Suryaa's Blog

எங்கள் காதல் ஒரு தினுசு – அத் 2

சென்னை ராயப்பேட்டையில் சுவாஸித்திருந்த காலம். சிறிய வீடுதான், ஆனால் ஹாலில் படுத்துறங்கும் சௌகர்யம். பொதுவாகவே எல்லோர் வீட்டின்  மொட்டைமாடிகள் அழகாகவே இருக்கும். எங்கள் பழைய வீட்டின் மொட்டை மாடி இன்னும் கூடுதல் அழகு. அளவில் பெரியது ஆனால் சிறுவர்கள் விளையாடியது இல்லை.  வற்றல் காயவைத்து, நிலாச்சோறு உண்டு, துணிகள் உலர்த்தி, செடிகள் வைத்து, பூக்கள் பூத்து, பல கதைகள் கவிதைகள் பார்த்த சிமெண்ட் தரை மொட்டை மாடி. மழைக்கு பயந்து ஒரு ஜோடி ஸ்கூல் யூனிஃபார்ம் எப்போதும் காய்ந்து கொண்டிருக்கும்.  அதற்கு செல்லும் வழியில் ஒரு அழகான balcony. அதில்  தங்கம் வைரம் கருப்பு என மின்னும் தொட்டி மீன்கள்.  வாசலில் எப்போதுமே விதவிதமான  பல பெண் செருப்புகள். சிகரெட் நெடி, காஃபி வாசனை, கடவுள் மணம், கர்னாடக இசை. இதுதான் என் வீடு. 

காரணமே இல்லாமல் என்னை சுற்றி இருக்கும் அத்தனை ஜீவ ராசிகளும் என் மேல் காதலைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்த நேரம் அது.  ஒரு வயது வரை குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பிரத்யேக செல்லம் கொடுக்கும் படலம் எனக்கு பார்டரில் ஊசலாடிக் கொண்டிருந்த காலம்.  சரியாக 6 வயது இருக்கும். இன்னும் ஒரு  வருடம் தாண்டினால் வெள்ளந்தியான அந்த சிரிப்பு பறிபோகிவிடும். கள்ளத்தனம் முகத்தில் அப்பட்டமாக ஒட்டிக்கொள்ளும்.

சொல்லிவைத்தபடி  என் முகத்திலேயே மிக அழகான அந்த இரண்டு முன்னம்பற்கள் மெதுவடை கடிக்கும்போது உடைந்து போனது. ஒன்று வடையுடன் உள்ளே செல்ல மற்றொன்று மட்டும் கையில் மூன்றாம் பிறையாய் அகப்பட்டது.  அதை  மொட்டைமாடியின் பூத்தொட்டியில் புதைத்து, கோணலாக முளைத்துவிடக்கூடாது என்று வெளிச்சத்திடம் வேண்டிக்கொண்டிருந்த போது என் வீடு எனக்கு தெரியாமல் ஒரு முடிவு எடுத்தது. 

கௌரி ரொம்ப நல்லா பாடறா அவளை பாட்டு கிளாஸ்ல சேக்கனும். கூடவே சூர்யாவையும் சேக்கனும். 

எனக்கு அடிவயிறு புரண்டு நெஞ்சில் இடி இடித்தது.  நான் மட்டுமே எனது குரலை கமலஹாசனின் குரலாக நினைத்துக்கொண்டிருந்ததை என் வீடு எப்படி மோப்பம் பிடித்தது என்று தெரியவில்லை. 

என்னைத்தவிற என் வீட்டில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சத்தமாக பாடிக்கொண்டே இருந்தார்கள். குளிக்கும்போது மட்டுமில்லாமல், பூஜை அறை,  ஹால், சமையலறை என்று எல்லா நேரமும் இசை ராகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். சில சமயம் குளியலறைக்கும் சமயலறைக்கும் எசப்பாட்டு வேறு நடக்கும். ஒரு வரி குளியலறையிருந்து சோப்பிட்டுக்கொண்டே, அடுத்த வரி வத்தல் குழம்பில் உப்பிட்டுக்கொண்டே என்று களைகட்டும். தெரிந்தோ தெரியாமலோ சங்கீதம் என் உடன் வளர்ந்த ஒன்றாக இருந்தது. மனதுக்குள்ளேயே முணுமுணுத்துப் பாடிக்கொண்டிருந்த என் குரல் எங்கிருந்து வெளியில் கேட்டதோ தெரியவில்லை, பாட்டு கிளாஸ்வரை விஷமம் நீண்டது. 

அக்காவிற்கு மிக அழகான குரல், புதிதாக யார் வீட்டுக்கு வந்தாலும் கமகத்துடன் கணீரென்று பாடி அசத்தும் ஆற்றல் அதீதமாக இருந்தது. உச்ச ஸ்தாயியில் பின்னிப் பெடலெடுத்து கேட்பவர் கண்கள் கலங்கும் வகையில் வரையில் அவள் குரலில் உண்மை இருந்தது. என்னுடைய ஆறு வயது கீச்சுக்குரல் என்றுமே அவளுடன் ஒரு இலவச இணைப்பாகவே ஒட்டிக்கொண்டிருந்தது. 

கர்னாடக சங்கீதம் எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. ஒன்று வேறு மொழியாக இருந்தது. அல்லது ஒரே வரியை, சில சமயம் ஒரே வார்த்தையை இழுத்து இழுத்து மறுபடி மறுபடி பாடிக்கொண்டிருந்தது அயர்ச்சியாக இருந்தது. சரி அடுத்த வரி என்ன, எதுக்கு இவ்வளோ தடவ, ஏன் இப்படி ஏத்தி இறக்கி என்று காண்டாக யோசித்துக்கொண்டிருந்த போது, தயிர்சாதத்துடன் கத்திரிக்காயை மறைத்து கொடுப்பது போல்  என்னை அறியாமல் இசை எனக்குள் திணிக்கப்பட்டது. சரி, இசை இருக்கட்டும். காதலுக்கு வருவோம்.

சுப்புலக்‌ஷ்மி என்கிற ஒரு பாட்டு டீச்சர். 

வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கும் சங்கீத பரம்பரை. வீட்டில் நாமம் இட்டு, தலப்பாகை இட்டு, வீனையுடன், மிருதங்கத்துடன், வயலினுடன் என்று பல படங்கள் ஃப்ரேமிட்டு மாட்டப்பட்டிருந்தன. நடுவே மிக அழகான  ஒரு சரஸ்வதி படம். பெரிய ஓவியர் வரைந்தது என்று அக்கா கைகாட்ட, அந்த கண்கள் பேசியது, உட்கார்ந்து கொண்டு வீனை பிடித்திருக்கும் விதம், கால் விரல்கள், கை விரல்கள் தத்ரூபமாக இருந்தது. சரஸ்வதி படத்தின் மீததிருந்த கவனம் “வாங்கோ” என்று ஒலித்த ஒற்றை வார்த்தையில் சிதைந்து போனது. குரல் வந்த திசை நோக்கி திரும்பிப் பார்க்க..

சுலபமாக 6 அடி உயரம், அப்படி ஒரு வெள்ளை,  சரஸ்வதியின் கண்கள் பொய் என்பதாய் விளங்கியது இவள் கண்களின் மை. அடர்த்தியான கூந்தல், துல்லியமான நேர்க்கோடு வகிடு, மெல்லிய உதடு, கூர்மையான மூக்கு, மூக்கின் வலது புரத்தில் அழகான ஒரு மூக்குத்தி மச்சம்,  கவர்மண்ட் ஆஃபீஸ் காட்டன் புடவை, சற்று காய்ந்த மல்லிகைப் பூ. கொச்சைத் தமிழ் கொஞ்சும்  தெலுங்கர் வீடு. சங்கீதம் அந்த வீட்டின் சுவரில், மிதியடியில், கூரையில், தரையில், தாழ்ப்பாளில்  தவழ்ந்து கொண்டிருந்தது.

முதல் இரண்டு நாட்கள் வினாயகர் கிளிஷே பாடல்கள் சொல்லிக்கொடுக்க கௌரிக்கு சட்டென்று இசை, தாளம், கமகம் என்று பிடிபட்டு விட்டது. நான் கத்திய காட்டுகத்தலில் தெலுங்கர் வீடு என்னை சற்று கோவத்துடனே பார்க்கத்துவங்கியது. அந்த டீச்சர் தவிர வீட்டில் எவரின் முகத்திலும் உயிர்ப்பு இல்லை. அத்தனை அழகான குரல் கொண்டு  பாடும்போது காதில் மிஷினை அழுத்தி வைத்துக்கொள்ளும் நிலைமை அம்மாவிற்கு. சர்க்கரை நோய் கால் புண் தந்தை. அரை நிக்கர், கைவைத்த பனியன், அழுக்கு பூணூல் சிடுசிடுக்கும் அண்ணன். அங்கு சகலமும் அவள் தான் என்று அவளின் நடை, உடை, பாவனை, குரல் சற்று சத்தமாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. 

நிஜமாகவே பாடவராது என்பதைத் தாண்டி. அழகானவர்களுக்கு முன் அசிங்கப்படப்போவதைப் பற்றிய கவலை வேறு எனக்கு தொத்திக்கொண்டது. இருப்பினும் பொருமையாக பாடம் துவங்கியது. வனிதாமனி பாடிய எனக்கு வரவீனா ம்ருதுபாணி வரவில்லை. ஏனோ ஒட்டிக்கொள்ளவில்லை. கண்கள் மட்டும் மூக்கின் மீது இருந்த மச்சத்தை விட்டு அகலவே இல்லை. மூன்றாவது நாள் மெதுவாக இசை பிடிபட்டது. ஸ்வரம்,ஸாகித்தியம் கமகம் என்று தெளிவு பிறந்தது. எங்கு ஏன் கூட்டவேண்டும். எந்த வரியில் எப்படி கூட்டினால் எவன் கண்ணீர் விட்டு அழுவான் என்று தெரிந்து போனது. பாடல் எழுதியவனின் காதல் மெல்ல புரிந்தது.   நான் பாடத் துவங்க அடுத்த அறையில் இருந்த அக்கா எழுந்து வந்து அவளும் சேர்ந்து கொள்ள, இருவரும் அசத்தலாக பாடி முடிக்க எனக்கு மட்டும் கன்னம் தடவி “அழகா பாடறே” என்று சொன்னதில் பாடியவனின் காதல் எனக்கும் பற்றிக்கொண்டது. வீட்டு மனிதர்களைத் தாண்டி நான் அடிக்கடி சுப்புலக்‌ஷ்மி டீச்சரை நினைக்கும்படி ஆனது.

ஒரு நாள் அக்காவிற்கு உடம்பு சரியில்லை. நீ மட்டும் எப்படி தனியா போவே என்று பயந்து கொண்டிருந்த வீட்டிற்கு தைரியம் சொல்லி நான் மட்டும் தனியாக கிளாஸிற்கு கிளம்பினேன். அந்த வயதில் நான் போட்ட மனக்கணக்கு எனக்கு இன்றைக்கும் ஆச்சர்யம் வரவைக்கிறது.  நடக்கும் வழியெல்லாம் அப்படி ஒரு குதூகலம். 

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்….வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன் என்று மனதிற்குள் காக்கிச்சட்டை சினிமா பாடல் ஒலிக்கத்துவங்கியது. 

சந்து திரும்பி சுப்புலக்‌ஷ்மி டீச்சர் வீடு கண்ணில் படும்போது – ஆசைப்பூந்தோட்டமே பேசும் பூவே வானம் தாலாட்டுதே வா… என்று காதல் முற்றி முடி கோதி நடக்க வைத்தது. 

கேட் திறந்து உள்ளே நடக்க மைவிழி, பைங்கிளி, மன்னவன் பூங்கொடி மார்பிலே…. என்று நடந்து சென்று கதவு தட்ட இசைக்கதவுகள் ராகமாய் திறந்தது. 

இதுவே முதல் முறை. சுப்புலக்‌ஷ்மி டீச்சரே கதவு திறந்தார். ஆச்சர்யத்துடன்  நான் நிற்க, டீச்சரின் கவனம் எனக்கு பின்னால் சென்றது. 

அக்கா வரல? 

இல்லை …உடம்பு சரியில்லை.

சரி ..நீ உள்ள வா என்று உள்ளே செல்ல எப்போதுமே ஜொலிக்கும் கண்கள் சற்று மங்கலாக இருப்பதை கவனிக்க முடிந்தது. 

வீடு அமைதியாக இருந்தது. விளக்குகள் எரியவில்லை. ஜன்னல் வழியே இரண்டு மூன்று கீறலாக ஒளி அடர்த்தியாக பரவியிருந்தது.  வீட்டில் யாரும் இல்லை. சத்தகமான தெலுங்கில் பேசிக்கொண்டிருக்கும் அண்ணன் இல்லை. சோகமே உருவாய் இருக்கும் காது மிஷின் அம்மா இல்லை. கணுக்கால் சொறிந்து கொண்டிருக்கும் நானா இல்லை. எனக்குள் குதித்துக்கொண்டிருந்த இதயம் இன்னும் சந்தோஷமாய் டீச்சரை நெருங்கி நகர்ந்தபடி உள்ளே வந்து அமர்ந்தேன். அலையடித்து ஓய்ந்தது போல் வீடு சிதறிக் கிடந்தது. நடுக்கூடத்தில் பாட்டு கிளாஸ் நடக்கும் இடத்தில் அந்த அழகு சரஸ்வதிப் படம் கீழே விழுந்து கண்ணாடி நொறுங்கிக் கிடந்தது.  மடித்து வைத்த துணி மணிகள் சரிந்து கிடந்தன. புத்தகங்கள் தூக்கி எறியப்படிருந்தன. ஒரு சில பக்கங்கள் விசிறி எறிந்தது போல் மூலைக்கொன்றாய் காற்றில் நழுவிக்கொண்டிருந்தது.  முக்கியமாக ஒரு ஸ்ருதி பாக்ஸ். வாய் கிழிந்து மரம் உடைந்து ஓரமாக படுத்துக் கிடந்தது. மற்றவை பெரிய தாக்கம் ஏற்படுத்த வில்லை ஆனால் அந்த ஸ்ருதி பாக்ஸ் எதனாலோ எனக்கு பெரிய வலி ஏற்படுத்தியது. இசை கொஞ்சும் வீட்டில் அந்த ஸ்ருதி பாக்ஸ் ஒரு கௌரவத்தின் அடையாளமாக இருந்து வந்தது. இன்று இல்லை. காற்றடைந்த அந்த பெட்டியை தூக்கி வீசி எட்டி உதைத்திருக்க வேண்டும். யார் செய்திருப்பார்? அண்ணனா? முட்டாள். ஏன் இப்படி செய்தான்? இவள் மீது கோவமா. அழகாக இருப்பதினால் வந்த கோபமா. தனியாக சம்பாதித்து வீட்டை தூக்கி நிறுத்தும் பெண்மையின் மீது ஏற்பட்ட கர்வமா. 

சிதறிக்கிடந்த வீட்டை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி திரும்ப சுப்புலக்‌ஷ்மி டீச்சர் பின்னால் நின்று கொண்டிருந்தாள். ஜன்னல் வெளிச்சத்தில் இப்பொழுது கன்னத்தில் பதிந்திருந்த கைரேகைகள் தெளிவாய்த் தெரிந்தன. உதட்டோரம் நீலமாக மாறிய ரத்தக்கசிவு தெரிந்தது.  நான் கவனித்ததை உணர்ந்தவள், சட்டன்று புடவையால் முகம் துடைத்துக்கொண்டு கீழே இருந்தவைகளை அகற்றினாள்.  கண்ணாடி உடைந்த சரஸ்வதி படத்தை எடுத்து ஜன்னல் அருகே வைத்தாள். கண்ணாடித்துண்டுகளை முறத்தால் அள்ளினாள். புடவைகள் சோபாவின் மேல் திணிக்கப்பட்டது. புத்தகங்கள் அனைத்தையும் கையால் ஓரமாக தள்ளியதில் தூசு கிளம்பியது. இரண்டாக இருந்த ஸ்ருதிபாக்ஸை பார்த்த நொடியில் சுப்புலக்‌ஷ்மி டீச்சர் உடைந்து அழுதாள். அதை எடுத்து  தடவிக்கொடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு  தரையில் உட்கார்ந்தாள். பாகங்களை சரி செய்து பொருத்தினாள். அவளின் சைகையில் கோவம் இருந்தது. பட்டன் திருப்பி, மரம் அழுத்தி உள்ளே சென்ற காற்று வினாடிகளில் அழுத்தம் ஏற்பட்டு சுழன்று  நாதமாக வெளிவர சுப்புலக்‌ஷ்மி அள்ளி முடிந்து கொண்டாள். மூக்குறிஞ்சியபடி கண்களை மூடிக்கொண்டாள். விம்மலுடன் ஸ்ருதி பிரிக்கத்துவங்கினாள். கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. வீடு முழுவதும் ஸ்ருதிபாக்ஸின் ஒலி நிரம்பியது.  ஒரு ‌க்‌ஷணம் என்னைப்பார்த்து உட்காரும்படி சைகை செய்ய நான் எதிரே சம்மனமிட்டு உட்கார்ந்தேன். உள்ளே நடுங்கிற்று.

கண்கள் மூடியபடி இருந்த  சுப்புலக்‌ஷ்மியின்  எண்ணக்கோடுகள் அவள் நெற்றியில் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. 

இன்னிக்கி புது பாட்டு சொல்லித்தறேன். பாடுறத முதல்ல கவனி. அப்பறம் நீ பாடலாம் என்று கூற என் கவனம் கூர்மையானது. ஆனாலும் அவளின் கண்களில் வழிந்த நீர் மூக்குத்தி மச்சத்தில் அணைகட்டி நிரம்பியதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். 

அரையிருட்டு வெளிச்சத்தில் அவள் தேவதையாகவே தெரிந்தாள். அவள் கண்களில் நீர் வழிய ஒரு பாடல் அங்கு துவங்கியது. வெள்ளை முகம் கண்கள் மூடி வேறு ஒரு நிலைக்கு சென்றது. அது கிறக்கமா, காதலா, சோகமா, வலியா, அவஸ்தையா  என்று தெரிவதற்குள் நான் பாடலில் தொலையத்துவங்கினேன்.

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே 

எனக்கு பாடல் வரிகள் முதல் முறையாக புரிந்தது. தெரிந்த மொழியில் காதுக்குள் இசை நுழைய நான் மேலும் குழைந்து போனேன்.  

உன் ஆனந்த மோகன வேணுகானமதில் அலை பாயுதே என்று சரசரவென இறங்க, அந்தப்பாடல் என்னை ஆட்டிப்படைக்கப்போகிறது என்பது தெளிவாகியது. யார் பாடியிருந்தாலும் மறந்திருக்கும். கண்களில் கண்ணீருடன் அழகான சுப்புலக்‌ஷ்மி பாடியது மறக்க முடியாமல் போனது. என்ன பிரச்சினையாக இருக்கும். வீட்டில் யாரும் இல்லையே, தனியாக இருக்கிறாயே, நீ விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையா இது?

தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…. என்று  பாடுகிறாயே நான் என்ன செய்ய வேண்டும் உன் கைகளை பிடித்துக்கொள்ள வேண்டுமா உன்னை தலையோடு அணைத்துக்கொள்ள வேண்டுமா. நான் உன்னை மகிழ்த்த வேண்டுமா…என்னால் அது முடியுமா..உன் அண்ணன் அறைந்து இழுத்த புண்ணிற்கு தோளோடு அணைத்துக்கொண்டு மருந்து தடவி விடட்டுமா என்று ஆறு வயது புத்திக்கு யோசிக்க தெரிந்திருக்குமா என்ன?

இல்லை. மாறாக அரண்டு போய் மிரட்ச்சியாய் நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தது. 

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ? என்று பாடல் உச்சம் தொட சுப்புலக்‌ஷ்மி வெடித்து சிதறினாள். ஸ்ருதிபாக்ஸ் மீண்டும் பறந்தது. சுவரில் மோதி இரண்டாய் உடைந்தது. இனி அதை யாராலும் சரி செய்ய முடியாத அளவிற்கு உடைந்து போனது.  தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். தெலுங்கில் தனக்குத்தானே ஏதோ பெரிதாக பேசிக்கொண்டாள். எனக்கு அப்பொழுது அந்த பாஷை சுத்தமாக புரியவில்லை. அவளுக்கு ஏற்பட்ட வலி அன்று எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. அது எதுவாக இருக்கும் என்று எனக்கு யூகிக்கவும் முடியவில்லை. வலிப்பது தெரிகிறது. எதற்கு இத்தனை வலி, அதன் ஆழம் எனக்கு புரியவில்லை. 

சுப்புலக்‌ஷ்மி எழுந்து கண்கள் துடைத்துக்கொண்டாள். இப்போது என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நான் இன்னும் அங்கு தான் இருக்கிறேன் என்பது அவளுக்கு வினோதமாகவே இருந்தது. மெதுவாக நிலை திரும்பினாள்.  எனக்கு முகம் தடவிக் கொடுத்தாள். நான் வேணும்னா பாடட்டா என்று கேட்டதற்கு மெல்லிதாக சிரித்தாள். வேண்டாம் நீ நாளைக்கு பாடு என்று கூறினாள். இன்னிக்கி போதும். நீ கிளம்பலாம் என்றாள்.

நான் எழுந்து வாசற்படி நோக்கி நடந்தேன். அந்த வலி, அந்த பாடலின் வரிகள், அந்த கண்ணீர், ஜன்னல் ஒளியில் கண்கள் மூடி பாடிய சுப்புலக்‌ஷ்மி ஃப்ளாஷாக வந்து போனது. இன்றுவரை வந்து போவதும் உண்டு. கதவு திறந்து கிளம்பும் போது சுப்புலக்‌ஷ்மியை பார்த்துகொண்டிருந்தேன். கதவு மெதுவாக தானாக சார்த்திக்கொண்டது. சுப்புலக்‌ஷ்மி தரையில் உட்கார்ந்தபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. 

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு

என்கிற வரி. அந்தப்பாடலின் கடைசி வரி. அதே ஸ்ருதியில் என்னுள் ஓடியது. சுப்புலக்‌ஷ்மியும் கடைசி வினாடி என்னைப் பார்த்தாள். கதவு சார்த்திக்கொண்டது. 

அலைபாயுதே கண்ணா…என்கிற பாடல் என் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு பாடலாக மாறியது. இனி யார் என்னை சந்தோஷப்படுத்தினாலும் சோகமாக்கினாலும் ஆனந்தக்கூத்தாடினாலும் அழுது புரண்டாலும் என் மனதில் அந்த பாடலே ஒலிக்கும் என்பது தெள்ளத்தெளிவாகியது.

வீட்டிற்கு வந்த பிறகும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.  தாளம் தட்டிய கைக்கும் தொடைக்கும் நடுவே நானும் எனது 6 வயது மனதும் சிக்கிகொண்டது.  எல்லா நேரமும் அதே நினைப்பு, அதே பாடல். அந்த பிம்பம் அகலவேயில்லை. இனி அகலப்போவதுமில்லை. பள்ளிக்கூடம், விளையாடும் நேரம், டீ.வி பார்க்கும் நேரம், நடக்கும் போது, கதவுக்கிடுக்கில் சுண்டுவிரல் மாட்டிக்கொண்டபோது, துணிக் கடையில் முகத்தில் மெல்லிய புடவை படரும் போது, சத்தமான சாலையில் பயணிக்கும்போது. குறிப்பாக எந்த ஒரு பெண்ணும் அழும்போது  எனக்கு அலைபாயுதே பாடல் தான் நினைவுக்கு வந்தது.

இன்றுவரை அதுவே எனக்கு BGM. ஒரு பெண்ணைப் பார்க்கும் பரவசத்தில்  அனைவருக்கும் ஒரு இசை ஒலிப்பது வழக்கம்.  லட்சோபலட்ச பேர்களுக்கு இளையராஜா, பலருக்கு ARR. எனக்கு ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் எழுதிய சுப்புலக்‌ஷ்மி டீச்சர் பாடிய அலைபாயுதே..

அடுத்த நாள் என்ன நடந்திருக்கும் என்று ஆவலாக பாட்டு கிளாஸ் கிளம்பினேன். ஒழுங்காக உடுத்திக்கொண்டேன். தலை வாரிக்கொண்டேன். எதுக்கும் கவலை படாதீங்க டீச்சர். உங்களுக்கு நான் இருக்கேன் என்று சொல்ல வேண்டும் என்கிற முடிவுடன் கிளம்பினேன். அக்காவும் என்னுடன் சேர்ந்து கொள்ள நான் வேகமாக முன்னால் நடந்து சென்றேன். சந்து திரும்பினேன். சுப்புலக்‌ஷ்மியின் கேட் வாசலுக்கு வந்து நின்றேன். 

வீடு பூட்டிக்கிடந்தது.

பல நாட்கள் ஆகியும் அந்த வீடு இன்னும் திறக்கப்படவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *