“40வது பிறந்த நாள்”. இதை தட்டச்சில் விரல் வழியாக அடிக்கும்போது 450 என்று தவறுதலாக அடிக்க நேர்ந்தது. க்ஷண நேரத்தில் அறிவியல் அலசல் செய்யதுடித்தது சிறுமூளை.
400 வருடம் கடந்து ஒருவன் வாழ முடியுமா. வாழ்ந்தால் என்னவாகும். அவன் உடல் எப்படி இருக்கும். ரோமம் உதிர்ந்து, பற்கள் கொட்டி, தோள் தொங்கி என்று சில வினாடிக்குள் மனது எங்கெங்கோ சென்று மீண்டும் நிஜத்திற்கு வந்தது.
40 வயது கடந்தது அப்படி இல்லை. சட்டென்று கடந்து விட்டது போல் இருக்கிறது. உடம்பில் இன்னும் தெம்பும் திமிரும் கோபமும் இளமையும் அப்படியே இருக்கிறது. ஆனால் புத்தியும் மனதும் நிறைய மாறிவிட்டது. மேற்கூறிய தெம்பு திமிர் கோபம் இளமை அத்தனையையும் இப்பொழுது புத்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னே இருந்த மூர்க்கம் இப்பொழுது இல்லை. என்னதான் புத்தி எடுத்துக்கூறி காப்பாற்ற முயன்றாலும் அதைப்பொருட் படுத்தாமல் வாழ்ந்த வயதை மேடு பள்ளம் என்று ஏறி இறங்கி கடந்தாகி விட்டது.
இன்றும் கோபம் வரும், ஆனால் அதை கடக்க கற்றுகொடுக்கப்பட்டது. யார் சொல்லிக்கொடுத்தது? தாயா? தந்தையா? தோழனா? இல்லை. இதை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது. காலம் மட்டுமே வாழ்தலின் அனுபவத்தில் புரியவைத்துவிடும். இன்று முஷ்டிவரை சட்டைக்கையை மடித்து கட்டி முடிந்தவரை கையில் அனிந்திருக்கும் பஞ்சாபி கடாவை இழுத்துவிட்டு, தலைமுடி முகத்தில் விழ பைக்கில் அமர்ந்து கொண்டு கோபமாக எவனை அடிக்கலாம் என்று காத்துக்கிடப்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நானும் அங்கிருந்திருக்கிறேன். அப்படி செய்திருக்கிறேன். கோபம் தீர பல பேரை அடித்திருக்கிறேன். காவல் நிலையம் சென்றது கூட உண்டு. மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து ஓடியது பல முறை. இதற்காக இன்னாருக்காக என்றில்லாமல் எங்கு சண்டை நடந்தாலும் மூக்கை நுழைத்து கோபம் தீர்த்துக்கொண்ட வயது அது. Been there. Done that. No regrets. ஆனால் நான் மாறினேன்.
இன்னும் சில காலம் தாண்டி வேறு விதமாக கோபம் தீர்த்த சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நான் மதிக்கும் ஒருவர் மீது கொதிக்க கொதிக்க காபியை தம்ளருடன் வீசியது. குரூரம். நினைத்தால் உடம்பு நடுங்குகிறது. வயதில் பெரியவர். புகழின் உச்சம் தொட்டவர். யோசிக்காமல் நான் தரை இறங்கி குடித்துக்கொண்டிருந்த காபி தம்ளரை முகத்திற்கு நேராக வீசினேன். 60 வயது பெரியவரை கொண்ணுடுவேன் ங்கோத்தா என்று மிரட்டியது பிழை. வயது செய்யும் பிழை.
இந்தப்பிழையிலிருந்து பல பேர் தப்பிப்பதில்லை. ஆனால் வெகு சிலரே திருத்திக்கொள்கிறார்கள். வெகு சிலரே கோபத்தையும் கடாவையும் கழற்றி காபி தம்ளர் என்பது ருசித்து குடிப்பதற்கு மட்டுமே என்று அமைதி கொள்கிறார்கள். அதற்கு காரணம் வெகு நிச்சயமாக காதல் தான். முரட்டுத்தனமான ஸ்னேகிதம், பழக்க வழக்கம், இஷ்டத்திற்கு சுற்றித் திரிந்துவிட்டு வீட்டிற்கு அரைபோதையில் வந்து உட்கார்ந்து விடிய விடிய டீவி பார்த்துவிட்டு பகல் முழுவதும் தூங்கி மீண்டும் அரக்கபரக்க சாராயம் தேடி ஓடின காலகட்டத்திலிருந்து மாற்றியது காதல் தான்.
பல காதல்கள் என்னை உருமாற்றியது. பல பெண்கள் என் வாழ்வில் என்னைக்கேட்காமல் உரிமை எடுத்துக்கொண்டு என்னை மாற்றிவிட்டு காணாமல் போயிருக்கிறார்கள். பல காதல்கள் போகட்டும் என்று விட்டிருக்கிறேன். இறுகப்பிடிப்பது மட்டும் காதல் இல்லை தளரவிடுவதும் தள்ளிப்போவதும் கூட காதல் தான் என்று என் படத்தில் வசனம் எழுதியிருக்கிறேன்.
எப்படிடீ என்னவிட்டு போகலாம் என்று மீண்டும் கடாவை மாட்டிக்கொண்டு மீசை முறுக்கி சுற்றாமல். அடச்சே! இதுல என்ன இருக்கு பரவால்ல..நீ பாத்துக்கோ என்று வாழ்த்து கூறி கைகுலுக்கி வழியனுப்பி வைத்த காதல்கள் என்னை மனிதனாக மாற்றியது.
ஒரு சில காதலின் நினைவுகள் இன்னும் எனது அலமாரியில் சின்ன பெட்டியில் பூட்டிவைத்திருக்கிறேன். அவ்வப்போது எடுத்துப் பார்க்க மிக அழகான நினைவுகள் சூழ்ந்து கொள்கிறது. கைப்பட எழுதிய காதல் வார்த்தைகள், சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள், என்ன கைவிட்டுடாத. நானும் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து போடப்பட்ட மோதிரங்கள் மட்டும் 4 இருக்கிறது.
இதில் எனக்கு வெட்கம் இல்லை, அவமானம் இல்லை. நான் துரோகம் செய்தவன் இல்லை. நான்கு பேரையும் ஓரே நேரத்தில் காதலித்த மூர்க்கனில்லை. என்னுடைய காதல்கள் மிக சுத்தமானவை, அற்புதமானவை, கதை சொன்னாலே மனதை மாற்றிவிடும் சக்திகொண்டவை. உள்ளம் உருகி அழவைக்கும் காதலும் உண்டு, குலுங்கி சிரிக்கவைக்கும் காதலும் உண்டு. ஆனால் அத்தனையும் ஆழமானவை. ஒளிவு மறைவு இன்றி நடந்தேறியவை. வேண்டாம் போதும் என்று முடித்துக்கொள்ளும் போது அழகாக பேசி கண்ணும் கண்ணும் ஊடுருவிப் பார்த்து, அந்த கடவுளைப் போல் ஐந்து நிமிடம் மனதளவில் மட்டும் முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டு பிரிந்தவை. இன்று வரை அனைவரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கஷ்டம் பகிர்ந்துகொள்கிறார்கள். சந்தோஷமாய் சிரித்து கட்டிக்கொள்கிறார்கள். கண் ஊடுருவிப் பார்க்கிறார்கள். இரண்டு பேர் நேற்று வாழ்த்தும் கூறினார்கள். உறவின் அர்த்தம் மாறியதே தவிர காதல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பல காலம் வாழும்.
அப்படிப்பட்ட ஒரு காதலை எப்படியும் விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து கரம்பிடித்தது தான் சுகன்யா என்கிற சுகன்யா பாபு. கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் சூர்யா இது செட் ஆகாது நல்ல ஃப்ரெண்ட்ஸாவே இருந்துடுவோம். கடைசியா ஒரு தடவ நான் என் அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்து உன்னையும் உன் வீட்டையும் பார்த்துட்டு கிளம்பிட்றேன் என்று சொன்னவளே இன்று என் better half. படிக்கப்போறேன் சூர்யா. Phd பண்ணப்போறேன். ஃபேஷன் டிஸைனிங்க்ல பெரிய ஆள் ஆகப்போறேன் என்று சென்றவள் இன்று என் வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கிறாள். எவ்வளவோ காதல்கள் விட்டுப்போயிருக்கிறது. இதை விடவே கூடாது என்று முடிவெடுத்தது அந்த ஒரு நாள் தான்.
அப்பா அம்மா அண்ணி என்று குடும்பமாக வீடுவரை வந்து ஸ்னேகிதமாக அப்பாவை பார்த்துவிட்டு செல்லவேண்டிய நாள்.
இரண்டு வீடும் வட்டமாக உட்கார்ந்து பேசத்துவங்கியது(என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்று மற்றொரு ப்ளாகில் கூறுகிறேன்). இது சரியா வரும் சார் என்று அப்பா பாபுசாரிடம் நம்பிக்கை கொடுத்தவுடன் இரண்டு குடும்பமும் சேர்ந்து நிச்சயம் பேசி ஒப்புத்தாம்பூலம் மாற்றிக்கொண்டார்கள். இன்று அத்தனை சந்தோஷமும் சோகமும் துக்கமும் சுகன்யாவுடன் பகிர்ந்து கொள்ளும்போது மிகப்பெரிய நம்பிக்கை பிறக்கிறது. ஒருத்தியாலே 40 வருடமும் நிறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. வேறு யார் இருந்திருந்தாலும் திருப்பி குடித்திருப்பேன், புகைத்திருப்பேன். மீண்டும் கடா அணிந்திருப்பேன். இன்று இந்த நாற்பது வயதில் சினிமா, அயான், ஆன்யா மீண்டும் சினிமா என்று நிறைவான வாழ்க்கை வாழ என் அடிப்பட்ட காதல்களைத்தாண்டி வேதனைகளைத்தாண்டி புரிதலுடன் வாழும் சுகன்யாவும் ஒரு காரணம்.
40 வயது வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் என் வாழ்வு காதலால் நிரம்பியிருக்கிறது என்பது தத்ரூபமாக தெரிகிறது. பாட்ஷா பட வசனம் போல நாடி நரம்பு ரத்தம் எல்லாம் காதலால் திணிக்கப்பட்டிருக்கிறது. காதலால் உருவான உடல், உருவம், மனது, புத்தி இன்று காதலாலே வாழ்ந்தும் கொண்டிருக்கிறது. இன்னும் பல தூரம் கடக்கும், காதலுடன்.
அவ்வளவு தானா. ப்ளக்க புடிங்கியாச்சா. இதற்கு மேல் காதலே உங்களுக்கு வராதா, இருக்காதா என்கிற கேள்விக்கு. Life begins at 40 என்கிற வாக்கியமே பதில்.
Cheers!