
எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம் சுப்ரமண்யராஜூ, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதைபடித்தேன்.
உனக்கென்ன
கோவில் குளம் ஆயிரமாயிரம் எனக்கோ
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறந்து
நகக்கணுக்கள்
வலிக்கின்றன
மறக்காமல் வா
நாளையெனும்
அடியே
என்று ஒரு கவிதை கணையாழியில் வந்திருந்ததது. பாலகுமாரன் உடனே அவரைச் சந்தித்துவிடவேண்டும் என்று கடிதம் எழுதினேன். லாயிட்ஸ் ரோடு. ராயப்பேட்டை. உடனே பதில்வந்தது நிவேதிதா என்ற பெண்ணுக்கு. போனேன். அடப்பாவி. இப்படி ஜெயகாந்தன் மாதிரி வந்து நிற்கிறீரே. ஆமாம். அப்போது ஜெயகாந்தன் மாதிரி கட்டுமஸ்தாகவும், அவரைப்போலவே சிகையலங்காரமும் கொண்டிருந்தேன்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பக்கத்துவீட்டில் இருந்து ஒரு அழகிய இளம்பெண் வந்து பாலாவிடம் கொஞ்சம் கொஞ்சிவிட்டு போனது. ம்….பொறாமையாக இருந்தது. என்ன செய்தாவது எழுத்தாளனாகிவிடுவது என்று முடிவு செய்த தருணம் அது. மேன்ஷனுக்கு திரும்பிய கையோடு ஒரு சிறுகதை எழுதி சாவிக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே பிரசுரித்தார் சாவி. அதுக்கு அடுத்த வாரம் தில்லை போய்விட்டேன். அப்புறம் என்ன, பெர்க்மன். அந்தோனியோனி, பெலினி. காஃப்கா, ஜான்ஜெனே, ஆஸ்கார் ஒயில்ட். அதோடு மெட்ராஸ் என் நினைவிலிருந்து மறந்து போயிற்று. இப்போது கடந்த பத்து. இருபது ஆண்டுகளாக திரும்பவும் மெட்ராஸ், திரும்பவும் பாலா, இப்போதைய பாலா ஒரு சித்தபுருஷராக உயர்ந்திருந்தார்.
மனிதனுக்கும் (விலங்குக்கும் இடைப்பட்ட நிலையில் பல மனிதர்களைப் பார்க்கிறோம். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களே ஞானிகள் சித்தர்கள். பாலா அப்படிப்பட்ட சித்த புருஷராக உயர்ந்திருக்கிறார். அவரைப்பற்றி எத்தகையோ கதைகளை சம்பவங்களை நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைத் தொட்டார். துலக்கியது வாழ்க்கை, ஒரே கணம் பார்த்தார். வேறு மனிதனானேன். இப்படி இப்படி.
மேலே மனிதனுக்கும். விலங்கிற்கும் இடைப்பட்ட ஜீவிகளைப் பற்றி சொன்னேன் இல்லையா. அந்தப் பிரிவில் உள்ள பலரும் மெத்தப்படித்தவர்களாக இருப்பதையே காண்கிறேன். ஆச்சரியம் கொள்ளத்தக்க விஷயம் அது. படிப்பு மனிதனை மேன்மைகொள்ளச் செய்யாதா? சமீபத்தில் கூட ஒரு மெத்த படித்தவர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வைத்து என்னிடம் நீங்கள் தேவனைப் பார்த்திருக்கிறீர்களா என்றார். இடம் வலமாக தலையாட்டினேன். அப்படியானால் உங்களை எழுத்தாளர் என்றே சொல்லிக்கொள்ளாதீர் என்றார். படித்தவர்கள் மட்டுமே இப்படி இருப்பதைப் பார்க்கிறேன். படிக்காத ஆள் ஒருவர் கூட இப்படி நடந்து கொண்டதில்லை. இதுவரை. யோசித்தேன். ஒரே காரணம்தான். படிப்பு அதன் கூடவே அகந்தையும் கொண்டு வந்துவிடுகிறது. படிப்பினால் ஏற்படும் மேன்மையை அந்த அகந்தை இல்லாமல் ஆக்கி விடுகிறது.
சமீபத்தில் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் லட்சக்கணக்கான பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார். “பிச்சைக்காரனான இந்தியா பூராவும் சுற்றினேன். திருவண்ணாமலைக்கு வந்தேன். பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன். யோகிராம்சுரத்குமார். பின்னாளில் அவர் ஞானியானார். நான் எழுத்தாளனானேன்.” அதிர்ந்து போனேன். காரணம், அந்த எழுத்தாளனின் வயது 50. அகந்தைத்தான் இப்படியெல்லாம் பேசவைக்கிறது.
பாலாவின் கண்களைப்பார்க்குந்தோறும் ஒரு யோகியைப்பார்ப்பது போல் இருக்கிறது. தாடியினால் அல்ல: அந்த கண்கள். கைகளைத்தொட்டேன். உடனே உள்ளே அதிர்ந்தது. இப்படிப்பட்டவர்களின் பாதம் தொட்டு வணங்குவது என் வழக்கம். அனுமதிகேட்டேன். அதுகூடாது சாரு. நீ எனக்கு சமமானவன் என்றார் பாலா. அதுதான் பாலா. அவன் அடைந்திருக்கும் இடம் எங்கே? நான் எங்கே? இந்த அடக்கம்தான்
சினிமாவில் பாலாவிட்ட இடத்தை இன்னும் நிரப்ப ஆள்இல்லை. (நீங்கள் நல்லவரா? கெட்டவரா?) பரவாயில்லை. சினிமாவினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பாலா என்ற ஒரு சித்த புருஷன்…… இப்படி ஒரு மனிதனை நான் கண்டதில்லை. பாலா, மூத்தவனே, உன் தான் பணிந்து
வணங்குகிறேன்…