வேலைப்பளு முதுகுத்தண்டில் கழுத்தில் தோள்பட்டையில் உச்சந்தலையில் அதிக வாடகை கொடுத்து குடிகொண்டிருக்கிறது. அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறது. நேரம் இருப்பினும் சிந்தனை முழுவதும் திசையற்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. எழுத வேண்டும் என்கிற நினைப்பு ஏற்படும் போது கூட கவனச்சிதறல்களால் ஆக்கிரமித்து படுத்தி எடுக்கிறது. மொட்டைமாடியில் உலறும் துணி எடுக்கவேண்டும், மூன்று நாட்களுக்கு ஒருமுரை தண்ணீர் கேட்கும் மூங்கில் செடி, கைகளுக்கு சானிடைசர், குழந்தையின் மருந்தளவு என்கிற பட்டியல் வேலைகள் மறந்து கருவிழிகள் சுருங்காமல் விரிந்தே இருக்க நேரிடுகிறது. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு புருவங்களை இடுக்கிக்கொண்டு ஒரு கை இடுப்பிலும் ஒரு கை பின்னங்கழுத்திலுமாய் அழுந்திக்கொண்டிருக்கிறது. விடைதராமல் வீட்டு ஜன்னல்கள் ஏமாற்றுகிறது. என்றோ கூடிய வீட்டுச்சாவியும் பெரிய பூட்டும் பிரிவுக் கவிதை எழுதி தொங்கவிடுகிறது. கதவுகள் மூடியபடியே இருப்பது பழக்கமாகிறது. என் ரேஷன் சர்க்கரை திருடும் எறும்பு கூட என்னை நின்று பார்த்துவிட்டு அலட்சியமாக கடந்து செல்கிறது. இரவு உறங்கச் செல்லும்போது குற்ற உணர்வுடன் நாள் முடிகிறது. எது இருப்பினும் சரி. வாழ மறப்பதில்லை. ஓட்டம் நிற்கவில்லை.
விடியலின் அந்த முதல் இரண்டு மூன்று நிமிடங்களில் அத்தனை நம்பிக்கை ஒளிர்கிறது. Que Sara Sara! What ever will be will be என்கிற பாடலுடன் மனது விழித்துக்கொள்கிறது. எழுந்து உட்கார்ந்து படுக்கையில் சோம்பல் முறிப்பதில்லை. பரபரவென்று உள்ளங்கை தேய்த்து முகம் துடைத்து பார்க்கும்பொழுது ரேகைகள் தடிமனாக அழுத்தமாக ஆரூடம் சொல்லுகிறது. இன்று நற்செய்தி வந்துவிடும் என்று பிரபஞ்சம் காதோடு ரகசியம் சொல்லிவிட்டு துகள்களாக மறைகிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ஓயாத ஜபமே பல் துலக்குவதின் தாளமாகிறது. மூச்சை கவனித்தபடி குனிந்து நிமிர்ந்து பாதம் தொட்டு தண்டு வளைக்க மெதுமெதுவாக நுரையீரல் விரிவடைந்து கண்களையும் புத்தியையும் மலரச்செய்கிறது.
மீண்டும் மனதிற்குள் தாளம். அடுத்து என்ன அடுத்து என்ன.
பின்னர் அந்த நாளில் ஏற்படும் அத்தனை விஷயங்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயார்படுத்தி சின்ன புன்முறுவலுடன் போர்வாள் தூக்கிபிடித்து, வா…பாத்துக்கலாம் என்று திடகாத்திரமாக உள்ளுக்குளே ஒரு சக்தி எழுந்து நிற்கிறது. இதற்கு யார் காரணம். இந்த உத்வேகத்திற்கு யார் பொறுப்பு.
நான் மேலே கூறிய முதுகுவலி, கழுத்தின் போராட்டம், Stressed and lost என்கிற வாழ்க்கையின் வலிகள் அனைத்துமே part of the process, parcel for the day. சறுக்கல்களே பிரபஞ்சம் கூறிய நற்செய்தி. இன்று சறுக்காமல் நிமிர்ந்திபடியே நின்றிருந்தால் அடி முகவாயை கிழித்திருக்கும். தடுக்கிவிழுந்ததில் என் கைகளின் வலு தெரிந்து விடும். இடறியவனின் எண்ணம் தெளிவாகப் புரிந்து விடும். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். போராட்டம் தான் வாழ்கை. இதை காதலுடன் செய்யும்போது என் போர் நியாயமாகிவிடுகிறது. குருதியின் வீண் மண்ணிற்கு உரமாக மாறுகிறது. வியர்வை விகல்ப்பவாதிகளை தள்ளி நிற்கச்செய்கிறது.
எது எப்படியாக இருப்பினும் சரி…Lets do it.. lets do it என்கிற மந்திரம் கவனக்குவியலை தீட்டி குயிலாய் கிளியாய் குருவியாய் பட்சியாய் என்னுள் வாழ்கிறது. The worst battle is always between you and you. இதில் ஜெயிப்பதும் நீ தோற்ப்பதும் நீ. தோல்விகளை அஸ்திவாரமாக கொண்டவன் தோற்றதேயில்லை. வெற்றியை கண்டுகொள்ளாமல் what next என்று மீண்டும் வாள்தூக்கும் ஒவ்வொருவரும் பீஷ்மர்கள், கர்ணன்ங்கள், ஏகலைவர்கள். மீண்டும் இந்த நம்பிக்கை வார்த்தைகள் எங்கிருந்து உதிக்கிறது. மூளையிலிருந்தா. மனதிலிருந்தா. என்னை சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்தா. எங்கிருந்து?
ஏனோ தெரியவில்லை இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு என் முழங்கால்களின் மீது அதிக காதல் வருகிறது. என்னையும் எனது சுமைகளையும் சுமக்கும் முழங்காலை தடவிக்கொடுக்க தோன்றுகிறது. சுற்றி ஓடும் ரத்தத்தை சீர்படுத்தி வலி மறக்க அழுத்திவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
பார்த்துக்கோ இன்னும் நிறைய நேரம் நிக்கனும், நிறைய தூரம் ஓடனும், அதோ அங்க தூரத்துல தெரியுது பார் ஒரு மலை, அந்த மலை பூரா சேறு, மலக்குவியல், ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் கதவுகள்.
ஏறிடுவல்ல. அந்த கதவை எட்டி உதைச்சு உடைக்கனும். சறுக்கும். நிறைய சறுக்கும். அப்பப்போ வலிச்சா கூட உட்காரமுடியாது.
என்னுடைய உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளைவிட உனக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. உன்னிடம் அமர்ந்து பேசுவதற்கு அதிகம் உள்ளது. மற்ற உறுப்புகளுடன் உட்கார்ந்து பேச ஏதோ ஒரு சுயநல பதிலே கிடைக்கிறது. நீ மட்டும் எதற்கு தியாகியாய் நல்லவளாய் தெரிகிறாய். எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி என்னுடன் பயணம் செல்கிறாயே. இது காதலா?
நான் உன்னை காதலிக்கிறேன் என் அன்பு முழங்காலே. அழகியே. நாம் நிறைய பேச வேண்டும், உன்னை தொட்டுக்கொண்டே யோசித்து எடுக்கும் முடிவுகள் நல்லவையாக இருக்கிறதே, அது எப்படி. உன் மீது கரம்பதித்து முத்திரை வைத்தால் நீ என் முதுகுத்தண்டிற்கு ஏதோ செய்தி அனுப்புகிறாயே. அது என்ன. உள்ளே பெரிதாக ஏதோ ஒன்று உருள்கிறது. கீழ் முதுகில் ஏதோ வெடித்துச்சிதறும் கணம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் நீயா.
நன்றிக்கடனால் நான் நிரம்பியிருக்கிறேன் என் சகி. உனக்கு ஏதாவது செய்யவேண்டுமே. என்ன செய்தினும் அது நீ செய்துகொண்டிருக்கும் உதவிக்கு ஈடாகுமா? பால் கொடுத்த தாயின் முலைகள் உறுமாரி என்னுள் முழங்காலாக மாறியிருக்கிறாயா. எங்கிருந்து வந்தது உனக்கு இத்தனை சக்தி இத்தனை தைரியம். நாய்களை, பேய்களை, பித்தலாட்ட கொலைகாரர்களை எதிர்த்து எப்படி நிற்கிறாய். அதுவும் பெண்ணாய் இருந்து உனக்கு எப்படி இத்தனை போர்குணம்.
நீ எப்படி பெண்ணாக முடியும். நான் ஆண்மகன் தானே. என் மற்ற பகுதிகள், என் குறி என்னுள் இருக்கும் ஆண்மையை நொடிக்கு நொடி நினைவு படுத்திக்கொண்டிருக்க நீ மட்டும் எப்படி பெண்ணாக எனக்கு தெரிகிறாய். எடை சுமப்பதாலா. உனக்கும் கருப்பை உண்டா. கர்பம் தரிப்பாயா. நீ பெற்றெடுக்கும் பிள்ளைகள் தான் வெற்றி தோல்வியா. உறுதியாக இருப்பதால்தான் நீ பெண்ணோ. தகர்ப்பது கடினமானாதால் தான் நீ பெண்ணோ. அல்ல மறுக்க முடியாமல் என்னுடன் இறுதிவரை வருவதால்தானோ. நீ பெண். நிச்சயமாக நீ பெண்தான். சுயோதனனுக்கு தொடையில் இருந்த உயிர் சூர்யனிற்கு முழங்காலில் உள்ளதா.
அங்கே பார் பள்ளத்தாக்கு. எகிறி குதிக்கவேண்டும். குதிப்போமா. தலையால் தரையிறங்கவா . உன்னைவிட சக்தி உள்ளவன் தானே என் மூளை. அவன் முடியாது என்று எச்சரிக்கிறானே. நீ எதுவும் பேசாமல் சிரித்தபடி நிற்கிறாயே. உருண்டு திறண்டு தயாராகிறாயே.
இங்கே பார் எதிரியே காலனே காமனே க்ரோதனே என் முழங்கால்கள் சிரிக்கிறது, சம்மதம் சொல்லிவிட்டது, உன்னை நொறுக்க தயாராகிவிட்டது. என் சுக துக்கங்களை தேக்கிவைத்து சுமக்கும் என் முழங்கால்களே என் வாழ்க்கை கேடயம். அவளே என் காவல் தெய்வம். அவளுடன் சேர்ந்து தரையிறங்கும் போது புழுதி பரக்கும், தரை விரிசல் விடும், புயல் வீசும், மழை பெய்யும்.
வா வா வா என் அன்பிற்கினியாளே பெரியதொரு போர் காத்திருக்கிறது. இன்னும் பெரிய சுமைகள் சுமக்க காத்திருக்கிறது. சக்தியை இன்னும் அதிகம் தேக்கி வைத்துக்கொள்.
தயாரா? சொல். தயாரா…?
உன்னை கோர்த்துக்கொள்கிறேன், நீ எதிர்ப்பார்க்காத நேரத்தில் முத்தம் ஒன்று கொடுத்துக்கொள்கிறேன். கடைசியாக ஒரு முறை தடவிக்கொள்கிறேன், நாம் பேசுவதற்கு இனி நேரம் இருக்காது, பழகி ஒருவரை ஒருவர் ரசித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியாது. ஆனால் நான் உன் மேல் வைத்திருக்கும் காதல் உண்மை. நீ என்னைவிட்டு பிரியவே மாட்டேன் என்று கூறிய சத்தியம் உண்மை. நேரம் நெருங்கிவிட்டது. இரு, நான் கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறேன். நீ பார்த்துக்கொள்வாய் என்கிற நம்பிக்கையுடன்.
என் முதுகுத்தண்டை, மூளையை, உடல் பொருள் ஆவியை, அதில் இருக்கும் வலிகளை, எண்ணங்களை, ஆண்மையை, உலரும் துணி எடுக்கும் பொறுப்பை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கேட்கும் அந்த மூங்கில் செடியை சிதறவிடாமல் பார்த்துக்கொள். இதோ மாத இறுதி வந்துவிட்டது.
1…….2……..3…..குதி!