கொடுக்கும், புருவம் நீவி கோவம் குறைக்கும். நெத்திப்பொட்டில் கைவைத்து வலி போக்கும், அலைந்து புரண்டுகொண்டிருக்கும் எண்ணங்களுக்கு லகான் இடும். கழிவுகளை வெட்டி சாய்த்து தனியாக உட்கார வைக்கும். அமைதியாக அமர்ந்துகொண்டு நம் பழைய உணர்வுகளை கவனித்தாலே சகலமும் புரிந்து போகும். 

எனக்கும் புரிந்து போனது. இதோ பார் இத்துடன் என் வேலை முடிந்து போகிறது. இங்கு உன்னை புறந்தள்ளி படுக்க வைத்திருக்கிறதே  இதற்கு பெயர் தான் காதல். இந்த சக்திதான் உன்னை ஒரு நாள் ஆட்டிப்படைக்கப்போகிறது. உன்னை உதறிவிட்டு வேறு யாருக்காகாவோ எதன் பின்னாலோ ஓடுகிறார்களே இவர்களால் நீ மனிதனாக மாறப்போகிறாய் என்று அறிமுகப்படுத்திவிட்டு பெட்டி படுக்கையோடு கிளம்பிப்போனது. 

புரிதல் நடந்தேறிய இடம் சென்னை- ராஜரத்தினம் ஸ்டேடியம்.

சென்னை எழும்பூர் பக்கம் வண்டி எடுத்து விடியற்காலை ஐந்து அல்லது ஆறு மணி அளவில் செல்ல கொடுப்பனை இருந்திருந்தால் உங்களுக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் தெரிந்திருக்கும். இங்கு, பிர்த்தியேகப் பரவசக் காற்று வீசும். குல்மொஹர் பூக்கள் உதிரும். இடம் நெருங்க சட்டென்று பிடித்த பாடல்கள் மனதிற்குள் பட்டியலிடும். சொடக்கிட்ட நொடியில் திடுமென்று காதல் பற்றிய சிந்தனை வந்து செல்லும். இப்படியான இதமான ஜில்லென்ற உணர்வு உங்களுக்கு எழும்பூரில் ஏற்பட்டால்,  வண்டியை நிறுத்திவிட்டு இடது அல்லது வலது பக்கம் கண் திறந்து பார்த்தால் அங்கு தெரிவது தான் ராஜரத்தினம் ஸ்டேடியம். A place haunted with memories.

காலை 4 மணி முதல் 8 மணி வரை சென்னை மாநகராட்சி சிறப்புக் காவல்துறையின் பயிற்சிக் கூடம். 9 மணி வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடற்பயிற்சி செய்தபடி சிலர் சப்பாத்தி தொப்பியும் அரை நிக்கருமாய் கண்ணில் படுவார்கள். 9.05ற்கு அதுவும் இருக்காது. ஹோ என்று அகண்டு விரிந்து காணப்படும் மைதானம். பனிக்காலங்களில் 20 அடிக்கு அப்பால் யார் என்ன செய்கிறார்கள் என்று எத்தனை கண் கசக்கினாலும் தெரியாது. பச்சைப் புற்கள் சிரிக்கும். இருக்கைகள் விசிலடிக்கும், மரங்கள் பேசும், மண் மனக்கும். ராஜரத்தினம் ஸ்டேடியம் எங்கள் பள்ளியின் sports Day  கொண்டாடும் ஆஸ்தான அரங்கம்.

Gill Adarsh Matriculation Higher Sec School. இது போல் இன்னும் ஐந்து Adarsh பள்ளிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பஞ்சாப் அசோஸியேஷன் மூலம் கல்விக்கொடை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், அனைத்து பள்ளிப் பிரிவுகளும் ஏதோ ஒரு காரணத்தால் ஆண்கள் பள்ளியாகவோ அல்லது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியாகவோ இருக்கிறது. எங்கள் பள்ளியில் மட்டும் 8 ஆம் வகுப்பு வரை விதிவிலக்கு. அதற்கு பின் பெண்கள் அங்கு படிப்பதில்லை. 

8 ஆவது தேர்ச்சி பெற்றாலோ அல்லது சட்டென்று ஏற்படும் வயிற்றுவலிக்கு பின்னரோ எங்களுடன் படித்த பழகிய பெண்களை வாழ்கையில் நாங்கள் மீண்டும் பார்ப்பதென்பது அபூர்வம். எங்கள் பள்ளியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள Adarsh Vidyalaya Mat. Higher. Sec. என்கிற Girls Schoolல் சேர்க்கப்படுவார்கள். அதே ஃபீஸ் அதே பாடப் புத்தகம் அதே யுனிஃபார்ம் ஆனால் ஆண் வாசனையே இருக்காது. 

எங்கள் பள்ளியில் 9ஆவதிலிருந்து 12 வது வரை கடக்கும் மாணவர்களுக்கும் மியூஸிய பொம்மைகளுக்கும் பெரிய வித்யாசம் இருக்காது. ஆனால் அந்த ஒரு நாள் மட்டும், ராஜரத்தினம் ஸ்டேடியம் செல்லும் அந்த ஒரு நாள் மட்டும், அனைவரையும் சந்திக்கலாம். நடிகை சொர்ணமால்யா, ரஞ்சிதா, உல்லாசம் மகேஷ்வரி என்று பல பிரபலங்கள் எங்கள் பள்ளியின் பெண்கள் பிரிவில் படித்தவர்கள்.  ஆண்கள் பிரிவில்  இயக்குனர் A.L. Vijay, நடிகர் நித்தின் சத்யா, ஜித்தன் ரமேஷ் என்று நீளும். 

Sports day அன்று மட்டும் விடியற்காலையிலிருந்து சாயங்காலம் 6 மணி வரை ராஜரத்தினத்தில் எங்களின் ஆக்கிரமிப்பு அட்டகாசம் செய்யும். ஸ்டேடியத்தில் ஒரு காவல் அதிகாரி கிரவுண்டில் கால் எடுத்து வைக்க முடியாது.  அனைத்து மாணவர்களும் ஏதோ ஒன்றில் பங்குபெற்று கப்பும் மெடலும் வாங்குவதற்கு தயாராகிக்கொண்டிருப்பார்கள். பஞ்சாப் அசோசியேஷன் என்பாதால் பாண்டிமணி, கணபதி, தமீம் அன்ஸாரி கூட பாங்க்ரா நடனமாடுவதற்கு தயாராகுவார்கள். தன்வீர் என்றுமே 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கப் அடிப்பான். அதற்கு அவன் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகளைப் பார்ப்பதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். சொர்ணமால்யா எதிலும் பங்கெடுக்கத்தேவைஇல்லை. கேலரியில் நடந்தாலே காட்டு கத்தல் கத்தும். ஒட்டுமொத்த இடமுமே VIBEஆகிக்கொண்டிருக்க, எதுவுமே வராதவர்கள் மட்டும் ரெட் ஹவுஸ், ப்ளூ ஹவுஸ் என்று பிரிக்கப்பட்டு மார்ச் பாஸ்ட்டில் வதைக்கப்படுவார்கள்.

அந்த வருடத்திற்கான Sports Dayவில் நான் மார்ச் பாஸ்டிலிருந்து தப்பித்துவிட்டேன். ஆனால் ஸ்கூல் பேண்ட் என்கிற ஒரு புதுவித குழுவில் பெயர் கொடுத்தது தான் வினையாகிப்போனது. ஸ்கூல் பேண்ட் என்று கூறியவுடன் எதோ பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், BTS ரேஞ்சிற்கு நினைத்துக்கொண்டு பள்ளி முடிந்தபின் பெரிய கனவுடன் ஆட்டிடோரியம் செல்ல அங்கு எனக்காக காத்திருந்தது வேறு. 

1993ல் பேண்ட் மாஸ்டர் என்கிற சரத்குமார் படத்தில் வந்த வாத்தியக்குழு நினைவிருக்கிறதா. கிட்டத்தட்ட அதேதான். இன்னும் சொல்லப்போனால் அதைவிட மிகவும் பரிதாபமான ஒரு பேண்ட் க்ரூப் தான் எங்களுடையது. மார்ச் பாஸ்ட் செய்பவர்கள் தாளத்தில் நடப்பதற்காக வாசிக்கப்படும் குழு. 

ஜங் ஜங் ஜங்… அவ்வளவுதான். மிஞ்சிப்போனால் ஜ…ஜாங் ஜங் ஜங்…. அதைத் தாண்டி எதுவும் இல்லை. கற்றுக்கொடுக்கப்படவில்லை. அதிலும் வாட்ட சாட்டமாக இருப்பவர்களுக்கு Drums தரப்பட்டது. முதல் வரிசையில் நிற்கும் சற்று மாநிறத்தவர்களுக்கு Trumpet தரப்பட்டது. இருந்த இரண்டு பஞ்சாபிகளுக்கு முன்னுரிமையாக buggle தரப்பட்டது. மிச்சமிருப்பது Cymbel என்கிற வாத்தியம்  மட்டும்தான். கருப்பாக குள்ளமாக இருக்கும் எனக்கு அது தரப்பட்டது. Cymbel என்றவுடன் ஏதோ AR rahman வாசிக்கும் ஒரு அரேபிய ஐரோப்பிய ஸ்காட்டிஷ் துந்துபீ என்று நினைத்துவிட வேண்டாம். நமக்கு பழக்கமான கோவில் பஜனைகளில் ஓரமாக காதில் துளசியுடன் உட்கார்ந்து கொண்டு ஒருவர் ஜால்ரா அடித்து கொண்டிருப்பார் அல்லவா. அதுவே ஒரு ராட்சத அளவில் இருந்தால் அது தான் Cymbel. மிகப்பெரிய சைஸ் ஜால்ரா என்று புரிதலுக்கு வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளை முழுக்கை சட்டை அதன் குறுக்கே ஜிகுஜிகுவென்ற ஜொலிக்கும் நேவி ப்ளூ சாஷே, சப்பாத்தி Cap. Capபின் நுனியில் பறவை இறக்கை. இதைப்போட்டுக்கொண்டு எப்படி ப்ரீத்தியின் முன் நிற்பது என்கிற ஒருவித கலவரத்துடன் அரிதாரம் பூசிக்கொள்ளத்துவங்கினேன். எத்தனை Fair and Lovely தேய்த்தாலும் எத்தனை Gokul Santol   போட்டாலும் கருப்பு Grey ஆக மாறுமே தவிற கமலஹாசனாக மாறாது. 

ப்ரீத்தி 1000 மீட்டர்ஸ் ரேஸில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருப்பது தெரிந்தவுடன் தாளக் கருவியை வாசிப்பது கூட தவிப்பாயிருந்தது.left right ஜதி தப்பி எங்கெங்கோ போனது. 1000 மீட்டர் ரேஸ் என்பது எங்கள் பள்ளியில் மரணக் கிணறில் வண்டி ஓட்டுவது போல். Death race என்று முதல் பெஞ்சுகளால் சொல்லப்படும் திக் திக் போட்டி. எப்போதும் வேறு பள்ளியில் படிக்கும் நோஞ்சான் சிறுவர்கள் லவுட்டிக்கொண்டு போகும் மெடல். தேவையில்லாமல் ப்ரீத்தி எதற்கு ப்யர் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வாசிப்பதை நிறுத்தியது. அவளிடமே சென்று கேட்கலாம் என்று ஸ்டேடியத்தின் ஒரு கார்னரிலிருந்து மற்றொரு கேலரிக்கு நடக்க தூரத்தில் ஏதோஒ ஒரு போட்டி துவங்கியதின் சத்தம் கேட்டது. ஓடுவது தன்வீர் அல்ல, தன்வீர் 1000 மீட்டரில் கலந்து கொள்ள மாட்டான். தூரத்திலிருந்து ஆட்கள் நெருங்கவதற்கு நேரமாகியது. அனைவரும் மெதுவாக ஓடுவது தெரிகிறது. அப்படி என்றால் இது கண்டிப்பாக 1000மீட்டராகத்தான் இருக்க வேண்டும். கடைசி சுற்றில் வேகத்தை பிடிக்க முதல் சுற்றில் மெதுவாக ஓடுவது ஒரு யுக்தி. ஆனால் சைவ முத்தையா தெருவில் தினமும் காலை அப்பா அம்மா சண்டையில் கண் விழிக்கும் ப்ரீத்திக்கு இது தெரிந்திருக்க அவசியமில்லை. 

நோஞ்சான் பெண்களை பின்னுக்குதள்ளி எடுத்த எடுப்பிலேயே ப்ரீத்தி முதல் இடம். எனக்கு உள்ளே பொங்கிற்று. ரோமங்கள் நின்றது, ஜல்ல்ல்ல்ல் என்று மிகப்பெரிய சைஸ் ஜாலராவை நான் தூரத்திலிருந்து ஒலிக்க கூட்டம் என் பக்கம் திரும்பிற்று. ஹோ என்று மாணவர்கள் கத்த ப்ரீத்தி இன்னும் வேகம் பிடித்தாள்.  நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து தெரிவது விட பள்ளி கேலரியிலிருந்து இன்னும் நன்றாகத் தெரியும். நடந்து முன்னேறி வாசித்தபடியே செல்வதற்குள் என்னை சுற்றி கூட்டம் சூழ்ந்தது.    எவனோ நான் வாசித்த தாளாத்திற்கு இத்தா ஆஆ இத்தா ஆ இத்தா என்று பாடல் எழுப்ப விசில் பறந்தது. என்னை சுற்றி அப்படி ஒரு கூட்டம் சூழ்ந்தது அதுவே முதல் முறை. எக்கிப் பார்க்க ப்ரீத்தி அதிவேகமாக ஓடுவது தெரிந்தது. உள்ளுக்குள்ளே அப்படி ஒரு குதூகலம். இந்த முறை 1000 மீட்டர் கப் எங்கள் பள்ளிக்கே என்கிற உறுதி மேடையைக் கடக்கும்போது எங்கள் பள்ளி முதல்வர் முகத்தில் கூட தெரிந்தது. எங்கள் வாசிப்புக்கு அவர் மனதுள் நாக்கு கடித்து ஆடியிருக்க வேண்டும். மதுரை மைந்தர் என்பதால் அவர் சிரிப்பிலேயே அது உறுதியாகியது. மற்ற ஸ்கூலின் மாணவர்கள் எங்களை நெருடலாக பார்க்க சொர்ணமால்யாவும் அவள் தோழிகளும் விசில் அடித்து ரசித்தது எங்களை மேலும் மேலும் ஆட்டம் போட வைத்தது. அத்தனையும் ப்ரீத்திக்காக. 

Go Preeti Go.. இன்னும் ஒரே சுற்று. நீண்டு நெடுந்து கிடக்கும் ஒரே சுற்று. புல்லும் மண்ணும் கல்லும் கலந்த ராஜரத்தினம் ஸ்டேடியத்தை முழுவதுமாக சுற்றிமுடிக்க ப்ரீதித்யின் கழுத்தில் மெடலும் கையில் ஆளுயற பெயர் பொறித்த  கப்பும் மின்னும். இது உறுதி. நான் கேலரி வந்தடைந்தேன். அங்கே இன்னும் அடவடியாக ஆட்டம் ஆரம்பித்தது. 

யாரு yaa அவன்…இவ்ளூண்டு இருந்துட்டு எப்படி ஆடறான் பாரேன். 

அது கைல என்னடி…பெரிய சைஸ் ஜால்ராவா? பெண்கள் விசில் அடிக்க ஆடியது அதுவே முதல் முறை. காமெடி பீஸாக கருதப்பட வேண்டிய வாத்தியத்தோடு நான் 3000 மாணவர்கள் பார்க்கும்படி மாஸாக ஆட்டம் போட்டேன்.

மைக்கில் அறிவுப்பு சத்தம் கேட்டது. 1000 மீட்டர் ஓட்டத்தின் கடைசி சுற்று என்று உடைந்த ஆங்கிலத்தில் PT சார் அறிவிக்க, அந்த நொடி முதல் அத்தனையும் ஸ்லோ மோஷனாக மாறியது.  அருகே  அனைவரும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க என் கைகளில் சுற்றியிருந்த cymbelலின் கயிறை தளர்த்தினேன். அடுத்தவனுக்கு தாரைவார்க்க சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி ப்ரீத்தி ஜெயிப்பதை பார்க்க நகர்ந்தேன். பாம்பே அப்பளம் கடிக்கும் ஆனந்த், ஐஸ்கிரீம் விழுங்கும் கணிதம், வாய்பிளந்து நிற்கும் பயலாஜி, ஓடுபவர்கள் நெற்றியில் சொட்டும் வியர்வை வரை அனைத்தும் ஸ்லோ மோஷனானது. 

ஒரு திருப்பத்தில் யார் பள்ளி ஜெயிக்கப்போகிறது என்று தெரிந்து விடும். என் முழு கவனமும் இப்பொழுது அந்த திருப்பத்தில் மூழ்கியது. சுற்றியிருக்கும் ஆராவாரமும் காட்டுக் கத்தலும் என் காதுகளில் நின்றுவிட்டது. தூரத்தில் சொர்ணமால்யா நகம் கடிக்கும் சத்தமும், எழும்பூர் மணிக்கூண்டின் வினாடி முள்ளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. PT வாத்தியார் கடைசி ரவுண்ட் முடிவு என்பதால் முடிவுக்கான கொடியை உயர்த்தி பிடித்து தயாராகிக்கொண்டிருந்தார். அவர் முகத்திலும் அத்தனை கலவரம். வேலை போய்விடும் பயம். 

திருப்பத்தில் முதலில் கால்கள் மட்டும் ஓளிவடிவமாய் தெரிந்தது. வாய்பிளந்தபடி யார் கால்கள் என்று முகம் பார்க்க. Anna Adarsh ஷின் நோஞ்சான் பெண் ஓடிவருவது தெரிந்தது.  ஓடிய 8 பேரில் கடைசியாக 3 ரவுண்டில் வந்த நோஞ்சான் இப்போது முதல் இடம். மூன்று ரவுண்டுகளாக முன்னிலையில் இருந்த ப்ரீத்தி எங்கே என்று கண்கள் தேடியது. இதயம் துடித்தது. cymbelலின் தாளம் மாறி இதயத்துடிப்பின் தாளம் காதுகளை ஆக்கிரமித்தது. மனதிற்குள் பாடல் துவங்கியது.

தெளிந்த நிலவு பட்ட பகல் போல் எரியுதே

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே…

அடுத்து வேறு ஒரு பெண்…அதற்கு அடுத்து வேறு ஒரு பெண்…ப்ரீத்தி மூன்றாவது இடத்தில் கூட இல்லை. காது அடைத்துக்கொண்டு கண்கள் இருண்டது. பள்ளி முதல்வர் முகம் மாறி முன் சீட்டிற்கு வந்தார். PT வாத்தியார் கண்கள் விரிந்து விசில் ஊதினார். 

1000 மீட்டர் ரேஸ் ஒரு மரணக் கிணறு. என்ன வாசித்தாலும் சீராக தெரியும் பேண்ட் வாத்தியம் அல்ல. நாள் முழுவதும் சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த சக்தியையும் உரிந்து தூக்கியெறியும் திரண் கொண்ட death race. இதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ப்ரீத்தி இல்லை. அவள் ஜெயிக்கப்போவதும் இல்லை. ஆனால் நான்காவது இடமாவது வருமா என்று உற்றுப் பார்க்க அதிலும் வேறு பள்ளி மாணவி.எனக்கு முடிவு தெரிந்து விட்டது.  மூன்று சுற்றில் வேகமாக ஓடியதில் கண்டிப்பாக நாக்கு தள்ளியிருக்கும். அடிவயிரு சுருண்டிருக்கும். உதடுகள் வரண்டு வெடித்திருக்க வேண்டும். யுக்தி தெரியாமல் மயங்கி விழுந்திருப்பதற்கு வாய்ப்பும் இருக்கிறது. மனது அலறியது. ப்ரீத்தீ……

முழுக்கை சட்டையை சுருட்டினேன். சப்பாத்தி capஐ விட்டெறிந்தேன். சாஷேவை கழற்றியவாரு கூட்டத்தை விலக்கி ஓடத்துவங்கினேன். ஒரு சின்ன baricade அதை எகிறி குதித்தால் race track.

ப்ரீத்தி, மயங்கி விட்டாயா, தண்ணீர் வேண்டுமா, இதோ வருகிறேன். வீட்டுப்பாடத்தை எழுத பேப்பரை கிழித்து தியாகம் செய்த எனக்கு தெரியாதா உனக்கு எது ஆபத்து என்று. கொஞ்சம் பொறுத்துக்கொள். 700 ஆவது மீட்டர் திருப்பத்தில் நீ விழுந்திருக்க வேண்டும். யார் கண்ணிலும் படாத ஒரு Blind Spot அது. ஆனால் எனக்கு விளங்கிற்று. இப்பொழுதும் உன்னை நான் தான் காப்பாற்ற வேண்டும். அலைபாயுதே பாடலை மனதிற்குள் நினைத்துக்கொள். உயிர் காக்கும் பாடல் அது. நான் உன்னை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன் ப்ரீத்தி..ப்ரீத்தீ….

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

நான் எகிறி குதித்தேன். மண் புழுதி பறந்தது. என்னை கடந்து ஓட்டப்பந்தயப் பெண்கள் கடைசி 200 மீட்டருக்கான வேகத்தை எடுத்தார்கள். நான் அவர்களைவிட வேகமாக ஓட முடிவு செய்து களமிறங்கினேன். அருகே இருப்பவனின் தண்ணீர் பாட்டிலை பிடுங்கி ஓட்டம் எடுத்தேன்.

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையிரு கழலெனக்-அளித்தவா

நான் இருக்கும் இடத்திலிருந்து நேராக 200 மீட்டர் தூரத்தில் ப்ரீத்தி துவண்டு படித்திருப்பது தெரிந்தது. தண்ணீர் பாட்டிலை இருகப்பிடித்துக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினேன். கண்கள் லேஸாக பனித்தது, கால்கள் எதற்காகவோ என் பேச்சை கேட்க மறுப்பது போல் ஒரு எண்ணம். என் இதயத்துடிப்பின் சத்தம் என் காதுகளுக்கு இன்னும் அதிகமாக கேட்க துவங்கியது. வியர்த்தது. கண்கள் பனிப்பது நின்று மொத்தமும் மங்கலானது. இறுகப்பிடித்திருந்த வாட்டர் பாட்டில் கை நழுவி விழுவது தெரிகிறது ஆனால் அதை பிடிப்பதற்குண்டான வலு என்னிடம் இல்லாதது போல் ஒரு எண்ணம். என்ன நடக்கிறது எனக்கு? என்ன நடக்கிறது இதோ வந்து விட்டேன் ப்ரீத்தி…நான் தான் உன்னைக் காப்பாற்ற்ற்ற்ற்ற்ழ்ழ்ழ்ழ்ழ்….

எனக்கு தலைசுற்றி மொத்தமும் இருண்டு போனது. பின்னால் திரும்பிப் பார்க்க இன்னொரு கூட்டம் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நான் நிற்க வலுவில்லாமல் கால் கோணலாக நாக்கு வெளியே தெரிய தொப்பென்று விழுந்தேன். கடினமாக இருந்தாலும் கண்கள் மட்டும் மிகுந்த சக்தி கொண்டு மேல் இமையை விலக்குவதற்கு புத்தி கட்டளையிட என் நண்பன் சக்தி என்னை நோக்கி ஓடிவருவது தெரிந்தது. அவன் பின்னால் இனிமேல் நாம் பிரியவே மாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் செய்த ஆனந்த். அதன் பின் முதல் ரேங்க் அப்பாஸ். Cymbel பிடித்துக்கொண்டிருந்த தமீம் அன்சாரி. இன்னொரு திசையிலிருந்து ஸ்கூல் பேண்ட் சகாக்கள் என்று ஒரு பாசக் கூட்டமே ஓடிவருகிறது. நான் நிம்மத்தியாக கண்கள் மூடினேன். தண்ணீர்…தண்ணீர்….வாட்டர் பாட்டில் என்று கைகள் விரித்தேன். வாட்டர் பாட்டில் விழுந்து நேரம் ஆனது கண்கள் மூடியதும் விளங்கியது. சாப்பிட மறந்து ஆட்டம் போடலாம். ஓட்டம் எடுக்கலாமா? மனதில் பதபதைப்பை வைத்துக்கொண்டு ஓட்டம் எடுக்கலாமா?

காதுகள் மட்டும் அரசல் புரசலாக வேலை செய்கிறது. ஓடிவரும் சத்தம் என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நெருங்கும் சத்தம் என்னை கடந்து போவதும் உணரமுடிகிறது. மனதில் சக்தி சக்தி தண்ணி கொடுடா என்று கெஞ்ச, மெதுவாக கண்கள் திறந்தது. தலை தூக்கி பார்க்க இரண்டு இஞ்ச் இடைவெளியில் தண்ணீர் பாட்டில் இருப்பது தெரிந்தது. தட்டி தட்டி அதை நகர்த்தி பாட்டில் திறக்க. எதிர் பக்கம் வந்த கூட்டம் இன்னும் வேகமாக என்னை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

முதல் ரேங்க் அப்பாஸ் நிற்கவில்லை. ஸ்கூல் பேண்ட் சகாக்களின் குரல் க்ளூக்கோஸ் எடுத்திட்டுவாங்க என்று கூறுவது கேட்கிறது. கட்டளையிட்ட மறு நொடி க்ளூக்கோஸ் பவுடர் என்னைத்தாண்டியும் செல்கிறது. முழு சக்தியையும் ஒரு நிலைப்படுத்தி தலைத்தூக்கி திரும்பிப் பார்க்க என் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் கூட என் அருகில் இல்லை. என்னை தாண்டி இன்னும் 50 மீட்டர் இடைவேளியில் மயங்கிக் கிடக்கும் ப்ரீத்தியுடம் மொய்த்துக்கொண்டிருந்தார்கள். 

ஒருவன் க்ளூக்கோஸை கிழிக்க, அதை அக்கறையுடன் கையில் எடுத்து ஒருவன் ஊட்டிவிட, மற்றொருவன் தண்ணீர் பாட்டிலை பன்னீர் தெளிக்கும் சொம்பாக மாற்றி அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க, ஒருவன் ஷூ சாக்ஸ் நீக்கி காலை பரபர என்று தேய்த்துவிட, மற்றொருவன் அதே வேலையை உள்ளங்கைக்கு செய்துவிட நான் 50 மீட்டர் இடைவெளியில் தனியாக கேட்பார் இல்லாமல் படுத்துக்கிடந்தேன். பாவிகளா என்று மனதில் தோன்றியது. 

அப்பொழுதே பாதி அறுந்து போனது. பின்னர் உயிரை காப்பிற்றியதாக நினைத்து கொண்டிருந்த ஸ்கூல் பேண்டில் ஒருவனை தனியாக கூப்பிட்டு  ப்ரீத்தி நன்றி சொன்னதை பார்த்த போது மொத்தமும் அறுந்து போயிற்று. உனக்காக தான் நான் ஓடிவந்தேன் ப்ரீத்தி, உனக்காகத் தான் அந்த ஆட்டம். 3000 பேரும் துள்ளி குதித்து ஆட்டம் போடவைத்தது உனக்காகத் தான். மூச்சிறைக்க நீ ஓடும் போது உனக்கு உத்வேகம் தந்த அந்த விசில் சத்தமும் என்னால் தான். நீ மயங்கியது யாருக்கும் புரியவில்லை, எனக்கு மட்டும் விளங்கிய உள்ளுணர்வை நீ ஏன் புரிந்து கொள்ளவில்லை ப்ரீத்தி. அந்த வயதில் நான் யாருக்காகவும் ஓடியதில்லை, யவருக்காகவும் கோமாளியானதில்லை. வீட்டுப்பாடம் கிழித்ததில்லை, சுளீர் சுளீரென்று அடிவயிறு கனக்கும் வரை அடி வாங்கியதில்லை. எழுந்திருந்து ஏன் நீ என்னை தேடவில்லை. விட்டால் போதும் என்று ஏன் அங்கிருந்து தப்பித்து சென்றாய். அருகே யாரோ படுத்திருப்பது தெரியவில்லையா. பதட்டமா? வெட்கமா? அய்யோ பதட்டதிலும் வெட்கத்திலும் புதைந்து கொண்டால் திசை தப்பிவிடுமே. உன்னிடத்திலிருந்த அந்த முதல் _____ தள்ளிப்போய்விடுமே. தள்ளிப்போயிற்று.

அங்கே படுத்துக்கிடந்த நான் எழுந்துகொள்ள பல வருடம் ஆயிற்று.

அடுத்த சில நாட்களிலேயே நிஜமாகவே வயிற்றுவலி காரணமாக ப்ரீத்தி பள்ளிக்கு வருவது நின்று போயிற்று. பெண்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டாள் என்கிற செய்தி மட்டும் வந்தது. முதல் இரண்டு பேப்பர் கிழித்து கொடுத்த கையோடு வாழ்கையில் physics என்பது சுத்தமாக வராமல் போனது. 8 ஆவது  வகுப்பு கடைசிவரை முதல் பெஞ்சில் ப்ரீத்தி இல்லாமல் தனியாகவே அமர்ந்திருந்தேன்.

இவ்வளவு தானா இதுதான் முடிவா. இதெப்படி Breakup ஆகும். இதெப்படி முடிவாகும். இது காதலே இல்லை என்று கூறும் போது இது break upம் இல்லைதான். 

ஆனால் அந்த ப்ரீத்தியை அதன் பிறகு பார்க்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. அடிக்கடி நெருடல் தரும் நினைப்பாக, அழகு நிறத்துடன், உதட்டோரச்சிரிப்பாக, கண்கள் சொருகவைக்கும் நினைவாக மனதுள் வந்து போவது மட்டுமே வழக்கம்.

12ஆவது முடித்து ஒரு கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு queவில் மீண்டும்  ப்ரீத்தியை சந்தித்தேன். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *