அத்தியாயம் 1
இதை ஓர் அளவிற்கு சுமாராக புரிந்து கொள்வதற்குள் 40 வயதாகிவிட்டது. இன்னும் பல சமயங்களில் நடு காட்டில் நிற்பது போல் தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரிடமிருந்தும் வெவ்வேறு அனுபவங்களை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதிலும் சிலவை செவிட்டில் அடித்து பாடம் கற்பித்து செல்கிறது. சிலது காயத்தை தடவிக்கொடுத்து முத்தமிட்டு செல்கிறது. விட்டால் போதும் என்று சில சமயம் ஓட்டமும் எடுக்கிறது. மிக அழகானவை மட்டும் உட்காரவைத்து பேசி புரியவைத்து புரிந்தும் கொள்கிறது. Love is a time consuming process. இங்கே பார்த்தவுடன் வருவது,முதல் நொடியில் வருவது எல்லாம் வயசோ, வினையோ அல்லது எழரை சனியோ செய்யும் கோளாறு தான். ஆனால் இத்தகைய சந்திப்புகள் சில சமயம் ஒரு நல்ல அடித்தளமாக மாறுவதும் உண்டு. சில சமயம்.
ஆனால் முக்கால்வாசி நேரம் அது வாரிசுருட்டி ஒரு மூலையிலே உட்காரவைத்துவிடுகிறது. நகரமுடியாமல், நிக்க முடியாமல் தவிக்க விடுகிறது. சரி என்று சொல்லிவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று குழம்பித் தவிக்கிறது. இல்லை என்று சொன்னால் உடைந்து சிதறுகிறது. இதற்கு நடுவே இருக்கும் அந்த காத்திருப்பு காலத்தை மட்டுமே எல்லோரும் விரும்புகிறோம். அந்த காத்திருப்பு காலமே ஒரு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொஞ்சம் யோசிச்சு சொல்றேன், எங்க வீட்ல எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல, எனக்கு கொஞ்சம் டைம் வேணும் போன்ற வாக்கியங்கள் நேரத்தை உரிஞ்சும் vampireகள். பலருக்கு இதுவே வெண்பனிக் காலமாக ஒரு மாயயை உருவகப் படுத்துகிறது. நண்பனிடம் சென்று பெருமையாக பேசுவதற்கு தோதாகிறது. பதில் வரும்வரை ஒரு பரபரப்பு, தவிப்பு, எப்பவுமே பின்னந்தலையில் கைவத்திருக்கும் நிலை பிடித்துப்போகிறது.காத்திருப்பின் போது அந்தப் பெண் இன்னும் அழகாக தென்படுகிறாள். அவளின் சின்ன சிரிப்பு இன்னும் ஏதோ செய்கிறது. கரிசனம் பரவசம் ஏற்படுத்துகிறது. நண்பர்களை விட்டு கூப்பிட்டு ஹாய் சொல்லும்போது உள்ளுக்குளே ஏதேதோ செய்கிறது. சாதாரண பார்வை கூட மயக்கம் தருகிறது. இதுவே காதல் என்று நம்பி தென்னகத்து ஹீரோக்களாக நாம் மரத்தை சுற்றுவது வழக்கமாகி விட்டது.
எட்ட நின்று பார்க்க காதல் மிகவும் சுலபமாக தெரியும். இந்த படம் இந்த பாட்டு என்று பிரித்து கோடிட்டு சுட்டிக்காட்டி உள்ளுக்குள் நுழைந்து விடலாம். ஆனால் உள்ளே செல்லச் செல்ல காதல் அத்தனை சுலபம் அல்ல என்பது புரியவரும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் காதலுக்கு இதுதான் விதி முறை என்கிற formula இன்று வரை இல்லையே. யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லையே. ஆழம் புரியவில்லையே. இதோ கண்டுபிடித்துவிட்டோம் என்று பறைகூறும் appகளும் gramகளும் வேறு விஷ(ம)யங்களுக்காகத் தானே பயண்படுகிறது. இரண்டாவது கேள்வியே A/S/L என்று கேட்கும்படியாகிறதே. Appகள் உதவி செய்வது இல்லை, இது முன்னேற்றமும் இல்லை. இதனால் நாம் இன்னும் தள்ளிப்போகிறோம். Human emotionsகளிலிருந்து விட்டுப்போகிறோம்.
இவை அனைத்தையும் தாண்டிதான் நாம் இன்னும் காதலித்துக்கொண்டு இருக்கிறோம். அதைவிட்டு ஒடி ஒளிந்து கொண்டாலும் ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு வடிவில் உருமாறி நம்மை வந்து தாக்குகிறது. நேரம் காலம் தெரியாமல் வாழ்கையில் சட்டென்று முன்னே வந்து நிற்கிறது. எல்லாத்தையும் விட்டுவிட்டு வேலைதான் பிரதானம் என்று காலூன்றி நிற்கும் போது சம்பந்தமே இல்லாமல் திசை திருப்புகிறது. வேலையே இல்லாமல் திரியும் பொறுப்பற்ற காலத்திலும் பாரமாக வந்துவிடுகிறது. காலேஜ், டியூஷன், கோச்சிங்க் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸை தாண்டி மால், கல்யாண வீடு, டிராஃபிக் சிக்னல் என்கிற momentary madnessக்குள் காதல் வந்துவிட்டது. காவியமாக பெரிய பெரிய காப்பிலக்கியமாக விளங்கிய காதல் கதைகள் இப்போது குறும்படம் போல் ஆகிவிட்டது. வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறது. பிரிவை நோக்கியே பயனிக்கிறது.
முக்கால்வாசி கதைகள் காவியங்களாகவும் மரணக்காப்பியங்களாக மாறுவதும் பிரிவின் அழுத்தம் பொருட்டே. அழுத்ததை தாங்கிக்கொண்டவர்கள் அதை அழகாக பொத்திவைத்து உள்ளுக்குள்ளே மனதோரத்தில் ஒரு மண் மேடு எழுப்பி சிற்பம் வைத்து அலை அடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அழுத்தம் தாங்காமல் கைகள் தளரவிடும்போது அடச்சே இதுக்கு போயி இப்படி பண்ணிக்கிட்டானேபா என்று மற்றவர்கள் வாயில் அலட்சியப்பொருள் ஆகிறார்கள். அலையடித்து சுழலில் சிக்கிக்கொள்கிறார்கள். காதலின் முடிவு என்பது மிகவும் பெர்ஸனலான ஒரு விஷயம். அதை அழகாக வருடங்கள் கடந்து கவிதையாகவோ, படைப்பாகாவோ, டைரியின் கடைசி பக்கமாகவோ atleast அடுத்த தலைமுறைக்கு சொல்லும் குட்டிக் கதையாகவோ மாறவேண்டும். பேப்பரின் தலைப்புச் செய்தியில் வருவது உசிதம் அல்ல.
கார்த்திக்கும் சுனிதாவும் சந்தோஷமாக காதலிக்கத்துவங்கினார்கள் என்று பேப்பரில் செய்தி வருவதில்லை. 7 வருடம்கழித்து கார்த்திக்கும் சுனிதாவும் பேசியபடி கைகுலுக்கிகொண்டு பிரிந்து விட்டார்கள் என்று வருவதில்லை. சாமானியர்களின் காதல் கதைகள் இதில் பொருந்தாது. வேண்டுமென்றால் FB ல் போட்டுக்கொள்ளலாம். ஆனால் இதை ஒரு செய்தியாக மாற்றுவது ஒரு self sympathyக்கான விஷயமாகவே பார்க்க முடிகிறது. மனதோரத்தில் வாழும் அந்த மண்மேட்டு கோயிலே அழகு. நமக்கு மட்டும் புரியும் கவிதையும், டைரியின் கடைசிபக்க கிழிந்த பேப்பருமே memories. இது புரியவேண்டும்.
என்னிடம் கிழிந்த பேப்பர் டைரிகள் ஏறாளமாக இருக்கிறது, ஸ்கூல் யூனிபார்ம் பட்டன்கள் இருக்கின்றன, அதிசயமாக ஒரு மூக்கு கண்ணாடி இருக்கிறது,மோதிரங்கள் இருக்கின்றன, புகைப்படங்கள் இருக்கின்றன, கண்ணாடி Ashtray ஒன்று இருக்கிறது. மிக அழகான மண்மேட்டு கோயிலும், சிற்பமும் இருக்கிறது. அதை உங்களுடன் பகிரவேண்டும் என்று இதை எழுதத் துவங்குகிறேன்.
நான் பேச நினைப்பது என்னுடைய காதல்(கள்) பற்றி மட்டும் அல்ல. எனக்கு தெரிந்த, கவர்ந்த, நான் முக்கியப் புள்ளியாக விளங்கிய காதல் கதைகளும் இதில் அடங்கும். என்னை மாற்றியது என்னுடைய காதல் கதைகள் மட்டும் அல்ல, மற்றவர்களின் காதலும் எனக்கு பல விதமான பாடங்களை கற்றுத் தந்துளது. ஆகையால் என்னை சுற்றி இருக்கும் காதல்களைப் பற்றியும் அலசப்போகிறேன். இதை ஒரு ஆராய்ச்சியாக கையில் எடுத்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது. Disection of Love and emotion.
காதல் பெர்ஸனலான விஷயம்ன்னு சொல்லிட்டீங்க அப்பறம் ஏன் எழுதணும், எதுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும், எதுக்கு கத்தியால கீறி நெஞ்சை பொளந்து பாக்கணும். ஊர்ல என்னன்னமோ பிரச்சனை இருக்கு, போயும் போயும் இந்த அசிங்கம் ஏன் என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான்.
நம் ஊரில் காதலின்மை அதிகமாகிவிட்டது. பொறுமையற்று அலைபவர்கள் அதிகமாகி விட்டதாக தோன்றுகிறது. காத்திருப்பின்றி மற்றவர்கள் மீது எங்கிருந்தோ ஒரு காழ்புணர்ச்சி, கோவம், சண்டை, கால் இடறிவிடும் கர்வம், ஆஸிட் அடிக்கும் க்ரூரம், தண்டவாளங்களில் முடியும் பைத்தியக்காரத்தனம் அதிகமாகி விட்டது. நாம் காதலிக்க மறந்து விட்டோம். சில சமயம் மறக்கும்படி தள்ளப்படுகிறோம். வேறு எவர் பேச்சை கேட்டோ, அறிந்தோ influence ஆகிறோம். காதல் என்பது self taught, அதில் இருக்கும் கோவமான முடிவு என்றும் influenced தான்.
பல காதல் கதைகளைக் கொண்ட இந்த கட்டுறை சமுதாயத்தை சீர்ப்படுத்த என்று பெருமை பீற்றிக்கொள்ளாமல். எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பவனுக்கு, புதைகுழி என்று நினைத்து மாட்டிக்கொண்டிருப்பவனுக்கு உதவும். லாம். இது அரட்டை அல்ல. அவசியம். அக்கறை.
இதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு என்கிற கேள்விக்கு என் கதைகளும் அனுபவங்களுமே பதில். படித்துவிட்டு ஜட்ஜ் செய்யவும். காதல் கதைகள் கேட்பதற்கோ சொல்வதற்கோ வயது ஒரு தகுதியாக இருக்கக்கூடாது. Love is universal, அதை யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.
அனைத்தையும் தாண்டி இதை நான் எனக்காகவும் எழுதுகிறேன். என் வாழ்கையை நான் கடந்து வந்த பாதையை, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மீண்டும் ஒரு முறை அலசிப்பார்க்கிறேன். அலமாரியில் யாருக்கும் எட்டாத இடத்தில் இருக்கும் பெட்டியை திறந்து அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் வருடிப்பார்க்கப்போகிறேன். எனக்குள்ளே இருக்கும் அந்த பாழடைந்த மண்மேட்டு கோயிலை திறந்து தூசு தட்டிப்பார்க்கப்போகிறேன். யாருக்கு உதவுகிறதோ இல்லையோ. என்னை இன்னும் மனிதனாக மாற்றுவதற்கு உதவும்.
அது என்ன பேர் ஒரு தினுசாக இருக்கிறது. கொஞ்சம் அப்படி இப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் அவசியம். தயவு செய்து வாரம் ஒரு முறை விநாயகர் அகவல் படிப்பது போல் படித்து விடவும். உங்களின் எண்ணச்சீரழிவை சலவை செய்வதற்கான பிரத்தியேக முயற்சிதான் இது. 40 வயதிலும் குழப்பமாக சில சமயம் நிற்கும் போது மிகவும் அவசியமான தெளிவாக இது இருக்க உதவும்.
லவ் பண்ணிட்டா லவ் கதை எழுதிடலாமா, அது மட்டும் போதுமா. போதாதுதான். என்னைப் போல் இங்கு யாரும் காதலிப்பதில்லையே என்கிற ஏக்கமாகவும் இருக்கலாம். 90 களில் இருந்த அந்த அழகிய காதல் கதைகள் இன்று உருமாறி இருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. கதை ஒன்று தான். ஆனால் சந்திக்கும் களம் சிந்திக்கும் முறை வேறாக மாறியிருக்கிறது. அதைப் பற்றியும் பேசவேண்டும்.
சரி எங்கிருந்து துவங்கலாம்? ம்ம்ம்ம்…..
ஆஹா, கரெக்ட்..சூப்பர்…அங்கிருந்தே துவங்கி விடுகிறேன். இதைவிட அழகான துவக்கம் இருக்க முடியாது. இங்கிருந்து ஆரம்பிப்பதே சரி.
எனக்கு அப்போது ஆறு வயது.