Suryaa's Blog

குருவி வேதம் – சூர்யா பாலகுமாரன்

தடார் என குதித்து இடுப்பு வரை நனைக்கும் நீல நிற வாளியில் விளையாடிக்கொண்டிருக்கையில், பாலாவின் அன்றைய அதி முக்கிய வேலைகளுல் ஒன்று என்னை குளிப்பாட்டுவது.  விரல் வலிக்க எழுதும் பக்கங்களுக்கு நடுவே முளைத்த கூடுதல் பொறுப்பு. 

சோப்பிட்ட இரண்டு வினாடியில் மீண்டும் தண்ணீரில் மூழ்கி, பக்கெட் நெளியும் வரையில் ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஞாயிறு தினங்களில் பிஞ்சு விரல்கள் சுருங்கி தாத்தா விரல்கள் ஆகும்.   சூப்பர் மேன் குளியல், சறுக்கமர குளியல், சுவர் to சுவர்  வழுக்கிச் செல்லும் குளியல், என பட்டியல் நீந்திக்கொண்டே போகும். ஒரு வயது வரை என் குளியல் கதைகள் அனைத்திலும் பாலாவே முக்கிய கதாப்பாத்திரம். 

ஒரு நாள், ஸ்கூலுக்கு செல்லும் முன் போடும் காக்கா குளியலின் போது, சிமெண்ட் கூரையிலுள்ள குருவிக்கூடு ஒன்று  அறுந்து எங்கள் மடியில் விழுந்தது. தூக்கிவாரிப்போட்டு அலறியடித்து எழ, பாலா என்னை சமாதானப்படுத்தினார்.

சிமெண்ட் கூரையின் ஒட்டையை இருவரும் அன்னாந்தபடி பார்த்திருந்தோம். கீச் கீச் கீச் கீச் என சத்தம் தரையில் ஓலமிடத்துவங்க, அதிர்ந்து போனோம். அருகே சென்று கூட்டை விலக்கிப் பார்க்க இன்று பிறந்த இரண்டு குருவிக் குஞ்சுகள் தாயை தேடிக்கொண்டிருந்தது. 

கண்கள் திறக்கவில்லை, ரோமங்கள் முளைக்கவில்லை, சில நேரத்திற்கு முன் பொறிந்து யாருக்காகவோ அஞ்சி, குழந்தைகள் இறையாகி விடக்கூடாது என்று தாயே தள்ளிவிட்டு சென்றது போல் இருந்தது. இது ஒரு நல்ல வீடு, இங்கு மந்திரங்கள் ஒலிக்கும், பெண்கள் உன்னை பார்த்துக்கொள்வார்கள், பிள்ளைகள் உங்களை உயிரென கொஞ்சுவார்கள். இங்கே பத்திரமாக வளரலாம்.  முடிஞ்சா பாப்போம் என்று தாய்க் குருவி தள்ளிவிட்டு சென்றது போல் இருந்தது.

நேற்றைய மிச்ச சோறை இன்னும் குழையச் செய்து அதில் சிறிதளவு பால் ஊற்றி நன்றாக ஆறவைத்து இங்க் ஃபில்லரில் குருவிகளுக்கு பாலா பாலூட்ட ஆரம்பித்தார். நான் எதற்கக்கவோ கூரையை பார்த்தபடியே நின்றிருந்தேன். என்றேனும் வந்து என் குழந்தைகளை திருப்பிக் கொடு என்று தாய்க்குருவி அலப்பறை செய்யுமோ என்று யோசித்துகொண்டிருந்தேன். 

தக்காளி நிற பிளாஸ்டிக் கூடையில் பழைய வேஷ்டியை நாலாக வெட்டி, நன்று மடித்து  குருவிகளை படுக்க வைத்து பாலா அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் எட்டிப்பார்க்க, சூர்யா…மீட் மிஸ்டர் தாமூ…தாமூ திஸ் இஸ் மை சன் சூர்யா என்று ஒரு குருவிக்கு அறிமுகப்படுத்தினார். நான் மற்றொரு குருவியை தேடினேன், சோர்வாக படுத்துக்கிடந்தது. கீச் கீச் இல்லை, ஆனால் உடல் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. வாய் மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

எவ்ளோ சாப்பாடு கொடுத்தும் சாப்பிடல. தாமூவ பாரேன் நல்ல சாப்பிடுது…என்று இங்க் ஃபில்லரை நீட்டினார். தாமூ கவான் கவான் என்று சப்புகொட்டி சாப்பிட்டான். 

அன்று முழுவதும் விளையாடக் கூட  வெளியே செல்லவில்லை. வீட்டிற்கு வந்த வாண்டுகளிடம் இன்னிக்கு நான் என் நியூ ஃப்ரெண்டோட விளையாடப்போறேன் என்று அலட்டிக்கொண்டு குருவிக்குஞ்சுகளையே சுற்றிவந்தேன். அன்றிரவு குருவிக் கூடை அருகே நானும் பாலாவும் அயர்ந்து உறங்கினோம். 

மறு நாள் காலை கீச் கீச் கீச் என்ற குருவிச் சத்ததிற்கு எழுந்து கண் கசக்குகையில், அருகே பாலா கண்களில் லேசான கண்ணீருடன் பிளாஸ்டிக் குடுவையை பார்த்துக்கொண்டிருந்தார். எட்டிப்பார்க்கையில் தாமூ மட்டும் கத்திக்கொண்டிருந்தான். பெயர்வைக்கப்படாத குருவி அமைதியாக இருந்தது. உடம்பில் நடுக்கம் இல்லை, கண்களில் துடிப்பு இல்லை, வாய் சற்று லேசாக திறந்து சிரித்தபடி தலை அண்ணாந்து பார்த்திருந்தது. நான் பாலாவின் தோள்களில் மெல்ல சாய, பாலா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டார். தள்ளி நின்றபடி வீட்டுப்பெண்கள் எங்களை கவனித்து கொண்டிருந்தார்கள். 

இன்னிக்கி ஸ்கூலுக்கு போயே ஆகணுமா என்று என்னைப் பார்த்து கேட்க, அப்படி ஒன்னும் அவசியமில்லை என்று அம்மா சொன்னாள்.  தாமூவிற்கு பால் சோறு ஊட்டிவிட்டு அக்கா மட்டும் அன்று பள்ளிக்குச் சென்றாள். 

இதோ இந்த நித்திய மல்லி செடி இருக்குல்ல, கொஞ்சம் பெரிய பூத்தொட்டி தான அங்கயே புதைச்சிட்றியாப்பா என்று அக்கா ரிக்‌ஷாவில் ஏறுவதற்குமுன் சோகமாக கேட்க, பாலா தலையசைத்தார்.

நித்தியமல்லிச்செடியின் குழி தோண்டும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது. தலையில் ஒரு கர்ச்சீப் கட்டிக்கொண்டு நகக்கணுக்களில் மண்ணும் உரமும்  நன்றாக பதியும் அளவிற்கு சற்று ஆழமாகவே குழி வெட்டினேன். முகத்தில் ஒரு சிறிய கலவரத்துடன் கையில் பெயர் வைக்கபடாத குருவியை பாலா ஏந்திவந்தார்.  இவையனைத்தையும் இங்லீஷ் பேப்பர் படித்தபடி கீழ் வீட்டு ஆசாமி ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். 

என்னது இது நாற்ரது….Mr. பாலகுமாரன் என்ன பண்ணிண்டிருக்கேள். எழுத்தாளர்ன்னா பண்ற அச்சுபிச்சுக்கு ஒரு அளவில்லையா..என்ன கண்றாவி இது? என்று எகிற

பாலா திரும்பி ஒரு பார்வை பார்த்து …டேய் உள்ள போடா என்று அடிக்குரலில் சொன்னார். 

இங்லீஷ் பேப்பர் சட்டென மடிக்கப்பட்டு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது. 

மெல்ல குருவியை குழியிலிட்டு, கண்களை மூடிக்கொண்டார். நான்கைந்து வினாடிகள் கழித்து  மூடிடு சூர்யா என்று சொல்ல, சரிப்பா என்று குழியை மூடினேன். அந்த இடத்தில் ஒரு இனம் புரியாத அமைதி நிலவியது. 

வீட்டிற்கு படியேறிச் செல்லும்போது, பாலாவின் கைகளை அணைத்துக்கொண்டு, ஏன்பா பேரு வைக்கல? பேரு வைச்சிருந்தா பிழைச்சிருக்குமோ என்று கேட்டேன். பாலாவிடமிருந்து பதில் வரவில்லை. 

உள்ள துண்டு வெச்சிட்டேன், வெண்ணீர் ஊத்தியாச்சி. ரெண்டு பேரும் குளிச்சிடுங்க என்று பெரியம்மா சொல்ல, நேராக குளிக்கச்சென்றோம். விளையாட்டு இல்லை, அலம்பல் இல்லை. அன்றைய சோக குளியலின் போது நொடிக்கு ஒரு முறை இருவரும் மாறி மாறி கூரையின் ஓட்டையையே பார்த்துக்கொண்டிருந்தோம். 

சட்டென்று வளர்ந்த குருவி ஒன்று வந்து நின்று எட்டிப்பார்க்க. அப்பா, குருவி… குருவி..என்று நான் கத்த, பாலா அந்த குருவியைப் பார்த்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். என்ன மன்னிச்சிடு குருவி என்ன மன்னிச்சிடு குருவி என்று கண்ணீர் மல்க நின்றார்( பின்னால் இதன் தழுவலாக குணா திரைப்படத்தில் ஒரு காட்சி அரங்கேறியது). அப்பாவை கட்டியனைத்தபடி நானும் மேலே பார்க்க குருவி மீண்டும் கீச் கீச் என்று சொல்லி பறந்து சென்றது. 

தாமூ எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வளர ஆரம்பித்தான். எனக்கு தெரிந்து எந்த வீட்டிலும் குருவி வளர்த்ததாக கேள்விப்பட்டதில்லை. குருவியும் இறக்கை முளைத்ததும் வெளியே  பறந்து  செல்லவும் இல்லை. வீட்டின் உள்ளேயே பீரோவுக்கும் ஃப்ரிட்ஜிற்கும் தாவிக் கொண்டிருக்கும். பல நாட்கள் தாமூவிற்காக ஃபேன் போடாமல் உறங்கியிருக்கிறோம். வெளியே செல்லும்போது  தாமூவிற்கு bye சொல்லிச் செல்லுவோம். அத்தனை அன்யோன்யம்.   தாமூ, இரவு நேரத்தில் ப்ளாஸ்டிக் கூடையில் அண்டிக்கொள்வான், பால் சோறு உண்ணுவான். சட்டையில் கக்கா போவான். பள்ளி முடிந்து வீட்டிற்குள் வர தோளில் உட்காருவான். என் தோளிலிருந்து அக்காவிற்கும், அங்கிருந்து பாலாவின் தலைக்கு செல்வான், அம்மாக்களின் முடி கவ்வி இழுப்பான். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தாமூவுடன் போட்டோ கூட எடுத்துக்கொண்டோம்.

ஒரு நாள் எங்கள் வீட்டின் காலிங் பெல் குருவிக்குரலாய் ஒலித்தது. ஓடிச்சென்று கதவு திறக்க, குருவியும் பின்னால் வந்து தோளில் தாவிக்கொண்டது. வாசலில் பாவாடை சட்டையுடன் இளம் பெண், கொஞ்சம் நாயகன் சரண்யா ஜாடை, இரட்டை ஜடை, பேசும் கண்கள், நெஞ்சோடு அணைத்துக்கொண்ட ஊர் பை. வினோதமான தமிழில்.

நீங்க சூர்யாவா?

உயரம் பார்த்து வெடுக் வெடுக் என்று தலையாட்டினேன். குருவி கீச் கீச் என்றது.

இது யாரு? 

தாமூ.. என்று பெறுமையாக சொல்ல

அப்பா இருக்காரா, என் பேரு ஸ்வர்ணலதா என்று கண்ணம் தடவி அறிமுகம் ஆகிற்று. உள்ளிருந்து பாலா எட்டிப்பார்த்தார்…

ஞாபகம் இருக்கா..ஈரோடு மீட்டிங்க்ல பேசினேன்.

நல்லா ஞாபகம் இருக்கு. சொல்லுங்க ஸ்வர்ணலதா. வீட்டுல எப்படி இருக்காங்க, யாரையோ காதலிக்கிறதா சொன்னீங்கள்ல? இருவரும் சகஜமாக அமர்ந்து கொண்டார்கள். நான் தரையில் தாமூவுடன் விளையாடத் துவங்கினேன். விளையாட்டு தாமூவுடனும் காதுகள் மொத்தமும் ஸ்வர்ணலாதாவிடம் ஒட்டிக்கொண்டது.

ஒத்துவரலைங்க…வீட்டுல தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆயிடுச்சு, காதலும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்னு வீட்டை விட்டு ஓடி நேரா இங்க வந்துட்டேன்.

குருவி திரும்பி ஸ்வர்ணலதாவைப் பார்த்தது, அம்மா சமையல் அறை ஓரம் வந்து நின்று கொண்டாள். அக்கா பாடப்புத்தகம் மூடிவைத்து தண்ணீர் குடிப்பது போல் ஹால் வந்தாள். பாலாவின் முகம் வெளிரிற்று.

ஹாஸ்டல்ல தங்கி கம்ப்யூட்டர் படிக்கப்போறேன். தேடாதீங்க, சென்னைக்கு தான் போறேன். உங்க விலாசமும், ஃபோன் நம்பரும் குடுத்துட்டு தான் வந்துருக்கேன். 

அக்காவிற்கு புரைக்கேறியது. அம்மா புடவை உதறி உள்ளே சென்றாள், இவருக்குன்னு வருதுபாரு என்று முணுமுணுத்துக்கொண்டாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்வர்ணலதாவின் அப்பா ஃபோன் செய்து பாலாவிடம் பத்திரமா பாத்துக்கோங்க என்று சொன்னதாக அம்மாக்கள் பேசிக்கொண்டார்கள்.

எசகுபிசகாக ஆகிவிடக்கூடாது என்று எங்கள் வீடு ஸ்வர்ணலதாவையும் அரவனைத்துக்கொண்டது. பீச், பார்க், பொருட்காட்சி என்று எங்கு குடும்பமாய் சென்றாலும் ஸ்வ்ரணலாதாவையும் அழைத்துக்கொண்டது. ஞாயிறுகளில் தமிழ் படம் எங்களுடன் உட்கார்ந்து பார்க்க அனுமதித்தது. தாமூவும் ஸ்வர்ணலதாவும்  வெகு சீக்கிரமாக எங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்கள். மேலே பாலா எழுதிக்கொண்டிருக்க கீழே ஆட்டம் பாட்டம் என வீடு ரகளையாக மாறியது. அவ்வப்போது பாலாவிடம் மொட்டைமாடியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பும் போது பூட்டிய வீட்டின் படியில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தது.

நினைத்தது போல் மற்றொரு நாள் காலை ஊர் பையை நெஞ்சோடு அணைத்தபடி ஸ்வர்ணலதா கண்களில் கண்ணீருடன் நின்றபடி…

நான் ஊருக்கு கிளம்பறேன் சார். அம்மா ரொம்ப நன்றி, உங்க சாப்பாடும் காஃபியும் அன்பும் காதலும் மறக்கவே முடியாது. 

என்ன ஸ்வர்ணா, திடீர்ன்னு என்று பாலா சட்டை மாட்டிக்கொண்டார்.

இந்த வீடு, உங்க பசங்க,இந்த சிட்டுகுருவி, நீங்க ஒவ்வொருத்தர் மேல வெச்சிருக்குற லவ், எனக்கு என் வீட ஞாபகப் படுத்திட்டே இருக்கு. அதான்..

கம்ப்யூட்டர் படிக்கப்போறேன்னு சொன்னீங்க..

மனசு பூறா அங்க இருக்கு..எப்படி படிக்க முடியும். திருப்பி வருவேன் சார், வீட்டுல சொல்லிட்டு வருவேன் என்று வாசலோடு எனக்கு மட்டும் முத்தம் கொடுத்து கறையும் கண்களை துடைத்து விடை பெற்றுக்கொண்டாள்.  எங்கள் வீட்டின் ஸ்னேகம் ஸ்வர்ணலதாவை மீண்டும் அவள் கூட்டிற்கு பறந்து  போகச் செய்தது. 

அன்று வீட்டில் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். நான் ஒரு போதும் அந்த முடிவுக்கு சம்மதிக்க முடியாது  என்று அடம் பிடித்து அழுது புரண்டேன். அன்றைய இரவு, அழுதுகொண்டிருந்த என்னை பாலா கட்டி அணைத்தபடி காதில் மெல்ல பேசினார்.

சூர்யா பறவையோட வேலை பறக்கறது…பறந்து தான ஆகணும். 

அதுக்கு பறக்க தெரியலன்னா? கீழ விழுந்துடுச்சுன்னா?

அதுக்கு பறக்கிறத தவற வேற எதுவும் தெரியாதுடா கண்ணா..ஒரு வேளை நாம தப்பா வளத்து அதுக்கு பறக்கவே முடியாம போயிடுச்சுன்னா?

இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டுமேப்பா…ப்ளீஸ்ப்பா என்று கட்டி அணைத்து கேட்க..

இல்லை கண்ணு..நளைக்கு காலைல..

ஏன் ப்பா..

சூர்யா…நீ கத்துக்க வேண்டியது என்ன தெரியுமா..அந்த  குருவி கீழ விழுந்திடும்னு நினைச்சிட்டிருக்கல்ல? நாளைக்கு காலைல உன் கையாலேயே அதை வெளில எடுத்திட்டு போ, பால்கனியில நின்னு அதுக்கு உலகத்த காட்டு, வெளிச்சம் அது மேல படறா மாதிரி புடிச்சுக்கோ. உனக்கு எப்போ விடணும்னு தோணுதோ அப்ப விடு. தாமூ விழறானா இல்லை பறக்குறான்னானு பாரு.

மறு நாள் காலை சூரிய வெளிச்சம் வீட்டில் தக தகவென படர்ந்து கொண்டிருந்தது. பல் தேய்த்துவிட்டு தாமூவை எட்டிப்பார்க்க சடக்கென்று தாவி என் தோளில் உட்கார்ந்து கொண்டான். வீட்டில் அனைவரும் ஒன்று கூடினோம்.

நான் தாமூவை கையில் ஏந்தியபடி மெல்ல மெல்ல நடந்து பால்கனிக்கு சென்றேன்.

தாமூ என்னை விசித்திரமாக் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன பண்ண போறீங்க என்று  தலையை ஆட்டி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். என் கைகளின் வெப்பத்துக்குள் அடங்கி சுகம் தேடிக்கொண்டிருந்தான். 

நாங்கள் ஐவரும் பால்கனியில் நின்று கொண்டிருந்தோம். பாலா என்னைப் பார்த்து உனக்கு எப்ப தோனுதோ அப்போ.. என்று சொல்லிவிட்டு தூரமாக பார்வையை செலுத்தினார். 

அக்கா ஒரு முறை கடைசியாக தாமூவின் தலையை வருடினாள். அம்மா அவசர அவசரமாக உள்ளே சென்று இங்க் ஃபில்லர் எடுத்து வந்து வெறும் வயிறா அனுப்ப வேண்டாம் என்று பாலூட்டினாள். 

நான் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டு மெதுவாக என் கைகளை விரிக்கத்துவங்கினேன். சூரியனின் ஒளி விரல் வழியாக தாமூவின் மீது பட்டது.  கண்களை ஒவ்வொன்றாக மெதுவாக திறந்து பார்க்க, தாமூ இப்பொழுது முழுவதுமாக விடுவிக்கப்பட்ட நிலையில் எனது கையில் நின்று கொண்டிருந்தான்.  உடம்பு முழுவதும் படர்ந்த வெப்பத்தால் சிலுப்பிக்கொண்டான். இறக்கைகளை அசைத்து சோம்பல் முறித்துக்கொண்டான். ஒவ்வொருவரையும் பார்த்து கீச் கீச் என்றான். அனைவரின் முகத்திலும் சோகம் கவ்விக்கொண்டிருக்க, விட்டுறு சூர்யா என்று குரல் ஒலித்தது. சட்டென்று கைகளை கவிழ்த்தேன். 

மூன்றாவது மாடி வீடு. முப்பதடி உயரம். தாமூ தலை குப்பற சரிந்தான், சிறகுகள் தாறுமாறாக் படபடத்தது, இடதும் வலதுமாக குழம்பித் துடித்தது.  பூமியின் புவியீர்ப்பு சக்தி புரியாமல் தவித்தது, எதற்கு இந்த இரண்டு இறக்கைகள், இதனால் என்ன உதவி என்று சிந்திக்க முடியாமல் போராடியது.  

அய்யயோ என்று பாலா அலற, பறக்க தெரியவில்லையோ , இங்லீஷ் பேப்பர் ஆசாமி வீட்டு வாசலில் நசுங்கி விழப்போகிறதோ என்று அனைவரும் எட்டிப்பார்க்க இருபத்தி எட்டாவது அடியில் தாமூவிற்கு தன் சக்தி என்னவென்று தெரிந்தது. இறக்கைகளின் அர்த்தம் புரிந்தது. புவியீர்ப்பு சக்தி தனக்கு கால்தூஸு என்று விளங்கியது. சடசடவென இறக்கைகள் சீராகி எதிர்வினையாக காற்றை அழுத்த தாமூ பறக்கத் துவங்கினான். விழுந்து சிதறாமல் மெல்ல மெல்ல எழுந்தான், இருபதடி, முப்பதடி, நாற்பதடி என்று உயரே உயரே சென்றான். பின்னால் காக்கைகள் துறத்தியது…இது யாருடா புதுசா இருக்கு புடி புடி என்று கொக்கரித்து துரத்தியது. தாமூ அவர்களுக்கு ஆட்டம் காட்டிப் பறந்தான். அவன் வேகத்திற்கு காக்கைகளால் பறக்க முடியவில்லை. அவன் நெளிவு சுளிவு வியூகிக்கமுடியவில்லை. தாமூவிற்கு முழுவதுமாக அவன் யார் என்று புரிந்தது. அவன் மேலே மேலே மேலே பறந்து கொண்டிருந்தான்.

பாலா என்னை கட்டிக்கொண்டார். யூ டிட் எ கிரேட் ஜாப் என்று முத்தம் கொடுத்தார். அவரை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டேன். வீடு நிதானமாகியது. குளிக்கும்போது கூரையை பார்த்தபடியே இருந்தேன். வெளியே நட்டு வைத்த நித்திய மல்லிச் செடியை பார்த்தபடியே வளர்ந்தேன். நித்திய மல்லியும் வளர்ந்தது. 

நாற்பதடி பறந்து சென்ற தாமூவும், திருப்பி வருவேன் என்று கூறிச் சென்ற ஸ்வர்ணலதாவும் ஒவ்வொரு நாளும் வருவார்கள் என காத்துக்கொண்டிருந்தேன். குருவியும் வரவில்லை ஸ்வர்ணலதாவும் வரவில்லை. 

இந்த குருவிக்கதை எனக்கு ஒரு வேதமாக பாலாவின் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஒரு இடத்தில் நிம்மதியாக சீட்டு தேய்த்து உழன்று கொண்டிருப்பது தவறு என்று சூசகமாக சொல்லிக்கொடுக்கப்பட்டது. குதி. உயரத்தை பார்க்காதே. ஆழத்தை கவனிக்காதே. முதலில் குதி. விழுறியா இல்லை பறக்கிறியாங்கிறது அப்போ தான் விளங்கும். வேலை,படிப்பு, தொழில் எதுவா இருந்தாலும் முதலில் காலூன்றி இறங்கு, காக்கைகள் துரத்தும், பருந்துகள் பயமுறுத்தும். பயப்படாதே..மேலே பற..மேலே பற மேலே பற… உன் சக்தி  என்னவென்று  அப்பொழுது தான் உனக்கு தெரியும் என்று வேதமாக  குருவி மூலம் சொல்லித்தரப்பட்டது.

இந்த வேதம் அந்த வயதில் புரியவில்லையென்றாலும், முதிர்ச்சியில் வெளியுலகம் பார்க்கும் போது புரிகிறது. எதற்கு இந்த கைகள், எதற்கு இந்த கால்கள், எதற்கு இந்த மனது, எதற்கு இந்த புத்தி, எதற்கு இந்த நேர்மை என்று வேகமாக புரிகிறது.  என்றும் போல் பாலாவின் வார்தைகள் வழி நடத்துகிறது. அதே இருபத்தி எட்டாவது அடியில் இப்போழுது நான் இருக்கிறேன். வியூகங்கள் தயாராக, அணைத்தும் புரிந்தது போல் தோன்றுகிறது. 

இறுதியாக…

தாமூ, நீ நலமாக இருக்கிறாயா… இன்னும் பறந்து கொண்டுதான் இருக்கிறாயா…வயதாகிவிட்டதா…உன் அம்மாவை பார்த்தாயா….இன்னும் காக்கைகள் துரத்துகிறதா…ஒரு உதவி செய்வாயா?  நீ எனக்கு வேதத்தை கற்றுக்கொடுத்தவன், உன்னால் மட்டும் தான் இந்த உதவியை எனக்கு  செய்ய முடியும். தவறாமல் செய்கிறாயா..

என்றேனும் ஒரு நாள் உனக்கு பறக்க கற்றுக்கொடுத்த பாலாவைப் பார்த்தால்…நான் அவரை மிகவும் கேட்டதாகச் சொல். எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள், அவளுக்கு பாலா என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று சொல். நன்றி தாமூ…நன்றி பாலா..

Related Posts

3 thoughts on “குருவி வேதம் – சூர்யா பாலகுமாரன்

  1. B Shivarpana says:

    சகோதரரே,
    உங்கள் தந்தையுடனான, அனுபவங்கள் உங்களுக்கு மிகவும்
    ப்ரெஷியஸாக ஆக இருக்கும். என் போன்ற அவர் வாசகர்களுக்கும் அப்படித்தான். முடிந்தபோதெல்லாம் முடிந்தவற்றையெல்லாம் பகிருங்கள் – ஸ்பாஞ்ஜ் போல் உரிஞ்சிக்
    கொள்ளக் காத்திருக்கிறோம்.

    1. admin says:

      கண்டிப்பாக சகோதரி!

      https://www.facebook.com/watch/1380805035483537/244410413973151/

      இது உங்களை இன்னும் சந்தோஷம் படுத்தும்!

  2. B Shivarpana says:

    Have made a few careless mistakes and typos in my last comment. good that its still not published
    and is awaiting moderation. Kindly take this corrected version for moderation instead of that
    உங்கள் தந்தையுடனான அனுபவங்கள் உங்களுக்கு மிகவும்
    ப்ரெஷியஸாக இருக்கும். என் போன்ற அவர் வாசகர்களுக்கும் அப்படித்தான். முடிந்தபோதெல்லாம் முடிந்தவற்றையெல்லாம் பகிருங்கள் – ஸ்பாஞ்ஜ் போல் உறிஞ்சிக்
    கொள்ளக் காத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *