
பாலகுமார்’ என்று அறிமுகப் படுத்தப்பட்ட முகத்தை மட்டும் தான் ‘பா’ முதலில் பரிட்சயப்படுத்திக் கொண்டேன். என்னவென்ன செய்கிறார் என்று தெரியும். TAFEல் பணி புரிந்து கொண்டே எழுதவும் செய்தார். நபரை மட்டுமே முதலில் பரிட்சயமானதால் வியப்பின்றி Inferiority com plex ஏதும் இன்றி நட்பு மலர்ந்தது. பாலகுமாருக்கும் நட்பு நன்றாக வரும் என்பதற்கு இவருடன் கூட வந்து அறிமுகமான சுப்ரமணிய ராஜூ என்பவரே அத்தாட்சியாக விளங்கினார். கதை கேட்பவன் என்பதால் என்னிடம் நிறைய கதைகள் சொன்னார்கள். பதிலுக்கு நானும் கதை சொல்ல. வியந்தார்கள்
எங்கே எழுதியதை காட்டுங்கள் என்றார்கள். எழுத்து வடிவில் இல்லை எல்லாம் எண்ணத்தில் தான் என்ற என்னை உரிமையுடன் கடிந்த அப்புது நண்பர்கள் இருவரும், ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்று வற்புறுத்தினர். பின் அன்புடன் பணித்தனர். ரகசியமாக சுப்பிரமணிய ராஜுடம் மட்டும் நான் எழுதத் தயங்கும் காரணத்தைச் சொன்னேன். ‘எழுத்து இலக்கணப் பிழைகள் நிறைய இருப்பதாய் என் நண்பரும் உடன்பிறவா அண்ணனுமான ஆர்.சி.சக்தி சொல்கிறார். எனது அண்ணியார் திருமதி கோமளவல்லி சாருஹாசனும் அதை வழி மொழிகிறார். விட்டோடு இருக்கட்டுமே என் அவமானம், அம்பலப்படுத்தவும் வேண்டுமா? என்று மனம் திறந்தேன்.
“அட நீங்க வேற… பாலகுமார் தமிழ் ஆசிரியர் மகன். ஒரு பிசகில்லாமல் திறுத்தித் தருவார்” என்றார். வேண்டாம் ராஜு இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம். முட்டைக் கண் செறுக என்னை ஏளனமாய்ப் பார்ப்பார் உங்கள் பாலகுமார் என்றேன்.
சிரித்தபடி ரகசியம் காத்தார் சுப்ரமணியராஜு என் பிசகேதும் பாலகுமாருக்குப் புலப்படாமல் இருக்க முதல் சிறுகதையை என் அண்ணியாரிடம் திருத்தக் கொடுத்து. இரு எழுத்தாள நண்பர்களுக்கும் படிக்கத் தந்தேன். கதையை இருவரும்சிலாகித்தனர். ‘கையெழுத்தும் நன்னா இருக்கு” என்றார் பாலகுமார். அது என் மூத்த அண்ணியாருடையது என்று பாதி உண்மையைச் சொன்னேன். கையெழுத்தைப் பாராட்டி ஆரம்பித்தவர், கொஞ்ச நாளில் என் மன்னியைத் தானும் மன்னி என்று அழைக்கலானார். என் அண்ணியாரின் கையெழுத்துப் போக காப்பி, சமையலும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.சுப்ரமணிய ராஜு காத்த ரகசியம் அம்பலமானது. பிறகு கவிதை கதை என்று என் கையெழுத்திலேயே காட்ட ஆரம்பித்து விட்டேன்.
பாலகுமாரை விட ராஜுக்கு கனிவு அதிகம். ‘Content தான் முக்கியம், கையெழுத்தும் இலக்கணமும் கைப்பழக்கம் தான். நாப் பழகி செந்தமிழ் வந்துடுத்தே, எழுத்து வராமல் போகுமா?’ என்று தைரியம் சொன்னார். பாலகுமார் கருணையேதும் இல்லாமல் தொடர்ந்து இலக்கணம் சொன்னார். எந்த அளவுக்கு என்றால், பிற்பாடு பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரைகளில் ‘க்’ விட்டுப் போனதை புத்தக வெளியீட்டு மேடையிலேயே நான் சுட்டிக்காட்டும் தைக்யம் வருமளவிற்கு
என் நெருங்கிய நண்பர்கள் பலரும் நல்லாசா ளாகவும் இருமுகம்கொண்டதால் என் தமிழும் வாழ்வும் தொழிலும் மேம்பட்டதே உண்மை. மாறுபட்ட கருத்துகளுடன் தர்க்கித்த போதிலும் மத்யஸ்தத்திற்கு சுப்ரமணிய ராஜுவும் என் நாத்திகம் பேசும் சகோதரரும் ஆத்திகத்தில் மூழ்கிய அண்ணியும் இருந்ததால் பாலகுமாருடன் சண்டையின்றி நட்பு வலுத்தது. வாக்குவாதம் தொடர்ந்தது. இன்றும் வெற்றி தோல்வியே குறிக்கோளில்லாமல் வெட்கமின்றி நியாயத்தை ஏற்கும் மனோபலத்துடன் வாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு போல நேர்முகத் தர்க்கங்கள் குறைந்தாலும் தூரத்து இடி முழுக்கமாய் ஒருவர் குரல் மற்றொருவருக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எங்கள் இருவரின் மனைவிமார்களும் கனிவுடன் இந்த நட்பு தொடர உதவியும், அனுமதித்தும் இருக்கிறார்கள். “மெர்குரி வெளிச்சத்தில் முட்டி முட்டி பால் குடிக்கும் விட்டில் பூச்சி” என்று பாலகுமார் தன் கவிதை ஒன்றை எல்டாம்ஸ் சாலை வீட்டுத் திண்ணையில் அறங்கேற்றி வைப்பார்.
பதிலுக்கு சுப்ரமணிய ராஜு
“ஒண்டுக் குடித்தனக்
கூட்டுக் குடும்பி
கண்டு பிடித்தது
ரப்பர் வளையல்”
என்று சிலிர்க்க வைப்பார். உடனே நானும்,
பெய்யெனப் பெய்யுமா மழை? மழைக்குமெனில் சொல் உன் தாயிடம் நாடு நனையட்டும்”
என என் பங்காய் முன் வைப்பேன். பல எழுத்தாளர்களை ஒருவருக்கொருவர் பரிந்துரைப்போம். வாதப்பிரதி வாதங்கள், எங்கள் புருவங்களை மட்டுமல்ல சிந்தனைகளையும் உயர்த்தியது. வியப்பில், புரிதலில் அகல விரிந்தது எங்கள் கண்கள் மட்டுமல்ல உலகும் தான். கண்ணில் நீர் வர சிரித்த சந்தோஷங்கள் கண்ணே வரளும் வரை அழுத சோகங்கள் எத்தனையோ! நந்தனம் சிக்னலில் பச்சை விளக்குக்காய் காத்திருந்த எங்கள் சுப்ரமணிய ராஜு என்கிற விஸ்வநாதனைப் பல்லவன் பேருந்து ஒன்று கண்மண் தெரியாமல், ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற மரியாதையில்லாமல் தரையோடு மசித்து, கம்பளமாய்ச் சுருட்டிப் போட்டுச் சென்ற கோரத்தை அதிகமாய் அழாமல் சேதியாய் சொன்ன பாலகுமார் இன்றும் என் கண்முன்.
சாலை விபத்துகள் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் மரணச்சேதி சொன்ன பாலாவும் மறைந்த நண்பர் ராஜுவும் மனதில் தோன்றி மறைவர்.
அன்று பாலாவும் நானும் மிச்சம் விடாமல் அழுது தீர்த்திருந்தால் எங்கள் எழுத்துக்களில் தென்படும் சோகமும் வன்முறையும் குறைந்திருக்குமோ என்னமோ! இந்த சம்பவத்தினால் சுப்ரமணியராஜு என்ற பெயர் கேட்டதுமே எஞ்சிய சோகம் நெஞ்சை அழுத்தும். இந்த பெயருக்கும் சோகத்திற்கும் உள்ள தொடர்பை மாற்றவே மைக்கேல் மதன காமராஜன் என்ற நகைச்சுவைப் படத்தில் ஒரு பாத்திரத்திற்கு சுப்ரமணிய ராஜு என்று பெயரிட்டு சிரிப்புடன் அப்பெயரை தொடர்பு படுத்தினேன். சுப்ரமணியராஜுவின் நினைவாக சிறுகதைப் புத்தகம் ஒன்றை பாலகுமார் முன்னின்று வெளியிட்ட போது விழாக்கூட்டத்தின் ஓரத்தில் நின்றிருந்த புருவம் நரைத்த பெரியவரைக் காட்டி பாலகுமார் காதில் சொன்னார். “அவர் தான் அடிக்கடி போற்றிப் பாடும் லா.சா. ராமாமிர்தம்” என்று. நாம் பார்த்து வியந்து விமர்சித்து பின் விவரம் புரிந்து பணிவு கற்ற பெரியவர்கள் பட்டியல் நீளமானது.
இன்று கிட்டத்தட்ட பாலகுமாரின் புருவங்களே லாசாரா வெண்மையை நெறுங்கிக் கொண்டிருக்கிறது. பாலகுமார் போன்ற அயராத இளம் எழுத்தாளருக்கு வயது எவ்வளவு பெரிய இடைஞ்சல் பாருங்கள். சுப்ரமணிய ராஜு என்கிற விஸ்வநாதன் இன்று இருந்திருந்தால் நானும் அவரும் சேர்ந்து எங்கள் பாலாவை ஆகவாசப்படுத்தி இருப்போம். “வயது வெறும் நம்பர் தான், Speedometer இல்ல, வேகத்தைக் குறைக்காதீங்க” என்று. ராஜு இல்லாததால் நான் மட்டும் அதைச் சொல்ல விடுக்கப்பட்டேன்.
“பாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்”