Suryaa's Blog

எங்கள் காதல் ஒரு தினுசு – அத் 4

வெறும் ஜன்னலோடு மட்டுமே அந்த காதல் முடிவடைந்திருக்க வேண்டும். சிட்டுக்குருவியை கூண்டில் அடைத்து வைத்திருக்க வேண்டும். கருப்புக்குடையை மடித்து சுருட்டி ஓரமாக வைத்திருக்க வேண்டும், ஜன்னலை வேகமாக சார்த்திவிட்டு பாடப் புத்தகத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். செய்ய முடியவில்லை. காரணம் அந்த முகம். சுலபமாக நினைவிலிருந்து அழிக்க முடியாத முகம். அந்த முகவெட்டில்  எங்கள் பள்ளியில் யாருமே இல்லை. அந்த நிறத்தில் எங்கள் தெருவில் கூட யாரும் இல்லை. அனைத்தயும் தாண்டி இதுவே முதல் முறை என்பதால் மறப்பதும் எளிதல்ல. 

பல நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும் போது ஏற்படும் குதூகலம் என்றுமே அளவில்லாதது. என்னுடைய நீண்ட நாள் நண்பன் பால்ய சினேகிதன் சக்தியை மீண்டும் சந்திக்கப்போகிறேன் என்று என்னை சுற்றியிருந்த சகலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். சக்திக்கும் எனக்கும் இருக்கும் நட்பை ஒரு 100வரிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்படி ஒரு ப்ரியம். நட்பின் இலக்கனம். LKG முதல் 7வது வரை ஒரே வகுப்பு. எக்கச்சக்க ஒற்றுமை. வகுப்பு இருக்கையில் கூட எங்களை யாரும் பிரிக்க முடியாதவர்களாய் இருந்தோம்.

பள்ளியின் கதவுகள் க்க்க்ரீச்ச்சிட்டு திறக்க பாய்ந்து ஓடும் புத்தாடை கூட்டத்தில் நானும் சக்தியும் பல நாட்கள் கழித்து கை கோர்த்துக்கொண்டோம். பரஸ்பரம் சின்னச் சின்ன கேள்விகளுக்கு பின் கட்டியணைத்துக்கொண்டோம்.

டேய் கிளாஸ் போட்டுட்டாங்கடா என்று எல்லோர் வகுப்பிலும் உள்ள அந்த ஆனந்த் கத்தியபடி ஓடி வர, இந்த முறையும் ஒன்றாக ஒரே வகுப்பில் இருக்கப்போகிறோமா என்று நானும் சக்தியும் நோட்டீஸ் போர்ட் நோக்கி நடந்தோம். அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை, ஆனந்த் வெளியே கூட்டத்தை விலக்கி துள்ளிகுதித்து வந்தான். 

இந்த முறை நீயும் சக்தியும் ஒரே கிளாஸ்ல இல்லை. சக்தி என் கிளாஸ். இனிமே எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று வெற்றிகுறியிட்டு சக்தியை அணைத்துக்கொண்டான். அவர்களை கொண்டாடியபடி ஒரு கூட்டம் என்னைக் கடந்து நகர்ந்தது.

இடிவிழுந்தது போல நான் அங்கேயே நின்றேன்.  ஊர்ஜிதப்படுதிக்கொள்ள கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றேன். ஆள் காட்டி விரலால் சக்தியின் பெயர் பலகையில் என் பெயர் தேடினேன். அதில் இல்லை. பின்னர் என் பெயர் எந்த லிஸ்ட்டில் உள்ளது என்று பார்க்க ‘A section’ல் கடைசியாக தொங்கி ஊசலாடிக்கொண்டிருந்தது. 

முகம் தொங்கியபடி வெளி நடப்பு செய்ய மழை மேகம், லேசாக வீசும் காற்று, சட சட என்று பறந்த குருவிக்கூட்டம் கடவுள் அம்ஸத்தை ஒரு வினாடி நினைவு படுத்திச் சென்றது. நினைவு வந்த நேரம் உள்ளே பாடல் கேட்டது.

நிலைபெயராது சிலை போலவே நின்று 

நேரமாவதறியாமலே மிகவினோதமாக முரளீதரா என் மணம்…அலைபாயுதே..

சட்டென்று மீண்டும் கூட்டம் விலக்கி ப்ரீத்தியின் பெயரைத் தேடினேன். A sectionல் இல்லை. அடுத்து அருகே இருப்பவனை நகர்த்திவிட்டு B sectionல் தேட அதிலும் இல்லை. C sectionற்கு தாவி அதிலிருக்கும் ஒவ்வொரு பெயரையும் வினாடிப்பொழுதில் படித்து கடக்க , இன்றைய தினத்து ராசிபலனில் என் ராசிக்கு எதிராக இடிதாங்கி என்று எழுதியிருக்க வேண்டும்.  சக்தி படிக்கும் அதே வகுப்பில், C sectionல் அவள் பெயர் இருந்தது. நான் வெடித்து சிதறியது என் காதுகளுக்கு மட்டுமே கேட்டிருக்கக் கூடும்.

கூட்டத்தில் எவன் சிரித்தாலும் என்னைப்பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அது கூட பரவாயில்லை எட்டாவது வகுப்பிற்கு தேர்ச்சி பெற்ற அத்தனை பெண்களும் சக்தியின் வகுப்பில் இடம் பிடித்திருந்தது அவனை கண்ணன் ஆக்கியது. நான் கம்ஸன் ஆனேன்.

முகம் தூக்கிவைத்திருந்தால் வீட்டில் ஏக கவனிப்பு ஏற்படும். அனைவரும் என்னை சிரிக்க வைக்க வேண்டும் என்று சகல வித சம்பாஷனைகளில் ஈடுபடுவார்கள். பிடித்த உணவு, கூடுதல் டிவி நேரம், சில சமயம் பிடித்த பொம்மை வரை நீளும். அன்று என் கவலையை யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக கிண்டலடித்து  விளையாடிக்கொண்டிருந்தார்கள். 

சக்தி இல்லைன்னா ஆனந்த் இருக்கான். அவனும் உனக்கு நல்ல ஃபிரெண்டு தானே.

இல்லை, இந்த தடவ சக்தியும் ஆனந்தும் ஒரே கிளாஸ்.. என் கண்ணு முன்னாடி எப்படி குதிச்சிட்டு போனான் தெரியுமா. நான் ஜன்னல் அருகே அமர்ந்தபடி கதர, அன்றைய ஜன்னல் அனல் கக்கிக்கொண்டிருந்தது.

நல்லது இனிமேலாவது நீயே உன் ஹோம்வர்க்க செய்வ…ராத்திரிக்கு இட்லி உப்புமா செஞ்சு தர்றேன் சாப்பிட்டா எல்லாம் சரியாகிடும் என்று வகைவகையாக சுற்றியிருப்பவர்கள் கடுப்பை கிளப்பிக்கொண்டிருக்க ஆறுதலாக ஒருவர் மட்டும் வீட்டிறிக்குள் நுழைந்தார்.

அப்பா. அன்றைக்கு நிறைய எழுதியிருக்க வேண்டும். நான்கு ஐந்து பத்திரிகைகளுக்கு அட்லீஸ்ட் கதை எழுதி அனுப்பிருக்க வேண்டும். துள்ளலாக அதீத சந்தோஷத்துடன்  ‘ராஜ ராஜ சோழன் நான்….என்னை ஆளும் காதல் தேசம் நீதான்’ என்று பாடியபடி வீட்டுக்குள் நுழைந்தார். 

சோகமாக இருப்பது தெரியவேண்டும் என்று நான் வெடுக்கென்று முகம் திருப்பியதில் அவருக்கு புரிந்தது.

அக்காவைப்பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க, படித்துக்கொண்டிருந்தவள் லேசாக சிரித்து விட்டு மீண்டும் புத்தகத்திற்குள் மூழ்கினாள்.

தோளில் தொங்கிக்கொண்டிருந்த காட்டன் டவலை உதறி கழுத்தில் ஒரு ராஜாவை போல் கட்டிக்கொண்டார். 

ராஜேந்திரா………. என் புதல்வா…….. ஏன் இத்தனை அமைதி..… என்று  நிஜமாகவே அடிவயிற்றிலிருந்து குரல் உயர்த்தி கத்த எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

நாம் கொண்ட சோழ தேசத்தில் ஏதேனும் பிரச்சனையா… என்று வீராவேசத்துடன் கேட்க நான் பேஏஏஏஏ என்று அழத்துவங்கினேன். 

டேய் டேய் டேய் என்று சகஜ நிலை திரும்பி சமாதானப்படுத்த, அம்மா அக்கா பெரியம்மா என்று சூழ்ந்து கொண்டார்கள்.

சத்தியமா நான் எதுவும் பண்ணல, என்ன ஆச்சுன்னுதான் கேட்டேன் உடனே அழ ஆரம்பிச்சிட்டான். 

நீங்களே நல்லா கேளுங்க. அவன் ஸ்கூல்ல என்ன ஆச்சுன்னு என்றதும் அப்பா என்னை ஊடுருவிப் பார்த்தார். 

மறு நாள் காலை நான் எங்கள் பள்ளி முதல்வர் அறையில் கை கட்டி நின்றிருந்தேன். பள்ளி முதல்வர் என்னை கவலையாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முன்னால் அப்பா சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தார்.

ஏன் சார். நாங்க எது ஒன்னு செஞ்சாலும் பசங்க நல்லதுக்கு தான் செய்வோம்னு ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க. இவன் ஏழாவது பாஸ் பண்ணினதே பெரிய விஷயம் பாலா சார். நிறைய டைவெர்ஷன்ஸ். ரிப்போர்ட் கார்ட அனுப்புறோமே.. பார்க்குறீங்களா? இப்பையாச்சும் பாருங்க சார், பச்சை மையவிட சிவப்பு மை தான் அதிகமா இருக்கு என்று ரிப்போர்ட் கார்டை முன் வைத்தார்.

எங்க கிட்ட விட்டுடுங்க சார் 8ஆவது எப்படி படிக்கிறான்னு நானே இவனை பர்ஸனலா பாத்துக்குறேன் என்று என்னைப் பார்த்து விஜய்காந்த் போல் பல் கடித்தார். 

இல்லை சார். என் பையன் நல்லா படிக்கணும்னு நான் உங்க ஸ்கூல்ல சேக்கல. அப்படி சேர்க்கணும்னா இங்க நிறைய பள்ளிக்கூடம் இருக்கு. என் பையனுக்கு ஒரு சர்க்கிள் வேணும். நல்ல ஃபிரண்ட்ஸ் வேணும். அவன் கிளாஸ்ல ஏழை பணக்காரன் படிக்கிறவன் படிக்காதவன் விளையாடறவன் விளையாட வைக்கிறவன் எல்லாரும் இருக்கனும். வெறும் படிப்பு மட்டும் சொல்லிகொடுக்குற ஸ்கூல்ல இது கிடைக்காது சார்.   இப்போ அவனுக்கு நல்ல சர்கிள் கிடைச்சிருக்கிறதா நம்பறான். அதை நாம்பளே உடைச்சோம்ன்னா இன்னோரு 8 வருஷம் ஆகும் அவனுக்கு திருப்பி நல்ல ஃபிரண்ட்ஸ் கிடைக்க. அதுக்குள்ள ஸ்கூல் முடிஞ்சிடும். அதனால..

அதனால? முதல்வர் இருக்கையின் நுனிக்கு வந்தார்.

கிளாஸ் மாத்திடுங்க சார். என்ன செக்‌ஷன் சூர்யா.

8th C என்று நான் தலை நிமிராமல் பதில் சொல்ல. முதல்வர் என்னை பரிதாபமாக பார்த்தார். டேபிளில் தூங்கிக்கொண்டிருந்த  ஃபோனை சுழற்ற என் முகத்தில் தொலைந்த சிரிப்பு லேசாக எட்டிப்பார்த்தது. அதை அப்பா கவனித்திருக்க கூடும்.

முதல்வர் அறைக்கு வெளியே நான் சந்தோஷமாக நடக்க, அப்பா என்னை நிறுத்தினார். என் முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்தார். உனக்காக என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேன். எனக்காக நீ ஒன்னே ஒன்னு மட்டும்தான் பண்ணனும். நான் சிரித்தபடி வேகமாக தலையாட்ட….

நல்லா படிக்கனும். இந்த தடவ Rank வாங்கனும். first second தான் வாங்கனும்னு அவசியம் இல்லை. என் புள்ள அது வாங்கவும் வேண்டாம். நான் படிச்ச காலத்துல இப்படி ஒன்னு ரெண்டுன்னு Rank எடுத்தவன்லாம் இன்னிக்கி என்ன பாத்தா எழுந்து நின்னு வணக்கம் சொல்றான். அதனால எனக்கு அது மேல நம்பிக்கை இல்லை. ஆனா pass பன்றா மாதிரி, வெளில சொல்லிக்கிற மாதிரி ஒரு Rank வாங்கனும். 40 பேர் படிக்கிற கிளாஸ்ல நீ 40வது rank வாங்கினா கூட தப்பு இல்லை. ஆனா Rankகே இல்லாம இருக்கிறது தான் தப்பு. அவர் கண்களில் சின்னதாக தீ எட்டிப்பார்த்தது.

நான் அவரை சற்று வருத்ததுடன் பார்த்தேன். தன் பாக்கெட்டிலிருந்து  ஒரு சிகப்பு கலர் ஜெம்ஸ் சாக்லேட் டப்பா எடுத்து நீட்டினார்.  அவரை கட்டி அணைத்துக்கொண்டேன். முத்தமிட்டு 8th cயை நோக்கி நடக்கத்துவங்கினேன்.

சற்று தூரம் நடந்த என்னை மீண்டும் நிறுத்தினார். 

இவ்ளோ டிராமா, அடம், பிடிவாதம், அழிச்சாட்டியம் எல்லாம்…… சக்திக்காகவா? இல்ல வேற யாருக்காச்சுமா?

நான் திருதிரு என்று முழித்தேன். 

சரி. ஆல் தி பெஸ்ட் என்று காரிடார் அதிரும்படி மீண்டும் கத்திவிட்டு  அங்கிருந்து நகர்ந்தார். அப்பாவின் வண்டி கிளம்பி, பள்ளியின் கேட் தாண்டும் வரை நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி இந்த மனுஷன் கரெக்ட்டா கண்டு பிடிச்சாரு என்கிற கேள்வி மட்டும் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *