Blog

பாலா என்றொரு உயர்ந்த மனிதன் – இந்துமதி

பா லாவை எனக்கு எத்தனை ஆண்டு களாகத் தெரியும்…? ஒன்று, பத்து. இருபது, முப்பது……?? ஊஹூம்…..

நாற்பத்தியோரு ஆண்டுகள்! பாலா எனக்கு அறிமுகமானது 1975ம் ஆண்டு. அப்போது ஆனந்த விகடனில் என் முதல் தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு முற்பகல் வேளையில் பாலாவும், சுப்ரமண்யராஜுவும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள் கணையாழி, கசடதபறவில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

கொல்லையும் வாளியும்

வரளுகின்றன அவளில்லா தனிமையில் என்று பாலாவும்,

நேற்று மணமுடித்த

நேப்பாள கூர்க்காவிற்கு

இன்றுதான் முதற் பகல் என்று ராஜுவும் க வி தை யில் கரைந்து கொண்டிருந்த காலம் அது.

அப்போதே பாலா மிகவும் மென்மையானவன், அன்பானவன், பெண்களை மதிப்பவன், நேசிப்பவன். புடவைக்கு அப்பால் பார்க்கின்ற பார்வை இல்லாதவன், ஒளிவு மறைவற்ற பேச்சே அவன் பலம்; அதுவே அவனது பலவீனமும்

பாலாவின் எழுத்துக்களைப் பற்றி நான் கூறப் போவதே இல்லை. ஏனெனில் அந்த எழுத்துச் சித்தரின் வார்த்தைகளும், வர்ண ஜாலங்களும் அனைவரும் அறிந்த ஒன்றே. பாலா என்ற என் ஆத்மார்த்த நண்பன் பற்றி, அவனது பெரிய மனது பற்றி, ‘சொல்லுடா கண்ணா……… என்ற தேன் தோய்ந்த வார்த்தைகள் பற்றி, கள்ளமற்ற மனது பற்றி, வாழ்க்கைக் கயிற்றின் மீது நடக்கின்ற வித்தையை மிகச் சுலபமாக கற்றுக் கொண்ட விதம் பற்றி மட்டுமே கூற விழைகிறேன். ‘நினைவிருக்கிறதா பாலா……. என்று ஆரம்பித்தால் நிறைய நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் அவனது நிஜமான உயரத்தை. உன்னதத்தை எனக்கு எடுத்துக்காட்டியது.

நான், மற்றொரு சினேகிதன். பாலா மூவரும் நீலாங்கரை பக்கம் ஒரு வீட்டின் விசேஷத்திற்கு ஒன்றாகச் சென்றிருந்தோம். அந்த வீட்டில் என்ன விசேஷம் என்பது ஞாபகமில்லை. போன இடம் நீலாங்கரை என்று தான் நினைக்கிறேன்.

வீட்டிவிருந்த பாலாவை நான்தான் வற்புறுத்தி கூட அழைத்துச் சென்றேன். அவனுடன் பேச வேண்டுமென்றே கூட்டிப் போனேன். கார் அந்த மூன்றாம் நபருடையது ஓட்டியதும் அவன்தான் அந்தவீட்டில் பாலா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது என நினைக்கிறேன். பாலாவை அங்கேயே விட்டுவிட்டு அந்த மூன்றாம் நபர் என்னை மட்டும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

“ஐயோ……. பாலா வரவில்லையே…….” என்று நான் பதற “எல்லாம் அவன் வந்து கொள்வான்…… என்று சிறிது கூட மனசாட்சியற்று சொன்ன அந்த மூன்றாம் மனிதன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

பாலாவை அவ்வாறு விட்டு விட்டு வந்தது என் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது. அந்த மனிதனின் இரக்கமற்ற குணம் எனக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அவனது சுயரூபம் பிடிபட அவனுடன் பழகுவதையே கொஞ்சம் கொஞ் சமாகக் குறைத்து நிறுத்தியும் விட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் இருக்கும்.

அதன் பின்னர் பாலா எவ்வாறு வீடு வந்து சேர்ந்தான் என நான் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை. எனக்குள் மிகப் பெரிய குற்ற உணர்வு. அது ஏற்படுத்திய வலி……. வேதனை…….

ஆனால்,பாலா… இதை எழுதும் இந்த நிமிடம் வரை அது பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. ஒரு கேள்வி கேட்டதில்லை. வேறு யாராக இருந்தாலும் கேட்டிருப்பார்கள். என்மீது சீறிப் பாய்ந்திருப்பார்கள். வீட்டிற்கு வந்ததும் தொலைபேசியில் அழைத்து திட்டியிருப்பார்கள். உன் சங்காத்தமே வேண்டாம் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கூட போயிருப்பார்கள்.

ஆனால் பாலா! இவை எதையுமே செய்யவில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை போல் ‘சொல்லுடா கண்ணா…….! என்றழைத்து மிக மிக சாதாரணமாக என்னிடம் பேசியது. அதை விட சாதாரணமாக எப்போதும் போல் பார்த்தது.

அதுதான் பாலா! பாலாவை நான் சற்று அண்ணாந்து ஆச்சரியமாகத் தான் பாசப்பேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின்இன்னும் தலை நிமிர்ந்து, இன்னமும் அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டான். எனக்குள் அவனது உயரம் கூடிப் போனதை உணர்ந்தேன்.

உன்னை அவ்வாறு விட்டுவிட்டு வந்ததற்காக இன்று நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நண்பனே! இந்த எழுபதாவது வயதில் கேட்கிறேன். இருபது வருடம் கழித்து கேட்கிறேன். இப்போதுதான் கேட்கும் தைரியம் வந்திருக்கிறது. முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. செய்த தவறுகள் எதுவானாலும் பிராயச்சித்தம் தேட மனது விழைகிறது. என்னுடைய எழுபதில் மிகப் பரிசுத்தமாய் நிமிர்ந்து நிற்க நினைக்கிறேன். ஆரம்பமாய் முதலில் உன் மன்னிப்பை கோருகிறேன்.

நண்பனே……. இந்த 70 வருடங்களில் நீ நடந்து வந்த பாதை கற்களும், முட்களும் நிறைந்தது. ஆனாலும் மலை ஏறிவிட்டாய். உன் கொடியை நட்டு பறக்கவிட்டுவிட்டாய். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

உலகில் இரண்டு திருமணங்கள் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். ஆனால், இருமனைவிகளுடன் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால், நீ இருக்கிறாய். ருக்மணி சத்யபாமா தோளில் கைபோட்டு நிற்கும் கிருஷ்ண பரமாத்மா மாதிரி நிற்கிறாய்! அது ஒரு வித்தை. மிகப் பெரிய வித்தை கயிற்றின் மீது நடக்கும் கழைக் கூத்தாடியின் வித்தை! அந்த வித்தையை நீ மிக நன்றாக கற்றுக் கொண்டு விட்டாய். இதற்கு கமலாவின் குழந்தை மனதும், சாந்தாவின் பொறுமையும், அன்பும் கூட காரணம் என்பதை அறிவேன்.

உன் மகன் சூர்யாவின் திருமணத்தை நீ நடத்திய பாங்கு……. ! அதைப் பார்க்க உன் அம்மா இல்லை. பதிலாக நான் இருந்தேன்! இந்த 70ம் ஆண்டு தொடும் உன்னை உன் தாயின் ஸ்தானத்தில் நின்று நான் வாழ்த்துகிறேன்.

மேலும் பல உயரங்களை எட்டவும், முட்டவும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *