
1970களில் ஒரு சிகியாடும் புதிய தமிழோடு தமிழ்த் தலைமுறை நவீன உள்ளடக்கங்களோடு வீறுகொண்டு வெளிவந்தது. தங்கள் முன்னோடிகளின் படைப்புகளை உள்வாங்கி அவற்றைத் தாண்ட வேண்டும் என்ற வெறிகொண்ட விருப்பத்தோடு உரைநடையிலும் கவிதையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர அந்தத் தலைமுறை துடித்தது.
விரிந்து கிடந்த வாழ்வும் தொழில்நுட்பத்தால் நவீனப்பட்ட மொழியும் அவர்களின் படைப்புக்குத் துணைபுரிந்தன. அந்தக்கூட்டத்தில் பளீரென்று தோன்றியவர்களுள் ஒருவர் பாலகுமாரன். அந்தக் கூட்டத்திலிருந்து தடம்பதித்துக் கலைந்துபோனவர்கள் பலர். 40 ஆண்டுகளுக்குமேல் நிலைபெற்றவர்கள் சிலர். அப்படி நிலைபெற்றவர்களுள் ஒருவர் என் அன்பு நண்பர் பாலகுமாரன்.
‘பெண்களைப் புரிதல்’ என்ற ஒரே ஒரு சமூக உளவியலை உள்ளடக்கமாகக்கொண்டு அவர் படைத்த பனுவல்கள் பலப்பல. ஆனால், ஒன்றுபோல் இன்னொன்று இல்லை. களம் மட்டும் ஒன்று. அவர் கையாண்ட ஆயுதங்கள் வேறுவேறு. வாசிப்பைவிட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையைச் சட்டை பிடித்து இழுத்து வந்து, ‘உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் ஒருவர் பாலகுமாரன்.
இன்றுவரை அவரிடம் நான் வியப்பது அவரது சலிக்காத உழைப்பைத்தான். மூளைச்சோம்பேறித்தனம் இல்லாத மனிதர் அவர். இயங்கிக்கொண்டே இருப்பவர். தீராத படைப்பாளி. எப்படித்தான் எழுதுகிறாரோ என்று சகாக்களை வியக்கவைப்பார். கதை-நாவல்-கட்டுரை-கவிதை-ஆன்மிகம்-திரை உரையாடல் என்று எல்லாத் துறைகளிலும் தனது பாய்ச்சல் மிகுந்த தமிழ்நடையைப் பயன்படுத்துகிறார்.
சிகரத்திலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி உருண்டோடும் ஆப்பிளைப்போலத் தடையில்லா நடை பாலகுமாரன் தமிழ்நடை. இளமையில் அடங்காத மனதுக்குச் சொந்தக்காரராய்த் திரிந்தார். இன்று மனக் குதிரையை அவரே அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்.
ஒரு சம்பவம். 1975ல் சென்னை வானொலியில் ஒரு கவியரங்கில் கவிதை பாடுவதற்காக இளம்கவிஞர்கள் அழைக்கப்பட்டார்கள். அதி பாலகுமாரன் இருந்தார். நானும் இருந்தேன் அன்று நிகழ்ச்சி அதிகாரியாக இருந்தவ திரு ரங்காச்சார். அறையில் எல்லாருக்கு தேநீர் வழங்கிக்கொண்டே அந்த அதிகா கவியரங்கின் கட்டமைப்பு குறித்து எங்களுக்கு விவரித்துக்கொண்டிருந்தார். கவியரங்கி பொதுத்தலைப்பு என்ன கவிஞர்களுக்கான தனித்தலைப்பு என்ன என்பதையு அவர் குறிப்பிட்டார். அவ்வளவுதான் நாற்காலியைவிட்டுப் படாரென்று எழுந்தார் பாலகுமாரன். “மிஸ்டர் ரங்காச்சார்! கவிதை என்பது தலைப்புக்கு உட்பட்டதல்ல; நானும் தலைப்புக்கு கட்டுப்பட்டவனல்லன்; வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியேறிவிட்டார். அன்று தலைப்பைத் தூக்கியெறிந்து அதே பாலகுமாரன் இன்று விதவிதமான தலைப்புகளில், இலக்கிய வெளிகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
எப்படிப்பட்ட எழுத்தாளனையும் திரையுலகம் என்ற தேவதை வசீகரிக்காமல் விடமாட்டாள். பேனாப்பிடித்த ஒவ்வொருவரையும் திரைப்படத்திற்குப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற வெறி உச்சிமுடியைப் பிடித்து ஒருமுறை ஆட்டாமல் போகாது. பாலகுமாரன் சிகையும் அதில் சிக்குண்டதுதான். ஆனால், படம்பிடித்த இடத்திலும் அவர் தன் தடம்பதித்து வெளிவந்தார்.
பாலசந்தரின் சிந்து பைரவி ரஜினியின் பாட்ஷா – கமல்ஹாசனின் நாயகன் இந்த மூன்று முத்திரைப் படங்கள் போதும் பாலகுமாரனின் திரைப்பங்களிப்புக்கு.
இன்று அவர் பழுத்த எழுத்துச் சித்தராகக் கனிந்து நிற்கிறார். அவருடைய வாசகர் வட்டம் விரிந்திருக்கிறது. அரசியல் – சினிமா என்ற ஆரவாரங்களைத் தாண்டி ஓசையற்ற வாழ்வின் சமவெளியில் அவர் பயணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
என் அருமை நண்பனே ! இன்னும் நீளப்போகும் உன் வாழ்வு நிம்மதியில் நிலைத்திருக்கட்டும். வாழ்வை அசைபோடும் போது உனக்கு ஆனந்த நினைவுகளே எஞ்சியிருக்கட்டும். உன்னை வாசித்து வளர்ந்த ஒரு தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக் கொண்டேயிருப்பேன் உன் வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.