
அண்ணன் பாலகுமாரன், தமிழுக்குக் அகிடைத்திருக்கும் தங்கப்புதையல்.
எழுத்துக்களால் சித்தாடத் தெரிந்த சித்தர். எழுத்தாளர்களையே ஏங்கவைக்கும் ஆற்றல் மிக்கவர் அவர்.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவரிடமிருந்து, காவிரியாய்ப் பொங்கிப் பெருக்கெடுக்கிறது தமிழ். அதன் விளைச்சல், லட்சகணக்கான ரசிகர்களின் ஆன்மாவை நிறைத்திருக்கிறது.
அதுதான் அவர் பெற்றிருக்கும் இமாலய வெற்றி.
நல்லதோர் வீணையாய்த் தோன்றிய பாலகுமாரனை, நலம்பட நம் மனதில் தவழவிட்டிருக்கிறாள் தமிழ்த்தாய். அதனால் அவளுக்கும் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.
கவிதை எழுத ஆரம்பித்து, சிறுகதை,நாவல், திரைக்கதை, வசனம் என ருசியான விதிகளில் இவர் நடத்திக்கொண்டிருக்கும் இலக்கியப் பயணம், கைதட்டிப் பாராட்டவேண்டிய கலைப்பயணம். இவரிடமிருந்து என்றோ மலர்ந்த மெர்குரிப்பூக்கள், இன்னும் நமக்குள்வெளிச்சமும் நறுமணமும் பரப்புகிறது. எப்போதோ படைத்த இவரது இரும்புகுதிரை, நம் இதயவீதிகளில் இன்னும் தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி அவர் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றும், உயிர்ப்பான படைப்புகளாய் உலாவருகின்றன.
அறிவியல் தொடங்கி, ஆன்மீகம்வரை இவரால் எப்படி அற்புதமாய் ஆலாபிக்க முடிகிறது? என்கிற ஆனந்த ஆச்சரியம். என்னைப் போன்றவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இது இவர் வாங்கி தந்த வரம். எழுத்தின் மூலம் பலவகைப்பரிமாணம் காட்டிக்கொண்டிருக்கும் அண்ணன் பாலகுமாரன், 1946 ஜீலை 5ந்தேதி பிறந்து, இப்போது 70ஐத்தாண்டுகிறார் என்பது இதயத்திற்கு இனிப்பான செய்தி.
அவர் நூற்றாண்டுகளைக்கடந்து படைப்புகளின் மூலம் நூதனம் செய்யவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். அண்ணன் பாலகுமாரன், என்றென்றும் தன் இதய சுற்றங்களோடு இணைந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.